“அப்போ என் பெண்டாட்டியை அசிங்கப் படுத்துனது...”
“எவண்டா இவன்... நீயும் பிள்ளையார் அம்மா, ‘வடிவத்தை’ ஒன்ன பேயா பிடிச்சு ஆட்டுறதா, ஊர் முழுக்க தமுக்கடி! பிள்ளையார் கேட்டால், அவனை மரத்துல கட்டி வைக்கோம்!”
“அந்தப் பேயி காலாவதி ஆயிருக்குமே...”
“எந்தப் பயமவன் விசிலடிச்சு குறுக்கே பேசுறது... கட்டி வச்சு, தோலை உரிச்சுடுவேன்.நான் சொல்றத நல்லாக் கேளுங்கடா... மரகதம் வெளியூர்ல வாழப்போற பொண்ணு! அவள் தம்பியப்பத்தி மட்டும் கலியாணத்தில் யாரும் மூச்சு விடப்படாது! இதேமாதிரி முத்துக்குமாருக்கு, முப்பது வயசே முடியலே... இனிமேல்தான் கொலை போடப்போற வாழை... அவன்தான் சீதாலட்சுமியைக் கொலை செய்தான்னு எந்தப் பயலும் போலீசுக்கு மொட்டைப் பெட்டிஷன் போடப்படாது!"
இருதரப்பும், கப்சிப் ஆனது. பிள்ளையார் பேச்சற்றார். முத்துக்குமார் மூச்சற்றான். ராமசாமிக் கிழவர், வெள்ளை முலாம் பூசப்பட்டது போன்ற இரும்புப் பற்கள் தெரிய குதர்க்கமாகக் கள்ளச் சிரிப்பாய் சிரித்தார். இப்படி பஞ்சாயத்து பேசி எத்தனை வருடமாச்சு...!
கலையப்போன கூட்டத்தைக் கண்டிப்புப் பார்வையோடு பார்த்து, அவர் மற்றொரு தீர்ப்பையும் வழங்கினார்.
“இந்த சுயம்பு பயலை கூப்பிடுங்கடா... முட்டாப்பய மவனுக்கு பேரு வச்சதே நான். அவனை சபையில வெச்சு ரெண்டு வார்த்தையாவது பேசிக் கண்டிக்கணும்...”
எல்லோரும் கண்போட்டுத் தேடினார்கள். சுயம்பு இல்லை.
-----------------
தொடரும்...