"இவளுக்கு கண்ணு இல்லேன்னா அந்த வண்ணாரப் பயலுக்குக் கூடவா இல்லே? குருட்டு முண்டங்க! நேத்து சாயந்தரம்தாங்க, பார்ட்டிக்குப் போட்டுக்கிட்டேன் புதூப் பேண்ட்டு. வந்ததுமே கழட்டி ஸ்டாண்ட் மேலெ போட்டேன். மத்தியானம் தூங்கி யெழுந்திருச்சிப் பாக்கறேன். அழுக்குத் துணிங்களோட அதெ மூட்டை கட்றான் அவன் - எதிரே நின்னுட்டு வேடிக்கெப் பாக்க றாங்க இந்த அம்மா! மல்லிப் பூவாட்டம் வெள்ளெயா மடிப்பு கலெயாத பேண்ட்டு கண்ணுக்குத் தெரியல்லெ?"
நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன். என்ன இந்த மனுஷன்! இவ்வளவு சிறிய விஷயத்துக்கு...
"என்ன ராவ் சார்! பேச மாட்டீங்கறீங்க?"
"ஏன் பேச மாட்டேன்? முதல்லே நீங்க அந்த வெள்ள பேண்ட்டெ ஹாங்கர்லெ மாட்டாமெ ஸ்டாண்ட் மேலெ ஏன் போட்டீங்க?"
"ஓஹோ! லா பாயிண்ட்டு பேசித் தங்கெயெ ஜெயிக்க வெக்கணும்னு நினெக்கிறீங்களா என்ன? அதெ மட்டும் ஒரு நாளும் முயற்சி பண்ணாதீங்க. நானு என் இஷ்டம் வந்தபடி பண்ணுவேன். அவ தன் இஷ்டப்படி செய்வாளா?"
"மாமா! நீங்க ஒவ்வொரு விஷயத்தெயும் தப்பர்த்தம் பண்ணிக்காதீங்க. இதலெ இஷ்டம் வந்தபடி பண்றது என்ன இருக்குது? சாதாரணமா உங்க வீட்லே அழுக்குத் துணிங்க ஸ்டாண்ட் மேலெ இருக்கும். அங்கேயே பேண்ட்டும் இருந்தா எல்லாத்தெயும் சேத்துப் போட்டுட்டிருப்பா. கொஞ்சம் சாக்கரதெயா பார்த்திருந்தா அது அழுக்கில்லேங்கற்து தெரிஞ்சே இருக்கும்."
"ஆமாம். அவளுக்குச் சிரத்தெயா பாக்கற்துக்கு அவசியம் என்ன இருக்குது?"
"அவசியம் ஏன் இல்லே! இல்லாமெ இல்லே. பிசகா நடந்திருக்கும். ஒரு வாரத்தலெ திரும்பி இஸ்த்ரியோட வருது. ஒரு ரெண்டனா அதிகமாகும். அவ்வளவுதானே? இவ்வளவு சின்ன விஷயத்துக்கு வண்ணான் முன்னாலெ அவ்வளவு கேவலமா, மட்டமா திட்டுவாங்களா? அது யாருக்கு மரியாதெ குறெவுன்னு நினெச்சிப் பாத்தீங்களா?"
அவர் சற்றே அதிர்ச்சி யடைந்தார் - அந்தத் திட்டுகளை யெல்லாம் நானும் கேட்டேன் என்பதனால் போலும்! நான் மறுபடியும் சொன்னேன். "வெள்ளெத் துணியெப் பிசகா வண்ணானுக்குப் போட்றதுங்கற்து அவ்வளவு மன்னிக்க முடியாத குத்தம்னு சொல்றீங்களா!"
அவர் முகத்தைச் சுளித்துக் கொண்டார். "தப்பு பண்றது, மன்னிக்கற்து இதெல்லாம் எனக்குப் புடிக்காதவை! இவ்வளவு சின்ன வேலெயெக் கூடச் சரியா பண்ண முடியாமெ போனதுக்கு வெக்கப்படணும்."
"இருக்கலாம்! ஆனா கண்டிக்கற்துலெ கூட அழகு இருக்குது."