துவரம் பருப்புப் பயிர்கள் பளிச்சிடும் தோட்ட வரப்பின் வழியாய், ஊருக்கு அருகே உள்ள கரிசல் காட்டுப் பக்கமாக வந்தார்கள். சுயம்புவால் பொறுக்க முடியவில்லை. பெண்வாசனை கண்டு, அவர்களைப் பார்த்து ஓடினான். அவர்களே திடுக்கிட்டு நின்றுவிட்டு, அப்புறம் நடக்கும்படி ஓடினான். இதற்குள் சிரித்துக்கொண்டு நின்ற அவனை, பிளாஸ்டிக் கூடையில் ஈரத்துணிகளைப் பிடித்துக்கொண்டு இஸ்திரி துணிகளைக் கட்டியிருந்த சந்திரா, அவன் கையிலிருக்கும் தூக்குப் பைக்கு வெளியே, அதன் நாக்குப்போல் துருத்திய புடவையைப் பார்த்தபடியே, கோபம் கோபமாகக் கேட்டாள்.
“செத்துப்போன எங்க அண்ணியையும் எங்க குடும்பத்தையும் கேவலப்படுத்தணும்னு திட்டம் போட்டிருக்கீங்க இல்லியா... அதுவும் இந்தக் காலத்துல இப்படி ஒரு மூடத்தனம். வைக்கிறதா இருந்தா ஒன் பாட்டி சமாதில வைக்க வேண்டியதுதானே!”
இன்னொருத்தி இடை மறித்தாள்.
“இவனுவ குடும்பத்துக்கு அப்போ சமாதி கட்டக்கூட வக்கு ஏது?”
சுயம்புவிற்கு அந்த சந்தர்ப்பத்தில் எதுவும் பிடிபட வில்லை. சூதுவாதில்லாமல் கேட்டான். பையிலிருந்த சேலையைத் தூக்கிக் காட்டிக் கேட்டான்.
“இந்தச் சேலையை எப்படிக் கட்டணும்னு சொல்லிக் கொடுக்கிறயா சந்திரா...!”
அந்த மூவரும் அவன் கிண்டல் செய்கிறானோ என்று திடுக்கிட்டார்கள். அதற்குள் அவன், புடவையைப் பேண்டுக்கு மேல் சுற்றி, எப்படி கொசுவம் வைக்க வேண்டும் என்பது புரியாமல் அவர்களைப் பார்த்தான். அதே அந்த சந்திராவுக்கு, இப்போது மூளையில் ஒரு மின் பொறி. அதை இடியாக இடிக்க விரும்பினாள். காற்று வாக்கில் வந்த பேச்சு, உறுதிப்படுவது போலிருந்தது. அவனைப் பார்த்தப் பல்லைக் கடித்தவள், இப்போது பல்லைக் காட்டிப் பேசினாள்.
“மொதல்ல அந்தப் பூவரச மரம் பக்கமாப் போயி, பாவாடை ஜாக்கெட்ட போட்டுட்டு வாங்க... புடவை கட்டுறதப் பத்தி நான் சொல்லித் தாரேன்!”