அவனுக்கு அவளை கேலி செய்வது மிகவும் பிடித்திருந்தது. கோபக்காரியாமே… அதையும் பார்க்க வேண்டாமா..? அந்த மதுமதி… ஒரு பெண் சிங்கமாம். கோபம்வந்தால் சீறிவிடுவாளாமே. எப்போது அவளுக்கு கோபம் வரும்…? பெண்களை பழித்தால்… தமிழை பழித்தால்… தாய்நாட்டை குறைந்து மதிப்பிட்டால்…. கோபம் வருமாம். அவளை சீண்டுவதற்கு இது போதாதா…?
மறுநாள் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை வீட்டில் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் கலக்கிக் கொண்டிருந்த ஒருவர் பெண்களை கலாய்த்து நிறைய ஜோக் சொன்னார். சத்யன் அப்போது அமைதியாக கவனித்துவிட்டு, சாப்பாட்டு மேஜையில் அதனை ரீ-டெலிகாஸ்ட் செய்தான்.
“வாயை மூடுங்கள். பெண்களைபற்றி நீங்கள் ஒன்றும் கூறத் தேவையில்லை.” மது உரக்க சொல்ல, இதற்குமுன் அவன் வாழ்க்கையில் பெண்களால் வந்த தலையிடிகள் அவன் நினைவிற்கு வந்தது. அவஸ்தை அனுபவித்தவனுக்கு இதைச்சொல்லக்கூட உரிமையில்லையா?
“அனுபவித்தவன்தான் தரமதிப்பீடு செய்ய வேண்…” அவன் முடிக்கும் முன் அவள் கையிலிருந்த க்ளாஸில் இருந்த நீரை அவன் முகத்தில் வீசினாள்.
“வார்த்தைகளை அளந்து பேசுங்கள்.” திடீரென்று முகத்தில்பட்ட குளிர்ந்த நீர் அவனை சிலிப்பிவிட்டது. உடனே எழுந்து, மேஜையிலிருந்த தண்ணீர் ஜக்கிலிருந்த நீரை அவள் தலைமேல் ஊற்றினான்.
“இனி என்னிடம் எப்படி நடந்து கொள்வது என்று தெரிந்திருக்கும்தானே?” என்று கூறிவிட்டு அமைதியாக அமர்ந்து தட்டில் கையை வைத்தான். சட்டென்று அவள் எழுந்து போக, சீதாம்மா அவனை கண்டிக்க முற்பட்டார். ஆனால்,,
‘மது ஏன் தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு சத்யன் பின் நிற்கிறாள்…?’ அவர் ஊகிக்கும் முன்பே குடம் தண்ணீரும் சத்யன் தலையில் கொட்டப்பட்டது. துள்ளி எழுமுன் முழுவதும் நனைந்துவிட்டான். இரண்டுபேரும் சண்டையில் வாளெடுத்து நிற்கும் தோரணையில் முறைத்து நின்றனர்.
“ஐயோ, இதென்ன கோலம்…? இருவரும் விலகி நில்லுங்கள். சத்யா, உன் தலையை துடை” என்று விஸ்வநாதன் அவனை அழைத்துக் கொண்டு கூடத்திற்கு சென்றுவிட்டார்.
“உனக்கு இவ்வளவு கோபம் கூடாது… மது. அவன் உன்னை சீண்டிக் கொண்டுதானே இருந்தான்” என்று மது சொல்ல,|
’ஆமாம், எனக்கு முறைப்பையன் உறவு பாருங்கள். சீண்டுவாராம்… நானும் எப்படி நனைந்திருக்கிறேன் பாருங்கள் அத்தை” என்று புகார் செய்தாள்
அவளை திரும்பிப் பார்த்து கொண்டே கொண்டே சென்றவன்… இதை இப்படியே விட்டால் அவன் பெயர் சத்யசந்திரன் இல்லயென்று ஆகிவிடுமல்லவா?
அன்று மாலையில் தோட்டத்தில் மலர் பறிக்கச் சென்றவள், கொல்லைபுறத்தில் வைத்திருந்த பெரிய நீர் தொட்டியில் விழுந்தாள். எப்படி..? என்று நீருக்குள்ளிருந்து தலையை தூக்கி பார்த்திட, தொட்டியின் ஓரத்தில் ஒரு காலை வைத்து நின்ற சத்யன் தெரிந்தான்.
“எப்பூடி… இது ஏவுகணையை செலுத்தும் டெக்னிக். மின்னல் வேகத்தில் செயல்படும். “என்று விளக்கினான். கொன்றை மரத்தின் கிளையை பிடித்திழுத்து அவன் செய்து வைத்திருந்த கவன் போன்ற பொறியில் அவள் சரியாக காலை வைக்க எதிர்விசையாக செயல்பட்டு… முயலின் காதை பிடித்து தூக்கி எறிவதுபோல் அவளை தூக்கி நீர் தொட்டியில் எறிந்துவிட்டது. அவளின் காலில் சுற்றியிருந்த கயிற்றினை அவிழ்த்தவன்,
”என்னவொரு கணித சமன்பாடு….! சரியான கணக்கீடு.! எதிர்பார்த்த விடை கிடைத்துவிட்டது.” என்று பெருமையாக பேசிக் கொண்டான்.. பின் நின்று…
”நான் அனுபவித்தது என்று சொன்னது… பெண்களால் நான்பட்ட அவஸ்தைகளை… அதனை நான் சொல்லாமல் வேறு யார் சொல்வார்களாம். நீ வேறு மாதிரி புரிந்து கொண்டாய் போலிருக்கிறது” என்று சென்றுவிட்டான்..
அவளுக்கு எப்படியோ…, சத்யனை பொறுத்தவரையில் இவ்வாறு அவளிடம் நடந்து கொள்வது பிடித்திருந்தது. எந்தவித நீண்ட கால ஒப்பந்தமும் இல்லாமல்… ஒருவருக்கொருவர் விதிமுறைகள் இட்டுக் கொண்டு கட்டாயமாக அதை கடைபிடித்துக் கொண்டும் வாழும் கணவன்-மனைவி உறவாக இல்லாமல்… நட்பு என்று கோடு போட்டுக் கொண்டு எல்லைகளை காவல் காக்காமல்… எனக்கு இது போதும் நீ நலமாக இருக்கிறாய்தானே என்று விசாரித்துக் கொண்டு… வருங்காலம் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் கவலையும் இல்லாமல்…. ஒரு புது உறவாக அமைந்தது மகிழ்ச்சியே.
ஏனெனில், இதற்கு முந்தைய அவனுடைய அனுபவங்கள் அப்படி வெறுக்கத்தக்க வகையில் இருந்தன. ஒரு பெண்ணிடம் கமிட் ஆகிவிட்டால்… அவளை குளிர்வித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அவனுடைய உலகத்தின் விதிமுறைகள். பரிசுப் பொருட்கள் வாங்கித் தருவது, வெளியே அழைத்துச் செல்வது, அடிக்கடி சுற்றுலா செல்வது, வாய் கொள்ளா சிரிப்புடன் பார்ட்டிக்களில் கை கோர்த்துக் கொண்டு கலந்து கொள்வது என்பவை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் ஆகும். தொடர்ந்து நான்கு முறை வெவ்வேறு பெண்களுடன் இவற்றை செய்து அவனுக்கு அலுத்துவிட்டது. அதிலும் ‘நீ அழகாக இருக்கிறாய் பேபி’ என்ற வழக்கமான வசனம் அவனுக்கு கெட்ட கனவு போல ஆகிவிட்டது.