சுயம்பு, அந்தப் பூவரசுப் பக்கமாகப் போனான். இதற்குள் துணிமணிகளை உடம்பு முழுவதும் பாம்புப் பிடாரி மாதிரி போட்டிருந்த எளியவளான சூரியா, சந்திராவை அதட்டினாள். முப்பது வயதுக்காரி.... பண்ணைச் சேவகம்.
“எம்மாளு சந்திரா. நீ செய்யுறது ஒனக்கே அடுக்காது! அவன் நட்டுக் கழண்டு நிக்கான். இப்படியா ஒருத்தனக் கேவலப்படுத்தறது. பழுத்த ஓலை விழும் போது பச்சை ஓலை சிரிச்சுதாம்...”
“இவனும். இவன் குடும்பமும் சேர்ந்து எங்க அண்ணி ஏதோ இவனை ஆட்டிப் பிடிச்சு புடவை கேக்குறான்னு கேவலப்படுத்தலாமா... இதுமட்டும் ஒனக்கு உறைக்காக்கும். உனக்கு இஷ்டமில்லன்னா யார் நிக்கச் சொன்னது... போயேன்...”
“போகாம ஒன் வீட்டுக்கா வரப்போறேன்...!”
அந்த எளியவள் ஓட்டமும் நடையுமாய் ஊரைப் பார்த்துப் போனாள். இதற்குள், சுயம்பு ‘பாவாடையும் ஜம்பருமாய்’ அந்த எஞ்சிய பெண்கள் முன்னால் வந்து நின்றான். சந்திரா அவனிடமிருந்து புடவையை வாங்கி, அதை எப்படிக் கட்ட வேண்டுமென்று சொல்லப் போனாள். இதற்குள் பக்கத்தில் நின்றவள் சுயம்புவைப் பார்த்துப் பயந்துவிட்டாள். இந்த சந்திராவிற்கும் ஒரு அதிர்ச்சி. ஒருவேளை அண்ணியே இவனைப் பிடித்திருப்பாளோ என்ற சந்தேகம். ஆனாலும் அவளுக்கு இதில் நம்பிக்கை இல்லை. எவனோ, ஒருத்தனைக் காதலித்து அந்தப் பேச்சு வீட்டில் அடிபட்டபோது, ‘அவனைப் பார்த்திருந்தால், என் கண்ணு குருடாப் போயிடும்’னு கூசாமல் பொய் சொல்லி யாரும் கேட்காமலே கற்பூரத்தை ஏற்றி அணைத்தவள் இந்த சந்திரா. கற்பூரம்தான் அணைந்ததே தவிர, இவளோ, இவள் காதலோ அணையவில்லை. இதனாலேயே, இவள் நாத்திகவாதி ஆகி விட்டவள்.
சுயம்பு, அவசரம் தாங்க முடியாமல் புடவையை நீட்டினான். அவள் அதை வாங்கிக்கொண்டே, உடம்பில் சுற்றவிட்டாள்.
“இந்தா பாரு சுயம்பு. சேலைல இந்த முனையை இப்படிப் பிரிச்சு தொப்புளுக்கு மேல சொருகணும்... அப்புறம் இந்த மாதிரி புடவைய வலது பக்கமா இடுப்பச் சுற்றி ரெண்டு தடவ