அன்றிரவே பாரதி ஹரிணியிடம் அவளது திருமணம் குறித்துப் பேசினார்.
“கல்யாணமா அது பத்தி எல்லாம் நான் யோசிக்கவே இல்லையேம்மா” ஹரிணி அன்னையிடம் கூறினாள்.
“ஆணோ பெண்ணோ திருமணம் பார்ட் ஆப் லைப் விதுகுட்டி. வாழ்க்கையின் போக்கில் திருமணத்தையும் அரவணைத்து செல்ல வேண்டும். உன் வாழ்க்கையின் முடிவுகளை எடுக்கும் பக்குவம் உனக்கிருக்கு. முக்கியமாக இந்த ஒரு விஷயத்தில் உன் மனது என்ன சொல்கிறதோ அதன் படி முடிவெடு” பாரதி மகளுக்கு பரிபூரண சுதந்திரம் அளித்தார்.
“நீங்க ஏதேனும் மனதில் வைத்திருக்கீங்களா” மகள் கேட்கவும் கல்யாணி அவர் மகனுக்குப் பெண் கேட்டதைத் தெரிவித்தார்.
“அதை நாம ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் ஏதும் இல்லை விதுகுட்டி” அன்னை சொல்லிச் சென்றதும் ஹரிணி தீவிரமாக யோசிக்கலானாள்.
நமது சமூக அமைப்பில் திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பந்தம் மட்டுமல்லவே. இரு குடும்பங்கள் ஓர் உறவில் இணைவதல்லவா.
அந்த வகையில் தனது அன்னையும் கல்யாணி அத்தையும் தோழிகள் என்பதால் இரு குடும்பங்களிடையே நல்லுறவு நீடித்திருக்கும் என்ற போதும் தனது அன்னை சொன்னது போல இந்த விஷயத்தில் தனது மனம் என்ன விரும்புகிறது என்று அவளுக்கே தெரியவில்லை.
நம் நாட்டில் பெரும்பாலும் நிச்சயக்கப்பட்ட திருமணங்கள் தாம் நடைபெறுகின்றன என்ற போதும் ஒருவரை மணக்க அவர் மேல் காதல் கொள்வது அவசியம் இல்லையா. எனில் அந்தக் காதல் எப்படி தோன்றும். திருமணத்திற்குப் பின் அந்த நபர் மேல் காதல் வாராமல் போய்விட்டால்? அவளது மனதில் பல சந்தேகங்கள். உடனே ஹர்ஷாவிற்கு போன் செய்தாள்.
“ஹரி காதல் எப்படி வரும்னு சொல்லேன்” எதிர்முனையில் இருந்தவனுக்கு திடீரென இவள் இப்படிக் கேட்கவும் ஒன்றுமே புரியவில்லை.
என்ன இவள், என்னவோ பஸ்ஸில் வருமா ரயிலில் வருமா என்பது போல கேட்கிறாள் என்று நினைத்தவன் அதை அவளிடம் சொல்லவும் செய்தான்.
“ஒருத்தரைக் கல்யாணம் செய்துக்கணும்னா அவங்க மேல காதல் வரணும் தானே” அடுத்தக் கேள்வியைக் கேட்க இப்போது அவன் கேள்வி கேட்காமல் பதில் சொன்னான்.
“என் அம்மா அப்பா லவ் செய்து தான் கல்யாணம் செய்துகிட்டாங்க. உன் அம்மா அப்பாவும் அப்படி தான்னு சொன்னியே. மேரேஜ்க்கு லவ் தான் பேஸ்”
“அது தான் கேட்கிறேன். காதல் எப்படி வரும் ஹரி, அது ஒருத்தர் மேல வந்திருக்குன்னு எப்படித் தெரியும். சொல்லேன்” என்றாள் அவள்.
“எனக்கு எப்படித் தெரியும் ஹனி” உல்லாசமாக அவன் குரல் ஒலித்தது.
“ஆமா இவருக்கு ஒண்ணுமே தெரியாது, கண்ணாடி முன்னாடி போய் உன் முகத்தைப் பாரு. டன் கணக்கில் வெட்கம் வழியுறதை” அவள் நேரில் பார்க்காமலே சரியாக சொல்லவும் பெரிதாக சிரித்தான்.
“சரி இப்போ ஏன் திடீர்னு இப்படி கேட்குற” அவன் வினவ கல்யாணி அத்தை பற்றியும் அவர் மகனுக்குத் தன்னைப் பெண் கேட்டதைப் பற்றியும் சொன்னாள்.
“அம்மா என்னோட விருப்பம் தான்னு சொல்லிட்டாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல ஹரி. கதைகளில் சினிமாவில் எல்லாம் காதல் வந்தா நிறைய சிம்ப்டம்ஸ் தெரியும்னு சொல்வாங்களே அது போல தான் இருக்குமா”
“என்னென்ன சிம்ப்டம்ஸ் ஹனி”
“அதான் டேகிகார்டியா( இதய துடிப்பு அதிகரித்தல்), அப்டமன்ல டிங்ளிங் சென்சேஷன் (வயிற்றில் குறுகுறுப்பு), சடன் ஜெர்கி மூவ்மன்ட் (திடீர் அதிர்வலை)..” அவள் சொல்லி முடிக்கவில்லை, அடக்க மாட்டாமல் பெரிதாக சிரித்தான் ஹர்ஷா.
“பேர் என்ன சொன்ன ஆஹ்ங் பாலகிருஷ்ணன், பாவம் அவர்” விழுந்து விழுந்து சிரித்தான்.
ஹரிணி திடீரென மௌனமாகி விட ஹர்ஷா சிரிப்பதை நிறுத்தி விட்டு அவளுக்கு எடுத்துரைத்தான்.
“அப்படி எல்லாம் இருக்குமான்னு எனக்கு தெரியல ஹனி. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா உணரலாம். எனக்கு ஸ்வாதியை சின்ன வயசில் இருந்தே தெரியும். அவளை அப்போ இருந்தே எனக்குப் பிடிக்கும். அவளுக்கும் நான் என்றால் கொள்ளைப் பிரியம். நாளடைவில் அந்த அன்பே காதலாய் மலர்ந்ததுன்னு நினைக்கிறேன். இட்ஸ் எ பீல். எப்படி அவள் மேல அந்த பீல் வந்ததுன்னு எனக்கு ரீசன் செய்ய எல்லாம் தெரியல”
“உங்க வீட்ல உங்க மேரேஜ் பத்தி பேசினாங்க போல. ஸ்வாதி அதை பத்தி ஆர்வமா சொல்லலை. படிப்பு முடியட்டும்னு சொன்னேன்க்கான்னு மட்டும் என்கிட்டே சொன்னா. நீ அவ கிட்ட இது பத்தி பேசலையா”
“ஆஹான், எங்க வீட்ல எங்க மேரேஜ் பத்தி என்கிட்டே யாரும் இதுவரை பேசவே இல்லையே” என்று சோகமாய் சொன்னவன், “இதுல அவ கிட்ட பேச என்ன இருக்கு. ஐ லவ் ஹர் சோ மச்ன்னு அவளுக்கு தெரிஞ்சது தானே. அவளுக்கு மட்டுமென்ன எல்லோருக்கும் தெரிஞ்சு தானே எங்க மேரேஜ் பத்தி பேசிருக்காங்க. படிப்பு முடியட்டும்னு அவள் சொன்னதும் சரி தான். இன்னும் குழந்தைத்தனமாவே இருக்கான்னு தான் உனக்கும் தெரியுமே. ஷீ நீட்ஸ் டு பி மோர் மெச்சூர்ட் அண்ட் இன்டிபன்டன்ட்” ஹர்ஷா சொல்ல ஹரிணியும் ஆமோத்தித்தாள்.