சற்று பொறுத்து வந்த வீடியோவில், மதுமதி பேசினாள், “எனக்காக ஒரு அநீதியை இழைத்து விடாதீர்கள் அப்பா. நான் இறந்துபோனாலும் உங்களை மன்னிக்க மாட்டேன். அந்த பாதகர்களுக்கு என்னுடைய இந்த நிலைக்கும் சேர்த்து கடுமையான தண்டனை கொடுங்கள்.” சொல்லிக் கொண்டே இருந்தவளிடம்,
“அவ்வளவு திமிராடி உனக்கு. இப்போது என்ன செய்கிறேன் பார்” என்று அவளை நெருங்க, அவளோ. துள்ளி திமிறி வீடியோ காமிராவை மறைத்து,
“அப்பா… நீங்க கண்ண மூடிக்கோங்கப்பா” என்று அலறினாள். இதற்கு பதிலாக விஸ்வநாதன்தான் கதறினார்.
“டேய் அவளை விட்டுடுங்கடா. நீங்கள் சொல்வதுபோல செய்கிறேன்”
திரும்பி பார்த்தால், அங்கு மூவரையுமே -சத்யன், விக்ரம் மற்றும் அபிஷேக்- காணவில்லை. அவருக்கு நீதிமன்றத்திற்கு கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒரு தள்ளாட்டத்துடன் கிளம்பினார். ‘நான் இதுவரை நீதி தவறாமல் இருந்தவன் என்பது உண்மையானால், கடவுளே அந்தக் குழந்தையை இந்த முறையும் காப்பாற்றிவிடுங்கள்!’ உண்மையில், மதுமதி அலறியபோது மிகச்சரியாக அங்கு சத்யன் சென்றுவிட்டான். .
எப்படியெனில், அதற்கு முன்பே மதுவின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டவர்கள் அங்கு விரைந்து சென்றிருந்தனர். அது ஒரு பாழடைந்த கட்டிடம். அங்கேதான் அந்த சமூக விரோத கும்பல் இருந்தது. “நான் முதலில் மதுவை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிடுகிறேன். உன் வேலையை ஆரம்பித்துவிடு. சரியாக ஐந்தே நிமிடங்கள் வை.” என்ற சத்யன் உள்ளே பூனைபோல் பம்மிக் கொண்டு நுழைந்தான்.
அவனிடம் இருந்த தெர்மல் காமிரா, மனித உடல் வெளிப்படுத்தும் உஷ்ணத்தை. பதிவு செய்து வரிவடிவமாகக் காட்டும். அந்த கட்டிடத்திற்குள் அவள் எங்கு இருந்தாலும் உடனேயே கண்டுபிடித்துவிடலாம். நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கிவர்களை இதனை வைத்துதான் அடையாளம் கண்டு மீட்பார்கள்.
அதற்குள் அந்த கட்டிடத்தை சுற்றி மரங்களின் மறைவிற்கிடையே பதுங்கி தவழ்ந்து அபிஷேக் சில வயர்களை இணைக்க,
“என்ன செய்கிறாய்?” என்று விக்ரம் கிசுகிசுத்தான்.
“ஆப்ரேஷன் ப்ளாஸ்ட்.”
”நான் இங்கு என்ன செய்ய வேண்டும்?”
“மதுமதிக்கு ஏதாவது நேர்ந்திருந்தால், அவளுக்கு சிகிச்சை அளிக்கத் தயாராக இரு”
அவர்கள் சத்யன் வெளிப்பட காத்திருந்தார்கள். உள்ளே சென்றவன் அதிக நேரம் பிடிக்காமல் மதுமதியை கண்டுபிடித்து விட்டான். கையில் ஒரு கூரிய இரும்புத் துண்டை பிடித்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தாள்.
“பக்கத்துல வந்தீனா என் கழுத்துல கீறிக்குவேன். அடுத்த வீடியோவிற்கு என்னுடைய பிணத்தின் புகைப்படத்தை அனுப்பி வை. உன்னுடைய ஆட்கள் வெளிவந்துவிடுவார்களா என்று பார்….” உரத்த குரலில் சவால் விட்டுக் கொண்டிருந்தாள். எதிரில் மூவர் இருந்தனர்.
சப்தம் செய்யாமல் அங்கு வந்த சத்யன், அவர்களை தாக்கி மயக்கமுற செய்து விட்டு, மறுநொடி மதுமதியுடன் வெளியே வந்துவிட்டான். ஐந்து நிமிடம் முடிய இன்னும் இரண்டு நொடி இருக்க, அந்த கட்டிடம் வெடித்துச் சிதறியது.
திடுக்கிட்ட மதுமதி அவனைப் பார்க்க, அவன் விஸ்வநாதனுக்கு அழைப்பு விடுத்து அவருடைய கடமையை முடிக்கச் சொன்னான்.
“நீ கிளம்பு, யாராவது வந்துவிடுவார்கள். பத்திரிக்கையில், வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சமூக விரோத கும்பல் குண்டு வெடித்து பலி என்று செய்தி வரும்” என்ற அபிஷேக்கிற்கு நன்றி கூறிவிட்டு, காரில் ஏறினான்.
“மொத்தம் நான்கு பேர். .அத்தனை பேரும் இறந்துவிட்டனரா? “ என்று மது கேட்க,
“பிறகு, என் பிரிய மனைவியை தொட்டவர்களை சும்மா விடுவேன் என்று நினைத்தாயா. செத்து ஒழியட்டும்” கடும் கோபம் அவனிடம் வெளிப்பட்டது. அதனைப் பார்த்து விக்ரம் மனம் குளிர்ந்தான் ‘மனைவி என்று எவ்வளவு உறுதியாகக் கூறுகிறான்.’ என்று மதுவும் திகைத்தாள்.
தங்கையின் கரம் சத்யனின் கரத்தை இறுக பற்றி இருந்ததை கண்டு நம்பிக்கையுற்றான். அவன் பார்வையை கண்டு சுதாரித்த மதுமதி கையை விலக்க முயற்சிக்க, சத்யனுடைய பிடி இறுகியிருந்தது. இது அவளுக்கு பழக்கமான தொடுகை, அந்த வலியபிடியும் மெல்லிய வெப்பமும் அவளுக்கு வேறு ஒன்றை நினைவுபடுத்தின. அவள் சுயநினைவு இல்லாமல் இருந்த நாட்களை நினைவூட்டியது. மனம் வலித்துபோக மெல்ல ஆனால் உறுதியாக அவனுடைய கையினை விலக்கினாள்.
வீட்டிற்குச் சென்றதும் அவளை ஓடிவந்து ரெமி கட்டிக் கொண்டாள். ”உனக்கு ஒன்றும் இல்லையே” என்று சீதாவும் கலங்கினார்.
“அது ரெமியை தூக்கவென்று வந்த குரூப்தானே?” என்று சத்யன் அவளிடம் கேட்க,