இன்றும் அவ்வாறு செய்யப் போக அவளைத் தடுத்தான் தாஸ். இருவருக்கும் வாய்சண்டை வராமல் கைச்சண்டை ஆரம்பித்தது. அவள் தாஸின் முடியை பிடித்து இழுக்க அவன் சத்தம் வராமல் அவளது கையை பிடித்து தடுக்க இப்படியே இருவரும் சண்டையில் இருந்த சமயம் தியானம் முடிந்து கண்கள் திறந்தான் தேவநாதன். எதிரில் இருவரும் சண்டை போடுவதைக் கண்டு சிரித்தவன்
”சுப்ரஜா” என பாசமாக அன்பாக அழைத்தான் தேவநாதன். அவனின் மென்மை குணம் வெளிப்படுவது அவளிடம் மட்டும்தான்
”மாமா” என கத்திக் கொண்டு தாஸை விட்டு ஓடி அவனது மடியில் அமர்ந்துக் கொண்டாள் 3வது வகுப்பு படிக்கும் சுப்ரஜா
”என்னடா பட்டுக்குட்டி இங்க என்ன செய்றீங்க?”
“மாமா இன்னிக்கு இன்னிக்கு ஸ்கூல்ல டெஸ்ட் அதான் பிள்ளையாரை பார்த்துட்டு போறேன்”
“ஓ சரி சரி என்ன டெஸ்ட்”
”அது இதான் கணக்கு டெஸ்ட்” என அவள் சொல்ல அவன் சிரித்துக் கொண்டு
”பயப்படாத நீ நல்லாவே டெஸ்ட் எழுதுவ, ஸ்கூல் போகலையா வா பஸ் வந்திருக்கும் வாங்க வாங்க” என அவளை தூக்கிக் கொண்டு நேராக தன் வீட்டுக்கு நடந்து வந்தான்.
வீடும் கோயிலும் அவனது ஒர்கஷாப் மற்றும் லாரிட்ரான்ஸ்போர்ட் கூடவே அவனது கன்ஸ்டரக்ஷன் ஆபிஸ் அனைத்தும் ஒரே தெருவில் ஒரே வரிசையில் அமைந்திருக்கும், அனைத்துமே நடந்து செல்லும் தூரத்தில் இருப்பதால் பெரியாளாக ஊரில் வலம் வந்தாலும் எளிமையான குணம் அவனிடம் நிறையவே உண்டு. எதற்காகவும் அலட்டிக் கொள்ளாமல் அனைவரின் முன்பும் தன் தொழில் வளமையை காட்டி உச்சானிக் கொம்பில் நிற்காமல் சாதாரண மனிதனாக வாழ்பவன் தேவநாதன்.