பாட்டி மண்டையப் போடுறது வரைக்கும் இந்த மாதிரி தீட்டுக் கழிக்கறதும் இருக்கத்தான் செய்யும்!”
“ஏய் பேராண்டி! நேத்து என்கிட்ட திருநீறு வாங்கி நெத்தியில் பூசிக்கிட்டு, சீட்டு விளையாடி ஜெயிச்சத மறந்துடாதடா... நான் மண்டையப் போட்டால், ஒனக்கு ‘வெட்டுச்சீட்டே’ கிடைக்காதுடா...”
கூட்டம் லேசாய் சிரித்தது. ஆறுமுகப் பாண்டியும், அவன் மனைவி கோமளமும், மரகதம் பக்கம் போய் அவளை நாயே பேயே என்று திட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் முத்துக்குமார்தான் விட்டுக் கொடுக்கவில்லை.
“எம் பெண்டாட்டிய கேவலப்படுத்துணவங்கள நான் கேவலப்படுத்தாமல் விடமாட்டேன்!”
பிள்ளையாரால் பேசாமலிருக்க முடியவில்லை.
“பெண்டாட்டிமேல ரொம்பத்தான் ஆசை வச்சிருக்கே... அதனாலதான் அவள் சுடுகாட்டுக்குப் போன மறுமாசமே சந்நியாசி ஆயிட்டே!”
“ஏய் பிள்ளையாரு மாமா! இப்படிப் பேசுனா உம்மீது நான் கை வைக்கவேண்டியது வரும்!”
“ஏல... நீ ஒரு அப்பனுக்குப் பிறந்தவன்னா எங்க அண்ணன் மேல கை வச்சுப் பாரு!”
புல்லுக்கட்டைத் தலையில் வைத்துக்கொண்டு, மனைவி சொன்ன விவரங்களைக் கேட்டுக்கொண்டிருந்த பிள்ளையார் தம்பி சண்முகம், அந்தக் கட்டை கீழே போட்டுவிட்டு தார்ப்பாய்ந்தார். அவரது மனைவி பூனைக்கண்ணி பிறந்ததும் முத்துக்குமார் குடும்பம் என்பதால், பாதிப்பேர் சும்மா இருந்தார்கள். மீதிப்பேர் யோசித்தார்கள். இதற்குள் உள்ளூர் அரசியல்வாதிகளான ஓரம் கட்டப்பட்ட, ஊர்க்கிழடுகள் தங்களது பொற் காலத்தை மீண்டும் நிலைநாட்டப் பார்த்தன. அவர்கள் சார்பில், எண்பது வயது ராமசாமி பேசினார்.
“விடுங்கடா... விடுங்கடா... சல்லிப் பயல்களா! சந்திரா அப்படிச் செய்ததும் தப்பு! மரகதம் அதுக்கு அவள அடிச்சதும் தப்பு: ரெண்டு தப்பும் சரிக்குச் சரி...”