“ பாவம் மது…என் கிட்ட வந்து இப்படி மாட்டிக்கிட்டியே” என்று சிரித்தாள் நிலா.அவள் சொன்னது தங்களுக்கு கேட்காவிடினும் அவள் முகத்திலும் இருந்த புன்னகை அனைவரின் முகத்திலும் குடியேறியது. தேன்நிலாவின் முகத்தை இமைக்காமல் ரசித்தபடி அவள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தான் மதியழகன். இதுவரை நிலவின் நிழலாய் இருந்தவன், இப்போது அந்த நிலவின் நிஜமாகினான்.
அதேநேரம், அங்கு கையில் ஒரு குழந்தையுடன் நின்றிருந்த காவியதர்ஷினியை உரசியபடி நின்றான் கதிர்,
“ அஹெம்..என்ன கதிர்?”
“ கையில் யாரோட பாப்பா தர்ஷினி?”
“ ஹ்ம்ம்ம்,என் குழந்தை தான்”
“ அடிப்பாவி.. என்கிட்டயே இப்படி சொல்லுறியே என்ன தைரியம்?”
“ஆமா,லவ் சொல்றதுக்கே இத்தனை மாசம் ஆச்சு..இதுல கல்யாணம் ஆகி பாப்பா வந்து..ரொம்ப லேட் ஆகிடும்ல அதான்”என்றுஅவள் குறும்பாய் கண்ணடிக்க,அவள் தலையில் லேசாய் கொட்டினான் கதிர்..
அதே நேரம் முகில்மதியை பார்த்து பெருமூச்சு விட்டான் எழில்.
“என்ன பெருமூச்சு?”
“இப்படி எல்லாருடைய கல்யாண சாப்பாட்டையும் சாப்டுட்டே இருந்தால் நான் குண்டாகிருவேன்”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“ஆகிட்டு போங்க”
“அடிப்பாவி ,நான் சிக்ஸ் பேக்ஸ் இருக்கும்போதே கல்யாணம் பண்ணிக்கனும்னு இருக்கேன்.”
“அதுக்கு?”
“நாம எப்போ கல்யாண சாப்பாடு போடுறது?” என்று அவன் சோகமாய் கேட்க கதிரை அழைத்து கொண்டு, எழிலின் அருகில் வந்த ஷக்தி அவன் தோளில் கை வைத்து
“அடுத்து உங்க கல்யாணம் தான்” என்றான். முகில்மதியும் , தர்ஷினியும் முகத்தை அஷ்டக்கோணலாய் வைத்துக்கொள்ள, ஷக்தி தான் சொன்னதை மீண்டும் நினைத்து பார்த்தான். அவன் ஆண்கள் இருவரின் தோளில் கைவைத்து அப்படி சொன்னதும் அதன் அர்த்தம் வேறாய் மாறி போனதையும் உணர்ந்து அவன் முகமும் மாறிட கேலியாய் சிரித்தாள் புவனா.
“ ஹா ஹா என்ன ஷக்தி இது?ரெண்டு பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சு கின்னஸ்ல பேரு வாங்க ட்ரை பண்ணுறியா?” என்று கேட்க அவளை முறைத்தான் ஷக்தி.
மணமக்களை வாழ்த்தி ஒவ்வொருவராய் பரிசு கொடுக்க, அந்த சூழ்நிலையை ரம்யமாக்கும்படி, அந்த பாடலை ஒலிபரப்பினாள் புவனா.
“ நீ பார்த்திடல் அழகு
நீ பேசிடல் அழகு
நீ ரசித்திடல் அழகு
அதனால் நான் அழகு”.. அந்த பாடலை ஒலிபரப்பிய புவனாவை முதல் முறையாய் பாராட்டிய நிலா, அனைவரின் முன்னிலையிலும் மதியழகனின் கரத்தை பினைத்து கொண்டு நெருங்கி அமர்ந்தாள். மற்றவர்கள் கேலி செய்வதையும் பொருட்படுத்தாமல் அவன் கரம் கோர்ப்பதும் கன்னத்தில் முத்தமிடுவதுமென அவள் சில்மிஷம் புரிய, அவளுக்கும் சேர்த்து மதியழகன் தான் வெட்கப்பட்டான். சுஜா, ப்ரியா, மது,மலர்,மீனு, கீர்த்தனா அறுவரும் மதியழகன் நிலாவை அணைத்து நிற்பது போல ஆளுயர ஓவியத்தை பரிசாய் தந்தனர். சங்கமித்ராவும், ஷக்தியும் புதுமண தம்பதியருக்கு தேன்நிலவு செல்வதற்காக டிக்கெட்டை பரிசாய் கொடுக்க,
“ ஹனிமூனுக்கே ஹனிமூனா?” என்று கண்ணடித்தாள் புவனா. அவள் கேள்வியில் நிலா முகம் சிவக்கவும், “பரவாயில்லை புவன்.. நிலாவையே வெட்க்கப்பட வெச்சுட்ட நீ” என்று ரஞ்சன் அவளை பாராட்ட, “அப்படி சொல்லுங்க ரஞ்சு” என்று புவனாவும் குழைய அனைவரின் கண்களும் இப்போது ஆர்வமாய் அவள் மீது படிந்தது.
“ஐயய்யோ.. எல்லாரும் ஒன்னு கூடிட்டாங்களே” என்று முணுமுணுத்த புவனா,
“ அண்ணா உங்க பரிசை கொடுக்கலையா” என்றாள். சரியான நேரத்தில் அந்த பேச்சை எடுத்த தங்கையை பார்வையாலேயே மெச்சினான் மதியழகன். நிலா ஆர்வமாய் மதியழகனை பார்க்க, நிலாவின் மென்கரங்களில் அந்த பெண் குழந்தையை கொடுத்தான் மதியழகன்.
“ மது..இது நிரூவோட பொண்ணு தானே?”
“ம்ம்ம்ஹ்ம்ம் இனிமே இவ நம்ம பொண்ணு” என்றான் மதியழகன். நிலாவின் காயத்திற்கு தங்களது திருமணத்தை விட இந்த குழந்தை தான் பெரிய மருந்து என்பதை உணர்ந்திருந்தான் மதியழகன். நிலாவுக்கு நிரூவின் மகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், தன் ஒருத்தியின் விருப்பத்தை மதியின் மீது திணிக்க கூடாது என்று நினைத்தாள் அவள். ஆனால், மதியழகன் அதை கண்டுபிடித்துவிட்டான்.. அவனைப்பொறுத்தவரை இது ஒரு தியாகமோ அல்லது கடமையோ இல்லை.அந்த குழந்தையை தன் சொத்தாய் தான் பார்த்தான் அவன். அதுவும் நிலாவை போலவே கன்னக்குழி விழ சிரிக்கும் அந்த சிசு, அவனுக்கு அவனின் மகளாகவே தான் தெரிந்தாள்..