அந்தளவுக்கு மக்கள் தேவநாதனை புரிந்து வைத்திருக்கிறார்கள். அவன் தங்கியிருக்கும் வீடு உள்ள ஏரியா அவனது கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த ஏரியாவில் ஒரு சின்ன தப்பு நடந்தாலும் சில நிமிடங்களில் அவன் காதை எட்டிவிடும். சிறந்த பக்திமான். தினமும் காலையில் கோயிலுக்குச் செல்லாமல் வேறு எந்த வேலையையும் ஆரம்பிப்பதில்லை.
இன்றும் அப்படித்தான் வழக்கம் போல் கோயிலுக்கு வந்த தேவநாதன் தாஸுடன் கோயிலைச் சுற்றிவிட்டு காலியான இடத்தில் அமர்ந்துக் கொண்டு கண்கள் மூடி தியானிப்பவன் போல 108 முறை கையில் ருத்ராட்சத்தை உருட்டிக் கொண்டே ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி முடிப்பான். இது அவனது வழக்கம்.
ஸ்கூல், காலேஜ் வரை பேண்ட் சர்ட்டில் உலா வந்தான். இன்ஜினியரிங் படிப்பு முடிந்து வீடு மற்றும் கடைகள் கட்டுமான வேலை செய்வதாலும் குடும்பத்தில் மூத்தவன் என்ற அந்தஸ்தாலும் பெரும்பாலும் எல்லா நேரமும் வேட்டி சட்டையிலேயே இருப்பான். அவனது திடகாத்திரமான உடலுக்கு அந்த உடை மிகவும் எடுப்பாக இருக்கும்.
கோயில் சிலைகளில் இருக்கும் ஆண் சிலைகளுக்கு நிகராக உடல்வாகுடன் இருப்பவன். அவன் சிரித்தால் தனி அழகுதான், மாநிறமே ஆனாலும் சூரியனது பிரகாசம் அவனது முகத்தில் பிரதிபலிக்கும் யாராக இருந்தாலும் அவன்பால் கவர்ந்திழுக்கும் ஏதோ ஒன்று அவனிடம் இருந்தது.
அவனை பத்திரமாக பார்த்துக் கொள்வது தாஸின் வேலை. அதற்கு காரணம் எந்தளவுக்கு தேவநாதன் மக்கள் இடத்தில் நல்மதிப்பு பெற்றிருந்தாலும் அவனுக்கென்று தொழில் எதிரிகள் உள்ளனர். அவர்களில் யாராவது அவனை ஏதாவது செய்ய வாய்ப்பிருக்கும் என தாஸ் அஞ்சுவான் அதற்காகவே கவனமாக பார்த்துக் கொள்வான்.
அவன் தியானத்தில் இருக்கும் போது யாரும் அவனை தொல்லை செய்யக் கூடாது. செய்தால் கோபம் வரும் ஆனால் ஒருத்தி செய்வாள். அது அவனது முறைப்பெண் சுப்ரஜா. சிறுவயதில் இருந்தே அவன் தூக்கி வளர்த்த பெண் ஆவாள். அவன் தரையில் உட்கார்ந்தால் போதும் ஓடி வந்து அவன் மடியில் அமர்ந்துவிடுவாள்.