அந்த பொய்யைக் கேட்டுக் கொண்டு அது பொய் என்று தெரிந்தும் தலையை குலுக்கி ‘தேங்க்யூ டார்லிங்.” என்று வரும் டிராமாடிக்கான பதில்கள் கெட்ட வார்த்தைகளாக மாறிப்போயின..
எந்த ஒப்பனையும் இல்லாத இயல்பான பேச்சு… சந்தர்ப்பம் கிடைக்கும்போது காலை வாருவது…. திடீர் பதில்களால் உறைந்து நிற்பது…. பின் சுதாரித்து கௌண்டர் தருவது… திகைப்பில் விரியும் விழிகள்… உதட்டை கடித்து சமாளிக்கும் பற்கள்… சட்டென சிவந்து போகும் மூக்கின் நுனி… அடேங்கப்பா… ஒரு பெண்ணிடம் பேசுவது இத்தனை இனிமையானதா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.., இரவே போய்விட்டு பகலே வா என்று மனதில் பாடிக் கொள்ள ஆரம்பித்தான். அப்போதுதானே மதுமதியை பிடித்து ரகளைவிட முடியும். சண்டை போட்டாலும் அதனை சமன் செய்வதிலும் கவனமாக இருந்தான்.
அந்தத்திருமணம் முடிந்த மூன்றாவது நாள் அவனுடைய பிறந்த நாள் வந்தது. காலையிலிருந்து அவன் வீடு ஏக ரகளையானது. சீதாவும் மதுமதியும் பரபரப்பாக வேலை செய்ய, மற்றவர்கள் அவர்களை வேடிக்கை பார்த்தனர். ஏனெனில்,
“சத்யா, நீ பர்த்டே பேபி வேலை செய்யக் கூடாது”
“நித்யா, உன் அப்பாவைப் போல் உனக்கும் வேலை செய்ய வணங்காது”
“ரெமி, உனக்கு இவற்றையெல்லாம் செய்யத் தேவையான திறமையோ அழகுணர்ச்சியோ கிடையாது”
“உங்களுக்குத் தனியா வேறு சொல்லணுமாக்கும். கொஞ்சமும் திட்டமிட்டுவேலை செய்ய மாட்டீர்கள்”
கடைசியாக விழுந்த திட்டு விஸ்வநாதனுக்கு… அத்தனை திறமைகளையும் ஒருங்கிணைத்த தேவதையான(?) மதுமதியையே வலதுகையாக கொண்டு சீத்தாம்மா செயலாற்ற, வெறுமனே சோபாவில் அமர்ந்திருந்தவர்கள் பொருமிக் கொண்டிருந்தனர். விவரம் தெரியாமல் அங்கு வந்த விக்ரம்,
“ஆன்ட்டி… நான் ஏதாவது உதவி செய்யவா?” என்று கேட்க,
“அதை நேற்றேயல்லவா கேட்டிருக்க வேண்டும். இப்போது எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. இப்போது வந்து கேட்கிறாயாக்கும்” என்று முடிக்க,
“வா… வா. எங்களை பார்த்தாலே தெரியவில்லையா?. ஒரு ஓரமாக எப்படி அமர்ந்திருக்கிறோம். நீ பெரிய அப்பாடக்கர்போல போய் அட்டெண்டன்ஸ் தருகிறாயாக்கும். இப்படி உட்கார்” என்று விஸ்வநாதன் அவனை அருகில் அமர்த்திக் கொண்டார்.
“நேற்று எத்தனை முறை என்னை பார்த்தார்கள். ஒன்றும் சொல்லவில்லை. இப்போது இப்படி கவிழ்த்துவிட்டார்கள்” என்று விக்ரம் புலம்பினான். ரெமிக்கு முன்பாக அவமானப்பட்டது வேறு அவனுக்கு கவலையாக இருந்தது.
அவன் சீத்தாம்மாவின் மருத்துவமனையில்தான் நுரையீரல் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவராக வேலை செய்கிறான். நாள் முழுக்க சீதாவிடம் ரிப்போர்ட் செய்து கொண்டேதான் இருந்தான். அப்போது ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே என்று குறைபட்டுக் கொள்கிறான்.
பொதுவாக அவன் அங்கு வருவதில்லை. மதுமதியைபோல அவனுக்கு அங்கு யாரும் பழக்கமில்லை. இப்போதுதான் தன் தங்கையின் நல்வாழ்வை காக்க ஒரு திட்டத்தை செயலாக்க வந்திருக்கிறான். அந்த மாபெரும் திட்டம் என்னவெனில், ரெமியை கரெக்ட் செய்து திருமணம் செய்து கொண்டால், தங்கையின் வாழ்விற்கு ஒரு செக் வைத்தது போலிருக்கும் என்பதுதான். ஆனால், அவனுடைய திட்டம் ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டுவிட்டது… அதற்கு காரணம்….
“பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா” என்று அங்கு வந்த அபிஷேக் கிருஷ்ணாதான். அவன் தனித்து வரவில்லை… சிவப்பு வண்ண ராஜஸ்தான் டிசைன் சுடிதார் அணிந்த ஒரு அழகிய பெண்ணுடன் வந்திருந்தான்.
“சத்திஜீ பிறந்த நாள் வாழ்த்துக்கள். “ அவள் தலையை சாய்த்து பூங்கொத்தை சத்யனிடம் நீட்டவும்,
“நன்றி சுமிம்மா.. எப்போது ஊரிலிருந்து வந்தாய்” என்று சத்யன் கேட்டான். தந்தையிடம் திரும்பி,
“இது ஏஎஸ்பி அபிஷேக். இவள் சுமித்ரா, அபிஷேக்கின் தங்கை. டெல்லியில் ஃபேஷன் டிசைன் பயின்று வருகிறாள்..” என்று கூறி, மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
அந்த அறிமுகப்படலத்தில் விக்ரம் சுமியை பார்த்த பார்வையும்… அபிஷேக் ரெமியை பார்த்த பார்வையும் பிடிபட… ‘இங்கே எனக்கு மட்டும்தான் ஜொல்லுவிடற கெமிஸ்ட்ரி வொர்கவுட் ஆகமாட்டேங்குது’ என்று மனதிற்குள் சத்யன் முணுமுணுத்துக் கொண்டான். விக்ரமிடம் மெல்லிய குரலில்
“அவள் மீண்டும் டெல்லிக்கே சென்றுவிடுவாள். ரொம்பவும் கனவு காணாதே… பஞ்சாபி பொண்ணு… காலை உடைத்து பாங்கரா ஆடவைத்துவிடுவாள். ஜாக்கிரதை ” என்றான்.