‘ஒரு முத்தம் கொடுன்னு சொல்லேன்’ என்றான் அவளை இடையோடு சேர்த்து அணைத்துக்கொண்டு
‘ஆங் அது மட்டும் மாட்டேன்’
‘ஹேய்... இன்னைக்கு நமக்கு ஃபரஸ்ட் நைட் டி’ என்றபடியே அவள் இதழ்களின் அருகே அவன் வர
‘ஃபரஸ்ட் நைட்டா அதெல்லாம் கான்செல். இன்னும் கொஞ்ச நேரத்திலே பொழுது விடியப்போகுது’ அவள் அவனை தள்ளிவிட்டாள்.
‘அதனாலே என்ன. எனக்கு பிரச்சனை இல்லை’ மறுபடியும் இழுத்து தன்னோடு சேர்த்துக்கொள்ள
‘சுப்.’ என்றாள் அவன் இதழ்கள் மீது விரல் வைத்து ‘அப்பா ரொம்ப கோபமா இருக்கார் ஹரிஷ். எனக்கு அவரை சமாதான படுத்தணும் முதல்லே. அவர் சொல்றது ரொம்ப ரொம்ப சரிதான். எனக்கு ஷங்கரோட உறவு கொண்டாடணும்னு இல்லை. ஆனா அவன் ஆபத்திலே இருக்கும் போது எப்படியும் போகட்டும்னு விட முடியலை. உங்க அப்பா சொன்னதை மீரணும்னு எனக்கு எண்ணம் இல்லை. அதை அவருக்கு சரியா புரிய வைக்கணும். அதுக்கு அப்புறம் நம்ம லைஃப் ஸ்டார்ட் பண்ணலாம் ப்ளீஸ்’
காலைக்குள்ளாகவே வீடு வந்து சேர்ந்திருந்தான் ஷங்கர். அவர்கள் எல்லாருக்குமே ஹரிஷின் முயற்சியால்தான் அவன் தப்பித்து வந்தது என்பது நன்றாகவே புரிந்தது.
அங்கிருந்து ஹரிஷுக்கு அழைப்புகள் வந்தன.’ ஷங்கரின் ‘ஸாரி ஹரிஷும்’ ஏன் லோசனாவின் ‘மன்னிச்சிடுங்க மாப்பிள்ளையும்’ கூட வந்தன.
எல்லாவற்றக்கும் ‘ம்’ என்ற பதிலோடு முடித்துக்கொண்டான் ஹரிஷ்.
இதிலெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை ஹரிஷுக்கு. இவை எல்லாம் வெறும் வார்த்தைகள். இனியாவது செய்த தவறுகளை உணர்ந்து வேறு யாரையும் அவர்கள் காயப்படுத்தாமல் இருந்தால் போதும் என்று தோன்றியது.
ஆனால் இவனுக்கு இருக்கும் பக்குவம் சுவாமிநாதனுக்கு இல்லைதான். மனதளவில் மிகவும் துவண்டு போயிருந்தார். ஆதங்கம். என் மகன் என்னை விட்டுக்கொடுத்து விட்டானே என்ற ஆதங்கம்.
இங்கே விளையாட இறங்கினான் ஹரிஷ். அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத்தான் தெரிந்தான் அணியின் ரசிகர்கள் எல்லாருக்கும். சற்றே நிதானித்து ஆட வேண்டிய தருணமாகத்தான் இருந்தது அது. இரண்டு ஓவர்கள் நிதானமாகத்தான் ரன்கள் சேர்ந்தன.
அடுத்த ஓவரின் முதல் பால். ஹரிஷ் எதிர்புறம் நின்றிருக்க, தெறித்தன எதிர் பேட்ஸ்மேனின் ஸ்டம்புகள்.
வந்து நின்றான் அடுத்த ஆட்டக்காரன். முதல் பந்திலேயே அவன் காட்டிய அவசரம். சிக்ஸருக்கு போக வேண்டிய பந்து நேராக ஃபீல்டரின் கைக்கு செல்ல அவுட்!
முப்பது ரன்களில் நான்கு விக்கெட்டுகள் சரிந்திருக்க எதிரணி வீரர்கள் உற்சாகத்தில் மிதந்துக்கொண்டிருந்தனர். கொஞ்சமாக எட்டிப்பார்க்க நினைத்த அவநம்பிக்கையையும் சோர்வையும் சட்டென மனதை விட்டு தள்ளி வைத்தான். அவனை விடாமல் உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் அனுவை ஒரு முறை திரையில் பார்த்துக்கொண்டு பந்தை சந்திக்க தயாரானான் ஹரிஷ்.
‘அடுத்த இரண்டு ஓவர்கள் அவனுடையதாகவே இருந்தன. இரண்டு சிகஸ்ரகளும் நான்கு ஃபோர்களும் அணியின் ஸ்கோரை அறுபது ரன்களுக்கு உயர்த்தி இருந்தன. சற்றே அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள விழைந்த நிலையில் மடமடவென விழுந்தன அடுத்த மூன்று விக்கெட்டுகள்.
தளர்ந்தான் ஹரிஷ். இரண்டரை நிமிட இடைவேளை வந்திருந்தது. இனி வரும் வீரர்கள் எல்லாரும் பந்து வீச்சாளர்களே. இன்னும் நாற்பத்தி ஆறு ரன்கள் எடுத்து விட முடியுமா? மிகப்பெரிய கேள்விக்குறி அவன் முன் நின்றது.
என்ன நடக்கிறது என் அணிக்கு? ஒரு கேப்டனாக எங்கே தவறு செய்கிறேன் நான்? யோசித்துக்கொண்டே தண்ணீரை பருகிக்கொண்டிருந்தான் ஹரிஷ். அப்போது மறுபடியும் அவன் விழிகளில் விழுந்தாள் அனுராதா. அவனை தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் அனுராதா.
சட்டென ஒரு பொறி தட்டியது அவனுக்கு. இதுதானோ? இதுதான் இப்பொது தேவையாக இருக்கிறதோ என் அணிக்கு? நான் என் விளையாட்டில் கவனம் செலுத்தும் வேளையில் மற்ற வீரர்களை உற்சாகப்படுத்த மறந்து போனேனோ? அணியின் வெற்றி என்பது என் ஒருவனின் ஆட்டத்தை மட்டும் நம்பி இல்லையே.
‘என்ன செய்வது என அவன் முடிவு செய்வதற்குள், இன்னும் சரியாக இன்னும் நாற்பது ரன்கள் தேவையாக இருக்க சரிந்தது இன்னொரு விக்கெட்.
‘மை காட்’ சொல்லிக்கொண்டான் ஹரிஷ். ‘இனி ஏதாவது செய்ய முடியுமா? இனி ஜெயிப்பது கொஞ்சம் கடினம்தானோ’ எட்டிப்பார்த்த அவ நம்பிக்கையை அவன் தள்ளி வைத்தான். அவனது அணி ரசிகர்களிடம் நிறையவே நம்பிக்கையின்மை.
வந்து இறங்கினான். அணியின் எட்டாவது வீரன். அவன் அடிப்படையில் அவன் ஒரு பந்து வீச்சாளன்தான். மேற்கிந்திய தீவுகளின் வீரன் அவன். வயதிலும் சற்று இளையவன். அடுத்து வரும் பந்தை எதிர்க்கொள்ள சற்றே பயத்துடன் நின்றிருந்தான்.