டிசம்பர் 14, வியாழக் கிழமை!!!!!
எப்பொழுதும் போல அதிகாலையில் விழித்து விட்ட அஞ்சனாவிற்கு ஏனோ அன்று மனதே சரியில்லை! அன்றைய நாளில் நடக்க போகும் விபரீதமும்.. பின்னாளில் அது கொண்டு வரும் துன்பங்களையும் உணர்த்துவதற்காகவோ என்னவோ உள்மனம் அப்படி நிம்மதியில்லாமல் இருந்தது!!!!
பொதுவாக எதிர்மறை எண்ணங்களை தலை தூக்க விட மாட்டாள். அன்றும் அப்படித் தான்.. உடன் படுத்திருந்த சைலஜாவின் தூக்கத்திற்கு இடையூறு செய்யாது எழுந்து பால்கனிக்கு வந்தவளை அழைத்தது நீலக் கடல்!!!
தினமும் சில நொடிகள்... அங்கு நின்று கடல் அன்னையின் தாலாட்டை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்பவளுக்கு... இன்று ஏனோ மனம் அதன் அரவணைப்பை நாட... கரையை நோக்கி விரைந்தவள்.... சிறிது நேரம் அலையோடு விளையாடி விட்டு வீட்டிற்குள் திரும்பினாள்!
உள்ளே வந்ததும் சுடச் சுட டீயுடன் வரவேற்ற சைலஜாவை ஆச்சரியமாக பார்த்த அஞ்சனாவிடம்,
“அங்கிள் நீ கடலுக்கு போறதை பார்த்ததுமே எனக்கு போன் பண்ணிட்டார்!”, என்றார்! கமிஷினரின் போலீஸ் கண்கள் அவள் பாதுகாப்பை எப்பொழுது உறுதி செய்து கொள்ளும்! பின்னே, தன்னை நம்பி ஒப்படைத்து இருக்கிறார்களே!
ஆம், சிபிக்கு குணமாகும் வரை, பவதாரிணியால் அடிக்கடி சென்னை வர முடியாது என்பதால் அவளை சைலஜா வீட்டிலே இருக்குமாறு சொல்லி விட்டார் சொக்கர்! கூட்டு குடும்பத்தில் வளர்ந்த அஞ்சனாவிற்கும் தன் ஆண்ட்டி, அங்கிளுடன் இருப்பது தான் விருப்பமாக இருந்தது!
இவள் டீயை குடிக்கும் பொழுது சைலஜாவின் கணவர் வாக்கிங்கை முடித்து விட்டு திரும்பியவர்.. அவர் அதிகம் பேசாதவர்! இவளைப் பார்த்ததும் ஒரு புன்னகையை மட்டும் சிந்தி விட்டு போகப் பார்க்க..
“அங்கிள் எனக்கு ஒரு டவுட்”, என்று அவரை நிறுத்தியவள்..
“நீங்க பேசுறதுக்கே கமிஷன் கேட்கிறதாலே தான் உங்களை கமிஷனரா போட்டாங்களா?”, என்றதும்..
“ஹா.. ஹா...”, என்று அந்த வீடே அதிரும் அளவிற்கு அவர் பெரிதாக சத்தமெழுப்பி சிரிக்க.. சைலஜாவிடம் போய் அஞ்சனா பம்மி..
“இடின்னா பயம் எனக்கு!”, என்று பயந்து போனவள் போல அவரை கிண்டல் செய்ய... அதற்கும் இடிச் சிரிப்பு சிரித்தவர்..
“நீ இருந்தா வீடே கலகலப்பா இருக்கு!”, என்றார்!
அதன் பிறகு குளித்து, சாமி கும்மிட வந்த பின்னும்.. அவர் சொன்ன வார்த்தை காதுக்குள்ளே ஒலிக்க... அந்த வார இறுதியில் ஊருக்கு போகலாமா என்று நாளேட்டைப் பார்க்கும் பொழுது தான்....
அன்று டிசம்பர் 14 என்பது உரைக்க.. பரணிதரனை காட்ட சொல்லி பெல்லி பாயிடம் வைத்த ஒரு மாத கணக்கு நாளையோடு முடியப் போகிறது என்பது நினைவிற்கு வந்தது!
இன்னும் ஒரே ஒரு நாள்... இத்தனை நாளில் நடக்காததா.. நாளைக்கு நடக்க போகிறது!!! என்று அதுவரை அவளை இயக்கிய இறை நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் குறைய ஆரம்பித்திருக்க..
‘அந்த பரணிதரனை பார்க்க முடியாதா? எனக்கு காதலிக்க வாய்ப்பு அவ்வளவு தானா பெல்லி பாய்! வருணை கல்யாணம் செய்யணும்ன்னா அவனை எனக்கு காட்டி இருக்க வேண்டியது தானே! ஆசை காட்டி மோசம் பண்ற! போ பெல்லி பாய்.. ’,
என்று கடவுளுடன் சண்டை போட்டு உள்ளுக்குள் சோர்ந்தவளாக பால்கனி பக்கம் சென்றால்....
அங்கே பவதாரிணியுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த சைலஜா அன்று ஆர்யமனுடன் அஞ்சனா ஒரே குடையின் கீழ் வந்த காட்சியை மனதிற்குள் கொண்டு வந்தவராக...
“அந்த வருண் நல்ல உயரமா இருப்பானா? நம்ம அஞ்சு உயரத்துக்கு மாப்பிள்ளை ஆறு அடியாவது இருந்தா தான் நல்லாயிருக்கும் பவா.. ”, என்று சொல்லிக் கொண்டிருக்க...
அதைக் கேட்ட அஞ்சனாவிற்கு எரிச்சலாக இருந்தது! ‘எப்ப பாரு கல்யாணத்தை பத்தியே பேசிகிட்டு!!!’
எரிச்சலாகி போனவள்... மனதை திசை திருப்ப அலைபேசியை எடுத்து வந்து சோபாவில் அமர.. கடைசியாக வாசுவிற்கு அனுப்பிய செய்தி கண்ணில் பட்டது!
நேரிலும் பேச விடாமல், அலைபேசியிலும் தொடர்பு கொள்ள வழியின்றி இவள் எண்ணையே ஆர்யமன் ப்ளாக் செய்து வைத்திருந்தான்.
கடைசி முயற்சியாக திருமண வீட்டில் வாசுவின் அலைபேசிக்கு ஒரு ஆடியோ ஃபைல்லை அனுப்பி அதை ஆர்யமனுக்கு ஃபார்வேர்ட் பண்ண கேட்டிருந்தாள்! நான்கு நாட்களாக வாசு அதற்கு எந்த பதிலையும் கொடுக்காமல் இருக்க...
“ஆர்யா அந்த ஆடியோவை கேட்டாரா வாசு? காலங் கடந்த மன்னிப்பு பிரயோசனப்படாதுன்னு தாத்தா சொல்வாங்க! என்கிட்ட பேச வேண்டாம்! அதை கேட்கவாவது சொல்லுங்க ப்ளீஸ்!”, என்று மறுபடியும் குறுந்தகவல் அனுப்பி விட்டு பதிலுக்காக காத்திருந்தாள்!
அதை படித்த வாசு.. நேராக ஆர்யமனிடம் சென்று அதைப் பற்றி கேட்க…
அன்றோடு கடைசி நாள் என்பதால் அலுவலகம் கிளம்பும் பரபரப்பில் இருந்த ஆர்யமன், அவன் சொன்னதைக் கேட்ட படி shoe வை மாட்டி விட்டு நிமிர்ந்தவன்.. அவனைப் பார்த்து,
“அந்த ஆடியோவை நீ எனக்கு அனுப்பிய செகண்டே டெலீட் செய்துட்டேன்! ஹூம்.. பாஸ்வேர்ட் வைக்க சொன்ன நீயே அவ டார்ச்சரை அனுபவி! ”, என்று அலட்சியமாக சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியேற...
“ஹூம்கும்.. அந்த பொண்ணு என்ன ஐ லவ் யுன்னு சொல்லயா துரத்துது ஸாரி சொல்ல தானே! எதுக்கு இவ்வளோ கெத்து காட்டுறே நீ!”
என்று வாசு சொன்னதை எதையும் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை! அதற்குள் வண்டியை கிளப்பி பறந்திருந்தான் ஆர்யமன்.
“ஸாரிங்க என்னாலே அவனை கன்வின்ஸ் பண்ண முடியலை”, என்று வாசுவின் செய்தி தான் அஞ்சனாவை பெருங்கவலையில் ஆழ்த்தியது!
தன் தவறுக்கு என்ன மாதிரி தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கட்டும்.. ஆனால் விலக்கி வைத்து தண்டிப்பது பெரும் வேதனையாக இருந்தது - அவனிடம் அவளை பிணைக்கும் உணர்வு அப்படி ஒரு அளவுகடந்த பாசத்தை விதைத்திருந்தது!
ஆனால், அதற்காக அப்படியே சோர்ந்து அமர அது அஞ்சனா இல்லையே!!! எப்பொழுதும் போல அலுவலகம் கிளம்பி சென்றாள்! ஆனால், அங்கு வந்த பின் தான் சசி அன்று முகுந்த் டீம்முடன் டூர் போயிருப்பது அவளுக்கு நினைவிற்கு வந்தது!
இந்த ஒரு மாத காலத்தில் தன் மனதிற்கு நெருக்கமாக கருதியது சசியையும், ஆர்யமனுமே! ஆர்யமனின் விலகல் ஒருபுறம் பெரிதாக மனதை தாக்க.... சசி இல்லாமல் போனது அதை இன்னும் அதிகப் படுத்தியது!
தன்னை சுற்றி அத்தனை பேர் இருந்தாலும், அன்று தான் முதல் முறையாக யாருமே இல்லாதது போல ஒரு உணர்வு அவளுக்குள்!!! அந்த தனிமை அவள் பழகாத ஒன்று!