தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 17 - மது
AT THE END OF INFINITY
அந்த ஸ்டார் ஹோட்டலின் பால்கனியில் நின்று கொண்டு வானத்து நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தான் ஆர்சி.
கட்டாந்தரையோ, குஷன் போம் மெத்தையோ இது நாள் வரை நித்திரா தேவி அவனோடு சண்டை பிடித்ததே இல்லை. அவன் கூப்பிட்டதும் வந்து ஆரத் தழுவிக் கொள்வாள். ஆனால் இன்றோ அவனை ஆட்கொள்ள முடியவில்லை அவளால்.
ஆர்சி. இருபத்தி ஐந்து வயது இளைஞன்.
பலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் கூட பெற்றிராத அனுபவங்களை இந்த வயதிலேயே பெற்றிருந்தான்.
சிறு வயதிலேயே அபார நியாபக திறன் மற்றும் அதிக ஐகியூ பெற்றிருந்தவன் பத்தொன்பது வயதில் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் உயரிய பதவியில் கால் பதித்தான்.
மூன்றே வருடங்களில் வேலையை ராஜினாமா செய்து சொந்தமாய் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினான்.
மூழ்கும் அபாயத்தில் இருக்கும் தொழில் நிறுவனங்களை மீட்டு மீண்டும் வெற்றிகரமாக இயங்கச் செய்வதே அவனது நிறுவனத்தின் நோக்கம். அதற்கான நடவடிக்கைகளை ஆராய்ந்து அதை செயல்படுத்தி லாபம் ஈட்டித் தருவதாக மாற்றி அதில் இருந்து ஒரு பகுதியை தனது கட்டணமாக எடுத்துக் கொண்டான்.
அவன் அப்படி எடுத்துச் செய்ய முதல் ப்ராஜக்ட்டே மிகவும் பிரபலமான ஒரு நிறுவனமாக இருந்தது. மூன்றே மாதங்களுள் லாபம் ஈட்டும் விதமாக மாற்றியிருந்தான். அதன் பிறகு அவனுக்கு உலகளவில் இருந்து ப்ராஜக்ட்டுகள் குவிந்தன.
பணம், பதவி, அந்தஸ்து அனைத்தும் இருந்தும் ஏதோ ஒரு வெற்றிடத்தில் இருப்பதைப் போலவே உணர்ந்தான்.
அந்த வெற்றிடத்தை நிரப்ப உலகத்தைச் சுற்றினான். வாழ்க்கைப் பாடங்களைக் கற்றான்.
ஒரு நாள் உலகின் ஏதோ ஒரு மலைகிராமத்து சாலை ஓரத்தில் இரு மரங்களுக்கு இடையே நைலான் தொட்டில் அமைத்து அதில் உறங்குபவன் மற்றொரு நாள் ஆள் அரவமற்ற தீவில் வெண்மணற் பரப்பில் ஓய்வாக படுத்திருந்தான். இன்னொரு நாள் ஆடம்பர நட்சத்திர விடுதியின் ஸ்வீட்டின் மெத்தையில் புதைந்திருந்தான்.
மலையேறினான், ஆழ்கடலில் மூழ்கி சமுத்திர உலகை ரசித்தான். கேமரா எடுத்துக் கொண்டு இயற்கையை சிறை செய்ய முனைந்தான். கிடார் தந்திகளில் இசையை வருடிக் கொடுத்தான்.
தான் கோடிகோடியாய் சம்பாதிக்கும் செல்வத்தைப் பசியில் வாடுவோருக்கு உணவாக்கினான். குளிரில் நடுங்குவோருக்கு போர்வையாக்கினான். பிணியின் பிடியில் சிக்கியவருக்கு மருந்தாக்கினான். ஆனால் இவை அனைத்தையும் சத்தமில்லாமல் செய்தான்.
சுற்றமும் நட்பும் அவனை ஒரு பக்கா பிஸ்னஸ்மேனாக, உலகம் சுற்றம் உல்லாசப்பிரியனாக பார்த்ததை எல்லாம் கண்டு கொள்ளாமல் தனது வழியில் பயணத்தை தொடர்ந்தான்.
அந்தப் பயணத்தில் அவன் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்திருக்கிறான். அவர்களின் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களின் பார்வையாளனாக இருந்திருக்கிறான். அதில் தனக்குத் தேவையான படிப்பினைகளை எடுத்துக் கொள்வானே தவிர ஒரு நாளும் அவை எதுவும் தன்னை பாதிக்க அனுமதித்தது இல்லை.
அன்று மதியம் ஹரிணியோடு வீடியோ கால் பேசி முடித்த ஹர்ஷா சில நேரம் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நீடித்திருந்தான்.
“பிரின்ஸ் ஆர் யூ ஒகே” ஆர்சி வினவ ஆம் என்று தலையாட்டினான்.
துக்கத்தை தனியே தின்று விழுங்கி விடலாம் ஆனால் சந்தோஷத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள ஹர்ஷாவின் மனம் விரும்பியது.
சந்தித்து சில மணி நேரங்களே ஆகியிருந்த போதும் உற்ற நண்பனாகிவிட்டிருந்த ஆர்சியிடம் தனது மகிழ்ச்சிசக்கான காரணத்தைப் பகிர்ந்து கொண்ட போது ஆர்சி இமைக்காமல் ஹர்ஷாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஹர்ஷா விடைபெற்று சென்று பல மணி நேரமாகியும் ஆர்சியின் மனம் ஹனி மற்றும் ஹரியையே சுற்றிக் கொண்டிருந்தது.
நம் தேகம் கூட மண்ணுக்கும், நெருப்புக்கும், நீருக்கும் சொந்தமாகிப் போய்விடுகிறது. அதைச் செலுத்தும் உயிரோ காற்றில் ஒன்றென கலந்து விடுகிறது. எனில் ‘எனது’, ‘என்னுடையது’ என்று இவ்வுலகில் எதுவும் இல்லை. இருந்த போதிலும் மனிதர்கள் உரிமை, உடைமை எனும் மாயையை உடும்புப்பிடியாய் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்களே என்று அவன் எப்போதும் எண்ணுவதுண்டு.
அப்படி என்றால் ‘எனது’ என்று ஒன்றுமே இல்லையா என்ற கேள்வியும் அவனுள் எழாமல் இல்லை.
விடியல் சூரியனைக் காணும் போதும், வானத்து மழையில் நனையும் போதும், முகை விரிக்கும் மலரை முகரும் போதும், காற்றின் இசையைக் கேட்கும் போதும் பிரபஞ்சம் முழுவதும் கொட்டிக் கிடக்கும் அழகை எல்லாம் ரசிக்கும் போதும் ஏற்படும் ஓர் பரவசமும், திட்டமிடாமல் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நமது பயணத்தில் எதிர்படும் ஓர் உயிரின் துயரம் நீக்(ங்)கி சந்தோஷம் குடியேறுவதை காணும் அந்தத் தருணத்தின் நிறைவும் “எனது” ஆகாதா என்றும் அவன் யோசித்ததுண்டு.