“காதலன் காணாமல் போகவில்லை. காதலைத்தான் தொலைத்துவிட்டேன் என்று கூறினேன்”. அவன் மறுவார்த்தை பேசுமுன், “அதோ அந்த டீக்கடையில் டீ குடிக்கலாமா?” என்று நடந்துவிட்டாள்..
இரண்டிற்கும் வேறுபாடு உள்ளதா? காதலை தொலைத்துவிட்டாள் என்றால், அவன் இன்னமும் கண்முன்னேதான் திரிகிறான் என்று பொருள். யாரவன்…? தேநீரை அருந்தியபடியே நெற்றியில் விழுந்த முடியை ஒதுக்கிக் கொண்டவளை பார்த்தான். நன்றாகவே இருக்கிறாள்… இவளை விடுத்து ஏன் சென்றான். ஒருவேளை அவள் மருத்துவமனையில் இருந்த இடைவெளியை தவறாகப் புரிந்து கொண்டானோ… இவள் நடந்த உண்மையை சொன்னதை நம்பாமல் அவளின் தூய்மைத்தன்மைமேல் அவநம்பிக்கை கொண்டு சென்றுவிட்டானோ? இல்லை… அவன் திரும்பி வருவான் என்று காத்திருக்கிறாளோ…
“நீ நேற்று இரவு அத்தனை பேருக்கு முன்னிலையில் அவ்வாறு நடந்து கொண்டதை அவனிடம் எப்படி விளக்குவாய். “
“நான்தான் சொல்கிறேனே… அவன் ஒருபோதும் என்னைத் தேடி வரப்போவதில்லை. . அவனை தேடும் வழியும் எனக்குத் தெரியாது. உலகத்தின் பார்வையில் நான் திருமணம் ஆனவள். அவனிடம் இன்னொரு சந்தர்ப்பம் எனக்கு இனி கிடைக்காது. நான் இப்படியே தனியேதான் இருப்பேன்” அவளின் வலிமையான சொற்கள் அவனுக்குள் அதிர்வை ஏற்படுத்தின. இவளை விட்டு விலகவும் முடியாது போலிருக்கிறதே!
அவனுக்குள் அவளைபற்றிய நினைவுகள் அதிகரித்தன. இந்த கல்யாணம் ப்ரேக்-அப் ஆகப்போவதில்லை என்றும் தோன்றியது. என்றென்றைக்கும் அவளை பார்த்துக் கொண்டேயிருக்கும் இனிய கனவில் அவன் ஆழ்ந்தான்.
அடுத்து வந்த நாட்களில் தந்தைக்கு ஓய்வு தந்து எஸ்டேட் வேலைகளை கவனித்துக் கொண்டான். இது தேயிலை பறிக்கும் சமயம். சரியான சமயத்தில் பறித்துவிட்டால், முதல்தர தேயிலை கிடைக்கும். சற்று அயர்ந்துவிட்டாலும், இரண்டாம் தரமாகிவிடும்.
ஒருநாள் இரவு தொடங்கும் நேரம், மதுமதியின் தோற்றம் மாறியிருந்தது. வழக்கமாக சுடிதார் அணிபவள் அன்று முடியை தூக்கி கட்டி காட்டன் சட்டையுடன் ஜீன்ஸ் அணிந்திருந்தாள். நீலவண்ண ஜீன்சும் பிங்க் வண்ண சட்டையும் –அதிலும் அந்த முழு கையை அவள் மடக்கி விட்டிருந்த விதத்தில் அவளை கம்பீரமாக காட்டியது.
“மேடம், எங்கே திருவீதி உலா செல்கிறீர்கள்” என்று விசாரித்தான்.
“திருவீதி உலா இல்லை. திருட்டுத்தனமாக போகிறேன்.”
“வீட்டில் யாருக்கும் தெரியாதா?”
“நான் போகும் இடத்தில் யாருக்கும் தெரியாது”
“ஓ, அம்மணி மறைந்து நுழைந்து எதை திருடப் போகிறிர்கள்?”
“திருடவில்லை, வேறு வேலையாக செல்கிறேன்”
“யாரையும் சந்திக்க செல்கிறாயா?” அவனுக்கு ஒரு பயம் வந்தது.
“வந்து சொல்கிறேன்…” அவள் கிளம்ப, சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தன் போல, அப்படி இப்படி என்று அவள் கண்களில் பட்டுக் கொண்டிருந்தால்தானே எதிர்காலத்திற்கு நல்லது என்று நினைத்த அவன்,
“இரு நானும் உன்னுடன் வருகிறேன்…” என்று உடன் வந்தான்.
“வேண்டாம்…”
அவன் உள்ளே திரும்பி “அப்பா…” என்றான்.
“நீங்கள் உபத்திரவமாகவே இருக்கப் போகிறீர்கள்” என்றாள்.
மெல்ல கவிழ்ந்திருந்த இருளில், அவள் இரு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு சற்று தொலைவு சென்றதும் ஸ்டார்ட் செய்தாள். “பின்னால் ஏறுங்கள்” இடம்விட்டு அமர்ந்தாள். அவன் அந்த வண்டியில் அமர்ந்ததும், அவனுடைய உயரத்திற்கு கால்கள் தரையில் பட்டு, மலைபிரதேசத்தில் கோவேறு கழுதையின் மேல் பயணிப்பதுபோல தோன்றியது. இந்த யாத்திரை எங்கு முடியப்போகிறதோ?
அரைமணி நேர பயணத்தின் முடிவில், ஓரிடத்தில் வண்டியை நிறுத்தினாள். விரலை உதட்டில் வைத்து எச்சரித்தாள். இனி சைகைதான் போலும். அவனும் மௌனமாக அவள் பின்னால் சென்றான். திடீரென்று தரையில் படுத்துக் கொண்டு எதிரியை தாக்கச் செல்லும் ராணுவ வீரனைப்போல் ஊர்ந்தாள். இதை எதிர்பார்க்காத அவனும் சற்று தடுமாறி பின் மெல்ல அவளுடன் சேர்ந்து கொண்டான்.
ஒரு முள் வேலி. அதில் கீழே சிறு இடைவெளி. அதில் தரையை தேய்த்துக் கொண்டு முன்னேறி அந்த பக்கம் சென்றுவிட்டாள். அவனுக்கு இதில் பயிற்சியே இல்லை. ஆனால் அவள் முன் தயங்கி நிற்க மனமின்றி அவளைப்போலவே சிரமப்பட்டு தரையை ஒட்டிக் கொண்டு நகர்ந்தான். முதுகில் ஏதோ கீறிவிட்ட உணர்வு. இந்த ஜான்சி ராணியை கவர்வதற்கு இன்னும் என்னவெல்லாம் பாடுபடப் போகிறானோ?
வேலியை தாண்டி சென்றதும் திரும்பிப் பார்த்தான். மெல்லிய குரலில் “நாம் அந்த மரத்தின் கிளையை பிடித்து ஸ்விங் செய்து வேலியை தாண்டி இந்த பக்கம் வந்திருக்கலாமே?”