வீடு நோக்கி வரும் போதே ஸ்கூல் பஸ் வந்துவிட
”மாமா பஸ் வந்துடுச்சி இறக்கி விடு இறக்கி விடு” என கத்த அவனும் இறக்கி விட திபு திபுவென ஓடினாள் சுப்ரஜா. அவளின் ஓட்டத்தைக் கண்டு சிரித்தபடியே நடந்தான் தேவநாதன். அவளும் பஸ் ஏறி சென்றதும் வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு தயாராக வேலை காத்துக் கொண்டிருந்தது.
அந்த வீட்டில் அவனது முடிவுக்கு எதிராக யாரும் செயல்படுவதில்லை ஒருவரைத் தவிர அவர் அவனது தாய்மாமன். பெண்களை பெற்றிருக்கிறார் ஒருத்தியை தேவநாதனுக்கு மணமுடிக்க விரும்புகிறார். அவனது தாயின் உறவு என்பதால் அதைக்காட்டியே அந்த வீட்டில் அடைக்கலமானவர். பெரிய கூட்டுக்குடும்பம் அது தாத்தா, பாட்டி, அப்பா, சித்தப்பா, அவர்களது பிள்ளைகள், தாய்மாமன் குடும்பம் என எப்படியும் 10 பேருக்கு மேல் இருப்பார்கள்.
முக்கியமான விசயங்கள் எதுவானாலும் மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஏதாவது தவறு என தேவநாதனுக்கு தெரிந்தால் அதை செய்ய விடாமல் தடுத்து விடுவான். அவனது பேச்சு, நடத்தை, கம்பீரம், ஊரில் அவனுக்கு இருக்கும் மதிப்பு மரியாதை கூடவே பயம் அனைத்தையும் கண்டு வீட்டிலும் அவனை அனைவரும் அதே போல மதிப்பு கொடுத்து கொண்டே சிறிது பயத்தில் ஒதுங்கி நிற்பார்கள். அவனாக இந்த மதிப்பையும், பயத்தையும் கேட்கவில்லை தானாகவே கிடைத்தது. அதற்காக தன்னை மாற்றிக் கொள்ள அவனும் முயலவில்லை. மற்றவர்களை தனக்காக மாற்ற நினைக்கவும் இல்லை.
வீட்டுக்குள் வந்ததும் அவனது பாட்டியின் கையால் செய்த களியையும் கீரை குழம்பையும் சாப்பிட்டு முடித்த நேரம் அவனது நண்பன் விக்ரம் போன் செய்தான்
”ஹலோ அண்ணா வீட்ல இருக்கீங்களா கோயில்லயா” என பணிவாக கேட்க
”எத்தனை முறை சொல்றது நான் உன் ப்ரெண்ட், ஒரே காலேஜ்ல படிச்சோம், வேற வேற டிபார்ட்மெண்ட்னாலும் நீயும் இன்ஜினியர்தானே எதுக்கு என்னை அண்ணாங்கற பேர்