”வேண்டாம்” என ஒற்றை வார்த்தையில் ஐயரை அடக்கிவிட்டு பிள்ளையாரை பார்த்து கைகூப்பி கும்பிட்டு அங்கிருந்து விலகி பிரகாரத்தை வலம் வந்தான்.
அவன் பின் அவனுடைய நண்பன் தாஸ் இருந்தான். அவன் ஒரு ஊமை, சிறு வயதிலிருந்து இருவரும் ஓடிப்பிடித்து விளையாடி பழக்கம் இன்றுவரை அவனை தன்னுடனே வைத்திருந்தான் தேவநாதன்.
தாஸ் போல விஸ்வாசமானவர்கள் உலகில் எங்கு தேடியும் கிடைக்கமாட்டார்கள் அப்படி ஒரு விசுவாசம். நண்பனாகவே இருந்தாலும் தேவநாதன் மீது சிறிது பயமும், மதிப்பும், மரியாதையும் அவனிடம் உண்டு
அவனுக்கு மட்டுமல்ல அந்த ஊரில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் அவனையும் அவனது குடும்பத்தையும் நன்கு தெரியும். தேவநாதன் மீது மக்களிடம் மரியாதை உள்ளது, அந்த மரியாதையை விட 10 மடங்கு பயமும் உண்டு. காரணம் தேவநாதன் நியாயமாகப் பேசுபவன் உண்மையை மட்டுமே உரைப்பவன். அந்த ஊரில் பஞ்சாயத்து நபர்கள் 10 பேர் இருந்தால் அதில் இவனும் ஒருவன். தலைவர் இருந்தாலும் இவனிடமே அனைவரும் நியாயம் கேட்பார்கள். இவனது நியாயம் உண்மை பக்கமே இருக்கும் அதனால் அனைவரும் அவனைப் பார்த்து அஞ்சுவார்கள்.
தப்பு செய்தால் திட்டுவது, திட்டியும் மாறாமல் இருப்பவனை அடிப்பது, அடித்தும் திருந்தாதவனை தனது லாரிகள் ரிப்பேர் செய்யும் ஒர்க்ஷாப்பில் 1 வருடத்திற்கு வேலைக்காரனாக மாற்றுவது. அதிலேயே அவர்கள் திருந்திவிடுவார்கள். அப்படியும் திருந்தாமல் தவறுகள் தொடர்ந்து செய்து வந்தால் அவன் திருந்தும் வரை அவனிடம் அடிமையாகவே இருக்க வேண்டும். அதற்காக அவன் கெட்டவன் அல்ல, கொடுமைக்காரன் அல்ல, நல்லவன், நம்பி வந்தவர்களை கைவிடாதவன்.
அவனிடம் அடிமையாக இருப்பவர்கள் திருந்தி நல்ல வழிக்கே செல்வதால் வீட்டுக்கு அடங்காத பிள்ளையை அவர்களது பெற்றோர்களே கொண்டு வந்து தேவநாதனின் ஒர்க்ஷாப்பில் விட்டுச் செல்வார்கள்.