அப்போதெல்லாம் அவளுக்கு ஆறுதலாக இருந்த கணவன் முத்துவும், காலப் போக்கில் “மலடி... மலடி...” என்பான். ஒருநாள், சீதாலட்சுமியும் துடித்துப்போய், நீரு மலடா இருக்கறதால தான் நானும் பூக்காமல். காய்க்காமல் இருக்கேன். என்று சொல்லி விட்டாள். உடனே அந்தப் புருஷப்பயல், அப்போ நீ கல்யாணத்துக்கு முன்னாலயே கள்ளப் பிள்ளை கழிச்சிருக்கே என்று சாடியிருக்கான். அடுத்த இரண்டு மணி நேரத்தில், சீதாலட்சுமி இறந்துவிட்டாள். தற்கொலை என்பது குடும்பக் கட்சி, கொலை என்பது அந்த குடும்பத்திற்கு வேண்டாதவர்களின் கட்சி. அவள் செத்தாலும், இந்தப் பேச்சு இன்னும் சாகவில்லை. சுயம்புவுக்கு அவளை நினைக்க நினைக்க, பரிதாபம் ஏற்பட்டது. டேவிட்டும், தன்னை அப்படி ஒதுக்கி விடலாமோ என்று பயமும் ஏற்பட்டது.
சுயம்பு, முக்கால்வாசி தூரம் போய்விட்டான். கீழே கை நழுவி விழுந்த தூக்குப் பையை எடுக்கக் குனிந்தான். நூல் சேலைதான். ஆனாலும், டேவிட் கழுத்துக்கு இரு பக்கமும், தொங்கியதே, அதே மாதிரி வெளிர் மஞ்சள் நிறம். வெள்ளை வெள்ளையான வளையல்கள். மோடாத்துணி, பாவாடை, பாடி, சீதாலட்சுமி அந்த ஆடைகளைப் பார்ப்பாளே தவிர, உடுக்கமாட்டாள் என்ற அனுமானத்தில் ஜாக்கெட்டுக்குப் பட்டன்கள் இல்லை. பாடிக்குக் கொக்கி தைக்கப்படவில்லை. நீளவாக்கிலும் அகல வாக்கிலும் மடிக்கப்பட்டு, ஓரடி நீளத்திற்கும் அரையடி அகலத்திற்கும் அதே அளவு கன பரிமானத்திற்கும் உட்பட்டுத் தோன்றிய அந்தச் சேலையை, அதிசயத்தோடு பார்த்தான். அவனுக்கும் போன ஆசை புது வீச்சோடு திரும்பி வந்தது. யோசித்தான். ஆனால் புடவையை போனவாரம் கட்டுனது மாதிரி கட்டப்படாது. எப்படிக் கட்டலாம். இந்த மலரு வரவே இல்லை. பதில் லெட்டர் கொடுக்கலைன்னு கோபம். எவள் கிட்ட கேட்கலாம்...?
சொல்லி வைத்ததுபோல், அவன் எதிரே மூன்று பெண்கள் தொலைதுார குளத்துப் பக்கத்திலிருந்து, தரையிறங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி, துவைத்த துணி மணிகளை மார்பு வரைக்கும் கட்டிய புடவைக்கு மேல் அங்குமிங்குமாய் மடித்துப் போட்டிருந்தாள். இன்னொருத்தி, ஈரப்புடவையைக் கட்டிக்கொண்டு முந்தானையை மட்டும் விரித்துக் காயப்போட்டுக் கொண்டு வந்தாள். மற்றொருத்தி இவள்கள் மத்தியில் ஒரு கதாநாயகி, இஸ்திரி போட்ட புடவை ஜாக்கெட், அசத்தலான பார்வை. கொத்தும் கண்கள், குமிழியில்லாக் கன்னம். உருண்ட முகம். கையில் பிளாஸ்டிக் கூடை. அவை முழுக்க ஈரத்துணிகள்.
அந்த மூன்று பெண்களும், செஞ்சிவப்பு வெட்டுக் கிளிகள் மாதிரியான பூக்களைச் சுமக்கும்