நினைத்துக்கொண்டு வேப்பிலையை வைத்து தடவிவிட்டாள் பதட்டமாக, பிறகு அங்குமிங்குமாய் சுற்றிச் சுற்றி ஆகாயத்தைப் பார்த்து கையை ஓங்கி ஓங்கி அரற்றினாள்.
“அடி மாரியாத்தா! என்ன ஏமாத்திட்டியேடி... நீ உருப்படுவியாடி! எல்லாருக்கும் செய்யறது மாதிரிதானே என் மருமவப் பிள்ளைக்கும் செய்தேன்! இந்த ஆந்தைக் கண்ணி சொல்றது மாதிரி நான் நடந்திருந்தால், கண்ணு அவிஞ்சு திண்ணையில கிடப்பேன்! மாரியாத்தா! என் கூடப்பிறந்த பிறப்புக்கே ரெண்டகம் செய்திட்டியேடி! தம்பி! பிள்ளையார்! நீயும் நம்புறியாடா..?”
பிள்ளையார் பித்துப் பிடித்து நின்றபோது, ஊரிலிருந்து பெருங்கூட்டம் ஓடி வந்தது. அதில் சீதாலட்சுமி வாழ்க்கைப்பட்ட குடும்பத்து ஆட்களே அதிகம். பிள்ளையார் வீடு மேலத் தெரு என்பதால், அவரது பங்காளிகள், இனிமேல்தான் வரவேண்டும். சந்திரா, தனது பங்காளிக் கூட்டத்தைப் பார்த்த பிறகு, அது வரு முன்னாலேயே, அங்கே ஓடிப்போய், கத்தினாள். கதறினாள். பிறகு கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்துக் கொண்டு மரகதம் மேல் எரியப் போனாள். யாரோ அவள் கையையும் கல்லையும் சேர்த்துப் பிடித்தார்கள். சீதா லட்சுமியின் கணவன். முத்துக்குமார் சிங்கம் புலிகளை எச்சரிக்கை செய்யும் கொம்பன் யானைபோல், கூட்டத்திலிருந்து தனிப்பட்டு முன்னால் வந்தான். மரகதத்தைப் பார்த்து, தன்னம்பிக்கைக் குரலில் கேட்டான்.
“ஏய் மரகதம்! ஒன்னையும் இழுத்துப் போட்டு அடிக்க எனக்கு எவ்வளவு நேரமாகும்.”
ஆளுக்கு ஆள் பேசினார்கள்.
“என்னப்பா நீ.பொம்பளப் புள்ளிய சண்டையில அடிப்பேன் பிடிப்பேன் என்கிறே! அட, விடப்பா, பஞ்சாயத்து வைக்கலாம்!”
“பஞ்சாயத்துக்குப் போக நாங்க எளியவங்க இல்ல. நூறு தலைக் கட்டோட இருக்கவங்க... இந்த மரகதத்தை விடப்போறதா இல்ல!”
முத்துக்குமாரை, அவன் பங்காளிகளே இழுத்துப் பிடித்தபோது, அவன் வீரனானான். ஆறுமுகப்பாண்டி, அவன் மோவாயைப் பிடித்துக் கெஞ்சினான். பிள்ளையார் அழுத்தம்