பொதுவாக சகோதர்களில் மூத்தவன் அரியணையில் அமர்ந்தாலும் அனைத்து இளவல்களும் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பேற்று முழு உரிமையுடன் ஆள்வதுதான் பாண்டியர் முறைமை….. அதைக் கூட கையாளவில்லை தலை சிறந்த நிர்வாகியான குலசேகர மன்னர்…. அத்தனையாய் காலம் செல்ல செல்ல தன் முடிவுகளின் மீது ஸ்திரத்தன்மையை இழந்திருந்திருக்கிறார் அவர் என்பது என் புரிதல்….
ஆக அத்தகைய ஒரு உறவுக்குள் நுழைவதில் எனக்கு உடன்பாடு இல்லை…. பிறப்பைப்போல் மரணத்தைப் போல் விவாஹமும் ஒரு முறை மாத்திரமே வர வேண்டும் என் வாழ்வில் என்பது என் முடிவு… “ தன் கருத்தை மிக சாதாரணம் போல் விளம்பினான் பராக்கிரமன்.
ஏற்கனவே பல தருணங்களில் மானகவசனின் கருத்துக்களிலும், அவனது சிந்தனா மேன்மையிலும் கவரப்பட்டவள் தான் ருயம்மா…..ஆனால் இது உச்சம்.
பிரமித்தாள், பதுமையாய் சமைந்தாள், பேச்சிழந்து நின்றாள் என்பதல்லாம் அவளது அந்நேர நிலையின் சிறு பங்கை கூட சரியாய் சொல்லிவிடும் வார்த்தைகளாகாது.
இன்னுமே கூட இவள் புறம் பாராமல் கடல் நோக்கியே அவனது கம்பீர முகம்…..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 01..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்...
“என் தகப்பனார் நாடிழந்த பாண்டிய வேந்தரின் வம்சம்……அவரது குமாரனாய் நான்…. பாண்டிய வேந்தர்களாகிய நாங்கள் எதோ சில குடும்பங்களின் சிறு கூட்டம் இல்லை….. ஆயிரமாயிரம் காலமாய் இப் பிராந்தியத்தியத்தின் ஆதி குடிகளாய் லட்சோப லட்ச குடும்பங்களாய் வாழ்ந்து வருபவர்கள்…… ஒரே தாய் தகப்பனின் வழி வந்தவர்கள்…..அனைவரும் ரத்த உறவினர்…..ஓர் இனம் நாங்கள்……
ஆட்சியிலிருப்பவன் பதவி இழப்பதில் வரும் சாபக் கேடு இது…… உமக்கும் தெரிந்திருக்குமே ருயமரே…..அடுத்து பதவி ஏற்பவன் முந்தைய ஆட்சியாளனை வேட்டையாடுவான் என்பதோடு அவனது இனத்தாரை பிரித்து வைத்து அடிமை படுத்தி அடக்கியும் வைப்பானே……
அவர்கள் மீண்டுமாய் இணைந்து தங்கள் இனத்தான் ஒருவனை….தன் முந்தைய மன்னரின் வாரிசை மன்னராக்கிவிடக்கூடாது என்ற அச்சத்தின் நிமித்தம் இவ்வாறு செய்வது உலக இயல்புதானே….
அது தான் நடந்தது எங்களவருக்கும்….. அச் சூழலில் வளர்ந்தவன் நான்… எங்களவர் பாடுக்குள்ளாவதைப் பார்த்துக் கொண்டு வாளாதிருக்க எனக்கு இயலவில்லை….மீண்டும் படைதிரட்டி இப்போதிருக்கும் பகுதிகளை மீட்டெடுத்து ஆட்சி அமைத்தேன்….
இதில் இன்னொன்றும் இருக்கின்றது…..
சங்க கால பாண்டியர்களின் ஆட்சி முறையைத்தான் சரித்தரம் மிக சிறந்த ஆட்சி முறையாக குறிப்பிடுகிறது….. எனக்கு பரிபூரண திருப்தி தரும் முறையும் அதுவே…. அதில் இன்றைய நிலையில் ஏராளமான சமூக மாற்றங்கள்….. அவற்றில் பல நல்லதற்கானவையும் இல்லை…. நல்ல மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, அத் தீங்கான மாற்றங்களை மாத்திரம் நீக்கி நான் மீண்டுமாய் அக்கால பாண்டியர் முறையை எந்நாட்டில் மீட்டெடுக்க கனா காண்கிறேன்….” இரு நொடிகள் அமைதியாய் அந்த கடலையே பார்த்திருந்தான் பராக்கிரமன்.
பக்கவாட்டில் நின்றிருந்ததால் அவனது வலபாக வதனம்தான் தெரிந்தாலும், அவனையே கண் கொட்டாது பார்த்திருந்தாள் ருயம்மா….. இனம் புரியா பெருமிதம் அவளுள் ஏன் தோன்றுகிறதாம்??
மீண்டுமாய் தொடர்ந்தான் அவன்.
“என்னதான் நான் மன்னன் என்றாலும் சமூகத்தில் பழக்கத்திலிருக்கும் ஒரு முறையை நான் மாற்றி அமைக்க முயலும் போது மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரலாம்…. தேனோடு கலந்து கொடுக்கப்படும் கசந்த ஔஷதம் போல் மிக மென்மையான முறையைத்தான் நான் கையாளுவேன் என்றாலும் எதிர்ப்புகளும் முறையீடுகளும் இல்லாமல் போகுமென எனக்கு தோன்றவில்லை….
அத்தோடு எந்நேரமும் சூழ்ந்து நிற்கும் போர் மேகம் மறு புறம்….
இத்தைகய சூழலில் என்னோடு இணைந்து நிற்கும் என் வாழ்க்கைத் துணைவியும் சமூக அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்காத இரும்பு மனம் கொண்டவளாய்…. அனைத்து பிரிவு மக்களையும் பாரபட்சமின்றி தாய் மனதோடு பார்ப்பவளாய்….. போர்களை வாழ்வின் ஒரு பகுதியாய் காணும் தைரியம் கொண்டவளாய்…. அமைய வேண்டும் என்பது என் புரிதல்….. “
மானகவசனாகிய பராக்கிரமன் தன் அரசியின் தகுதி என எதையெல்லாம் எதிர்பார்க்கிறான் என பேசப் பேச இங்கு ருயம்மாவின் சிந்தனைப் புரவியோ இவளது கட்டளை ஏதுமின்றியே துரித கதியில் சுயபரிசோதனையில் ஈருபட்டிருந்தது.
நான் எப்படிப்பட்டவளாய் இருக்கிறேனாம்?? தற்கொலை செய்ய இருந்த நான் தைரியமானவளா? என்னை தைரியமானவள் என ஒப்புக் கொள்வாரா இந்த மானகவசர்??
பராக்கிரமனோ தன் விளக்கத்தை தொடர்ந்தான். “இத்தகைய ஒரு பெண்ணை தேட வேண்டும் என்ற காரணத்தாலும், இதுவரை கடந்து வந்த போர்களாலும் நான் எனது விவாஹ விஷயத்தை காலம் தாழ்த்திக் கொண்டிருந்தேன்…
அச்சமயம் தான் ஏற்கனவே நடந்து கொண்டிருந்த சமாதான பேச்சுவார்த்தையின் அடுத்த சரத்து அடங்கிய ஓலை ஒன்று காகதீயத்திலிருந்து வந்து சேர்ந்தது….
சமாதன நடவடிக்கையின் அடிப்படையாய் ராஜிய விவாஹம் செய்யும் எண்ணம் உங்களுக்கு உண்டா என ஒரு வினா அடங்கிய செய்தி ஓலை அது….