தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 07 - சாகம்பரி குமார்
அதிதியிடம் பேசிக் கொண்டே பரண் மீது அதிரதன் ஏறினான். பரணிற்குள் முதல் அடியை வைக்கும்போதே ஏதோ திடுக்கென்றது. எதுவோ மின்னல் விரைவில் பரணின் மறு பக்கமிருந்த ஜன்னல் வழியாக வெளியேறியதுபோல தோன்றியது.
பதட்டத்துடன் ஜன்னல் அருகே சென்று பார்த்தான். ஜன்னலை அடுத்திருந்த மரக்கிளையில் சாம்பல் நிற அணில் பல்லை காட்டி கீச்சிட்டது. சே…! அணில்தானா…!
நினைத்த அடுத்த நொடியே அவன் பார்த்தது அணிலையா என்று சந்தேகம் வந்தது. அது விரைவாக செல்லும்…. மரக்கிளைகளில் தாவி செல்லும்… ஓகே!. ஆனால் அவ்வாறு செல்லும் அணில் கண்ணிமைக்கும் நொடிக்குள் காற்றாக பறக்காதே!
அவன் பார்த்த காட்சி… விண்ணில் சீறி பாயும் ராக்கெட்டின் புகை, வால்போல நீளுமே… கூர்மையாக ஆரம்பித்து அடர்ந்த புகையாக மாறுமே அதுபோல இருந்தது. அணில் அப்படி போகாதே…
‘அது’ வந்துடுச்சா?
“ம்… முன்னே பின்னே பரணை பார்த்தது இல்லையா. அல்லது அணிலைத்தான் பார்த்தது இல்லையா.? இப்படி கண்ணிமைக்காமல் பார்த்துட்டே இருக்கீங்க” என்ற அதிதியின் குரல் கேட்டு திரும்பினான்.
“வந்திட்டியாம்மா... ஆமாம்… நான் அணிலை பார்த்தது இல்லை. அதுக்கென்ன இப்போ…”
“அட… ஒரு பேச்சுக்கு கேட்டேன் சார். நீங்க அணிலை ஒரு ஆராய்ச்சி பார்வையுடன்தான் பார்த்திருப்பீங்கன்னு எனக்கு தெரியாதா?”
“அணில் கிட்டே என்னம்மா ஆராய்ச்சி…?”
“சும்மா சொல்றீங்க சார். உங்களை மாதிரி சைண்டிஸ்ட்டெல்லாம் சும்மாவா பார்ப்பீங்க. அணில் இங்கே இருக்கே, அப்படினா பக்கத்துல பழமரங்கள் இருக்கான்னு தேடிட்டு இருக்கீங்க அப்படித்தானே…”
“ஓ… அப்புறம் வேறு என்னவெல்லாம் தோணுது”
“ம்… அணில் இருக்குன்னா பழமரம் இருக்கு... அப்படின்னா வௌவால் இருக்குமோ… அந்த புதுசா ஒரு வைரஸ்னு சொன்னாங்களே அது இருக்குமோ அப்படின்னு தோணலாம்”
“ஆஹாங், எனக்கு எதுவும் தோணலை. இங்கே இருக்குற பொருட்களை பார்த்துட்டுதான் திகைச்சு போயிட்டேன். ரெண்டு பாத்திரம்.. ஒரு போர்வை… வைக்கோல்.. ஒரு அரிவாள்… ஒரே ஒரு செட் ஷூ..”
“அட, நான்கூட அதை பார்க்கலை சார். பார்த்துடறேன்” அவள் பரணில் இருந்த பொருட்களை பார்த்தாள்.