சுத்தணும்... சுத்தியாச்சா. நல்லாப் பாரு... இன்னும் மிச்சம் இருக்கிற இந்தத் துணிய, லூசா விட்டு, தோளுல போடணும். போட்டாச்சா. இதோ. இந்த மாதிரி லூசா இருக்கிற துணியை சுருக்குப் பை மாதிரி மடக்கணும். மடக்கு மடக்கா மடக்கியாச்சா. இதுதான் கொசுவம். இதையும் தொப்புளுக்கு மேல இப்படிச் சொருகணும். எங்க உடுத்திக் காட்டு பார்க்கலாம்...”
சுயம்பு, அவளிடமிருந்து அந்தப் புடவையை பயபக்தியோடு பார்த்து, பலவந்தமாகப் பறித்தான். அவள் சொன்னதுபோலவே, ஒரு சொருகு. இரண்டு சுற்று.
அவள், திருத்தம் கொடுத்தாள்.
“முந்தாணி அவ்வளவு வேண்டாம்... ஆ... இப்ப சரி தான். அந்த லூசா இருக்க துணியச் சுருக்குங்க... சபாஷ். இதுதான் பொம்பளைக்கு லட்சணம். நீ பொம்பளை மாதிரியே ஆகிட்டே...”
“பொம்பள மாதிரி என்ன தாயி... நான் பொம்பளையேதான்.”
சுயம்பு, வளையல்களைக் குலுக்கிக் காட்டினான். “கொலுசும் இருந்தா நல்லா இருக்கும். ஒன் கொலுசக் கொஞ்சம் தாரியாடி” என்று கேட்டபோது, சும்மா நின்றவள் பயந்தாள். புடவை டீச்சர், திருப்திப்பட்டாள்.
பிறகு பல்லைக் கடித்து முகத்தை கோரமாக்கியபடியே சொன்னாள்.
“சரி... எங்க போகணுமோ... போ... நாங்க வீட்டுக்குப் போறோம்!”
சந்திரா, அப்படியும் போக மனமில்லாமல், சுயம்புவை ரசித்துக் கொண்டும், ஓடப்போன சித்தப்பா மகளைப் பிடித்துக் கொண்டும் நின்றாள். அப்போது...
பிள்ளையாரும், ஆறுமுகப் பாண்டியும், ஒருவர் பின்னால் ஒருவர் ஓடிவர, அவர்கள் பின்னால் ஒருவரை ஒருவர் துரத்துவதுபோல் மரகதம், வெள்ளையம்மாள், அலறி அடித்து ஓடி வந்தார்கள். சிறிது இடைவெளி கொடுத்து, பூவம்மா வேப்பிலைக் கொத்தோடு ஓடிவந்தாள். ஊருக்குள் போன ‘எளியவள்’ சூரியா ஒவ்வொரு வீடாக விஷயத்தை இன்னும் சொல்லிக்