”என் கூடவே இரு” என அவன் சைகையில் சொல்ல அவனும் அதற்கு ஒப்புக் கொண்டான். அதற்குள் பாட்டியே வந்தார்
”சாப்பிடலியா நீ” என கேட்க
”எல்லாருக்கும் போடு தாமரை சரண்யா கிட்ட மட்டும் ஏன் தனியா டிபன் கொடுத்துவிடற”
”ஏன் அவள் கொடுத்தா நீ சாப்பிட மாட்டியா சாப்பிடு”
“மாட்டேன் எனக்கு அவளை பிடிக்கலை. பிடிக்காதவ கையால சாப்பிடறது கூட எனக்கு வெறுப்பா இருக்கு” என சொல்ல
”நீதான் வேணும்னு கல்யாணம் பண்ணிக்கிட்டா, இனி இந்த உறவை மாத்திக்க முடியாது, அப்படியிருக்கறப்ப அதை ஏத்துக்கறதால என்னாயிடப் போற நீ”
“ஓ அப்படியா தாமரை, அதை நீ சொல்றியா, உன் கல்யாணம் கூடதான் கட்டாயமா நடந்துச்சி. நீ என்ன அந்தாளோட சந்தோஷமாவா வாழ்ந்த இல்லைல்ல ஆனாலும் குழந்தை பெத்துக்கிட்ட பேரன் பேத்திகளே வந்துடுச்சி. ஆனா இப்பவும் நீ அந்த டாக்டரை ஏத்துக்கலை என்னை மட்டும் ஏன் கட்டாயப்படுத்தற” என அவன் கேட்கவும் தாமரைக்கு ஒரு மாதிரியாகி போனது. அவரது கவனம் சுந்தரத்தின் மீது தாவியது
”என்னதான் கட்டாய திருமணம் என்றாலும் அவருடன் இருந்த நாட்களில் என்னை ஒரு மகாராணியாகவே சுந்தரம் நடத்தி வந்தார். எனக்கு தேவையான அனைத்தும் செய்தார். எனக்கு பிடிக்காத விசயத்தை அவரும் செய்யாம விட்டாரு. இப்ப தேவாவும் சரண்யாவும் இருக்கற மாதிரிதான் நானும் அவர் கூட இருந்தேன். ஆனா தேவா தெளிவா பேசறான், பிடிக்கலை அதனால வாழ முடியாதுன்னு அப்ப நானும் பிடிவாதமா அவர்கூட வாழாம இருந்திருக்கனும், குழந்தைகளை பெத்துக்காம இருந்திருக்கனும் தப்பு பண்ணிட்டேன்” என நினைத்துக் கொண்டு சோர்வாக சோபாவில் அமர்ந்துவிட அதைப்பார்த்த தேவாவிற்கு கஷ்டமாகிப் போனது