வைத்தி என்று திருமணம் என பேச்சு எடுத்தானோ அன்றிலிருந்து தாமரைக்கு அவன் மீது தனி மரியாதை, மதிப்பு வந்தது. அன்று வரை ஏக வசனத்தில் பேசியவள் அதன் பிறகு மரியாதையாக பேசலானாள். அது அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது.
சுந்தரத்திடம் இது போன்று விசேஷமாக அவள் நடந்துக் கொள்ளாதது கண்டு அவன் வேண்டுமென்றே நான் பாடம் கற்றுத் தருகிறேன் என்னை சார் என கூப்பிடு என வற்புறுத்தி மரியாதையை கேட்டு வாங்கிக் கொண்டான். ஆனாலும் அவளை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆசையாகவே அவளிடம் அன்பாக பேசினாலும் வைத்தி அவளுக்கு காட்டும் வசதிகளை தன்னால தர முடியாமல் போனாலும் ஏதோ படிப்பாவது தர முடிகிறதே என நினைத்து சந்தோஷப்பட்டான். நாட்கள் வேகமாக ஓடியது.
அடுத்த வருடமே தாமரை பெரியமனுஷியாகவும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து கொள்ள இப்போது வைத்திக்கு கஷ்டமாகிப் போனது. தனது ஒரு கையை இழந்துவிட்டதாகவே நினைத்தான்.
அந்தளவிற்கு அவள் மீது அவன் அன்பு வைத்திருந்தான். அவள் வராத நாட்களில் அவனுக்கு பள்ளிக்கூடம் போகவே பிடிக்கவில்லை. சுந்தரத்திற்கு மட்டும் நிம்மதியாக இருந்தது. 15 நாட்கள் வைத்தியின் சோகமான முகத்தையும் சரியாக படிக்காமல் வாத்தியாரிடம் திட்டும் அடியும் வாங்கியதைக் கண்டு உள்ளுக்குள் சந்தோஷப்பட்டான்.
சில நாட்கள் கடந்து மீண்டும் வைத்தியின் முகத்தில் மகிழ்ச்சி கரை புரண்டோடியது
”என்னடா வைத்தி ரொம்ப சந்தோஷமா இருக்க என்ன விசயம்”
“நான் தாமரையை பார்த்தேன்”
“அப்படியா பள்ளிக்கூடத்துக்கு வந்தாளா”