திருத்தமாய் சவாலிட்டார்.
“எங்களுல யாரையாவது தொட்டுப் பாரு பார்க்கலாம்...!”
பூவம்மா ஆகாயத்தைப் பார்த்து கை தழுவிக் கும்பிட்டாள்.
“குத்துப்பழி வெட்டுப் பழி வரப்போவுதே.என் சின்னத் தம்பி பெண்டாட்டி, அந்த பூனக்கண்ணி, கோள் சொன்னதை, நான் சொன்னதா நினைக்காளே! மாரியாத்தா! நீ உண்மையச் சொல்லுடி! இல்லாட்டா. நீயும் பொய்யி! இந்த வேப்பிலைக் கொத்தும் பொய்யி...!”
பிள்ளையாரின் தம்பி பெண்டாட்டியும், பூனைக் கண்ணியுமான ருக்மணி அப்படிப்பட்ட பட்டத்தைக் கொடுத்த தன் பெரிய்யா மகன் பெண்டாட்டி பூவம்மாவை விளாசித் தள்ளினாள்.
“எவடி பூனைக்கண்ணி! கோள் சொல்லிச் சொல்லியே குடியக் கெடுப்பாளே. என் மச்சானும், மச்சான் பெண்டாட்டியும் ஆகாதுதான். ஆனால் சுயம்பு, நான் இடுப்புல எடுத்து வளர்த்த பிள்ளையடி. முழுத்த ஆம்புளப்பயல லேசா மூளை குழம்பியிருக்கான்னு அந்த சாக்குல என் பிள்ளய இப்படி ஆக்கலாமாடி! பாவி! நீயும் வேட்டிகட்டி, கிராப் வச்சு, சட்டை போடுற காலம் வரும்டி வராட்டா நான் ஒருத்தனுக்கு முந்தாணி விரிச்சவள் இல்லடி!”
இதற்குள், பொம்பளைகள் பேசக்கூடாது என்று ஆம்பளைகள் கத்தினார்கள். கூட்டம் லேசாய் அடங்கிய போது, அப்போது ‘செத்துப்போன’ சீதாலட்சுமிக்கும், கல்யாணத்திற்குப் பிறகே, வயிறு ஒடுங்கிப் போன பேச்சியம்மாவிற்கும், தாலிகள் போட்ட முத்துக்குமார் திமிறித் திமிறிப் பேசினான்.
“என் பெண்டாட்டி சீதாலட்சுமிய அவமானப் படுத்துனதுக்கு பிள்ளையார் மாமா, இங்கேயே பதில் சொல்லணும்! இல்லாட்டா அவர நகர விடமாட்டேன்!”
“அட விடுடே... கிராமத்துப் பழக்கம். இப்படிச் செய்தாலாவது மகனுக்கு புத்தி தெளியாதான்னு பெத்தவங்களுக்கு ஒரு ஆசைதான். விட்டுத்தள்ளுப்பா!”
“சரி, விடுடே... இந்தக் காலத்துலயும், வெள்ளையம்மா பாட்டியும் வாழத்தானே செய்யுறாக,