ஆனால், விக்ரம் இதனை எதிர்கொண்ட விதம்தான் அவன் எதிர்பாராதது. திரும்பிச் சென்று கொண்டிருந்த ரெமியை கண்கள் கலங்க தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் விரும்பத்தக்க மாற்றம் ஏதும் நிகழ்ந்துள்ளதா?
பார்ட்டிக்கு கிளம்பும்போது திடீரென்று விஸ்வநாதனுக்கு ஒரு முக்கிய அழைப்பு வந்துவிட்டது. அது விசயமாக உள்துறை செயலரை அவர் பார்க்க வேண்டி இருந்ததால், அவனையும் மதுமதியையும் மட்டும் கலந்து கொள்ள சொல்லிவிட்டு மற்றவர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டனர்.
“அப்பா இல்லாமல் வருவது நன்றாக இருக்காது. அது உன் வயதொத்த நண்பர்கள் பார்ட்டி. நீ வேண்டுமானால் விக்ரமை அழைத்து போ” என்று கை காட்ட, மண்டையிடிபட வேண்டும் என்று விக்ரமிற்கு வேண்டுதலா என்ன? எப்படி தவிர்க்கலாம் என்று யோசித்தவன் இதுதான் சாக்கு என்று வரமறுத்து விட்டான்.
“நான் வர இயலாது. நீ மதுவை பத்திரமாக பார்த்துக் கொள்.” என்றான்.
“இந்த சோழ இளவரசியை யாராவது கடத்திக் கொண்டே இருக்கிறார்களே என்று நானே பயந்திருக்கிறேன். பிறகு என்னை யார் பத்திரமாக பார்த்துக் கொள்வதாம்?” என்று சத்யன் கூற,
“அண்ணா, அதுதான் உங்களுடைய காக்கிச்சட்டை நண்பர் அபிஷேக்… இருக்கிறாரே. அவர் பார்த்துக் கொள்வார்.” என்ற ரெமியை, திடுக்கிட்டு விக்ரம் தீப்பார்வை பார்த்தான். மற்றவர்கள் கவனிக்காமல் விட்டாலும் சத்யனும் மதுவும் இதனை கவனித்தனர். ‘காதலா… பொறாமையா… அடுத்தவன் பெயரைக்கூட சொல்லக்கூடாதா…?
பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்றபின்தான், அத்தை அங்கு வர மறுத்த காரணத்தை புரிந்து கொண்டாள்.. அது அவனுடைய தொழில்முறை நண்பர்களுக்கான பார்ட்டி. சிலரைத் தவிர அனைவரும் இளைஞர்கள். சில ‘அந்த’ பெரிவர்களும் சிறியவர்கள் போல கும்மாளமிட்டனர். இதெல்லாம் ஜட்ஜ் அங்கிளுக்கு பிடித்திருக்குமா என்று யோசித்தாள். இந்த சத்யனுக்கு கொஞ்சமும் புத்தி என்பதே இல்லைபோலும். இருந்திருந்தால், இது போன்ற ஒரு பார்ட்டிக்கு குடும்பத்தை அழைத்திருப்பானா? இதை அவனிடமும் சொல்ல,
“இங்கே வந்திருப்பவர்களை பார்த்தால், குடும்பம் நடத்துபவர்கள்போல் தெரியவில்லையா? அனைவரும் குடும்பத்துடன்தான் வந்திருக்கிறார்கள் நாம் பார்ட்டி தருபவர்கள். அனைவரும் இருப்பதுதான் மரியாதை. இதெல்லாம், மேல் மட்டத்து விசயம்… அப்பாவிற்கும் தெரியும்…”
“எங்களுடைய கீழ்மட்டத்திலெல்லாம், ரொம்பவும் விதிமுறைகள் காப்பார்கள். நீங்கள் எப்படி ரெமியை இங்கேவர அழைக்கலாம். வயது வந்த தங்கை இருக்கும்போது அண்ணன் திருமணம்கூட முடிக்கமாட்டான். இதெல்லாம், உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்”
“இப்படி அடுக்கடுக்காக புகார் செய்தால் எப்படி?. என் தங்கை என்று அறிமுகப்படுத்த வேண்டாமா?. இந்த திருமணம் செய்து கொள்ளும் வரிசைபற்றி எனக்கு எதுவும் தெரியாது தாயே. நானே ஒரு ஆக்ஸிடெண்ட் போல் திருமணம் செய்து கொண்டேன்.”
“அதுதான், இப்போது தெரிந்து விட்டதே. இனியாவது ரெமியை கரை சேர்க்க வேண்டாமா?”
“ஓ…. இது அண்ணனுக்கு தங்கை செய்யும் உதவி? விக்ரம் முகம் சிவந்தபோதே நினைத்தேன். உனக்கும் வியர்த்துவிடும் என்று… அதுபற்றி பிறகு முடிவு செய்து கொள்ளலாம். இப்படி சுடச்சுட முடிவெடுக்கக் கூடாது. இப்போது விருந்தினர்களை கவனிக்கலாமா?”
அங்கிருந்தவர்களுக்கும் அவளுக்கும் துளியும் சம்பந்தமில்லாதது போலிருந்தது. ஆண்கள் கோட் சூட் என முழு உடையணிவது நாகரிகம் எனில் பெண்கள் குட்டை பாவாடையுடன் ஸ்பாகெட்டி டாப்ஸ் அணிவது நாகரிகம் ஆக இருந்தது. அந்த இடத்தில் மதுமதிதான் அதிக அளவுள்ள உடையணிந்து இருந்தாள். அவளுடைய லெஹங்காவின் சட்டை கை சிறிது குறைந்து இருந்ததற்கே புலம்பியவள், இந்த அலங்காரத்தைப் பார்த்து மூச்சு திணறினாள்.. எதற்கு இந்த பார்ட்டி, போலி திருமணத்திற்கு இது மிகவும் அதிகம். இதனை அவனிடம் சொல்ல,
“அது போலி திருமணமல்ல. ஒப்பந்த திருமணம்.” என்று திருத்தினான். “இரண்டும் ஒன்றுதான். இரண்டிற்குமே எதிர்காலமில்லை….” அவள் காற்றுடன்தான் பேசிக் கொண்டிருந்தாள். சத்யன் யாரோ ஒருவரை நோக்கி “ஹாய்” என்றபடி நகர்ந்துவிட்டிருந்தான்.
“எத்தனை முறை எச்சரித்தும் இப்படி படுகுழிக்குள் விழுந்துவிட்டாயே” என்ற குரல் கேட்டு திரும்பினாள். அவளிடம் கையை நீட்டியவள்,
“தனவர்சினி” என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். இவள்தானா அது….
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”
“உன்னுடைய பொம்மை திருமணத்தைதான் சொல்கிறேன்” அவள் சற்று குரல் கூட்டி பேசுவதுபோல இருந்தது. அவளுடன் இருந்த சில அரைப்பாவாடைகள் மதுவின் பதிலை எதிர்பார்த்தன. இது, நீதி கேட்கும் தருணமோ…? மதுமதி மௌனமாக இருப்பது சத்யனை அவமானப்படுத்திவிடும். அவனுடைய மானம் காக்கும் வாளான அவள் இதை அப்படியே விட போவதில்லை.
“பொம்மை திருமணமா… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?. “
“நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா?”
“நிச்சயமாக…”