மனிதனாவாய்!
இந்தக் காலப் பெண் பெறமுடியாத நியாயத்தை வருங்காலப் பெண் அனுபவிக்க உதவி செய். இந்தக் கால ஒற்றையடிப் பாதையை நீ ராஜாபாட்டையாக மாற்றிவிடு. அப்போதுதான் நீ திறமைசாலி!
கண்ணே.......நானீ! உனக்கு என் மனத்தில் இருப்பதை யெல்லாம் சொல்லிவிட்டேன். இனி முடிக்கிறேன். பாபூ! நீ ஏன் இந்த இரவு இவ்வளவு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிராய்? என்னுடைய இந்த முடிவை நீ ஆமோதிக்கிறாயா? உன்னை விட்டுவிட்டுப் போய்விடுவதற்கு இந்த மனம் ஒப்பவில்லை உதயா! ஆனால் இது தவிர்க்க முடியாது கண்ணே!......என்னைப் போகவிடு!... நீ மாமாவுடன் சந்தோஷமாக விளையாடு!... அப்பொ போகட்டுமா?
என் கண்மணி.... உனக்கு என் வாழ்த்துக்கள்! தாயாக உனக்கு நான் ஓர் ஆணையிடுகிறேன். உனக்கு இந்தப் பிறவியைக் கொடுத்த உன் தந்தையை என்றும் வெறுக்காதே. என் சொல்லைக் காப்பாற்றுவாய். எனக்குத் தெரியும்---- அன்புடன் அம்மா!'
தாங்க முடியாத துக்கத்துடன் - "இதோ! பானு மகனுக்கு எழுதிய கடிதம், படிச்சிக்கோ" என்று சொல்லிக் கடிதத்தை மாமாவின் மேல் எறிந்தேன். அவர் நடுங்கும் கைகளுடன் கடிதத்தைப் பிரித்தார் - எல்லாவற்றையும் படித்து முடித்து முகத்தைத் தாழ்த்திக் கொண்டார்.
நானியுடன் சேர்த்து அந்தக் கடிதத்தையும் பூமாதேவியின் மடியில் புதைத்து விட்டேன்.
பானு உண்மையாகவே காகித மாளிகைதான் கட்டினாளா? மனிதனுக்கு மனிதனே மதிக்க வேண்டியது என்ற நம்பிக்கையில் தவறாக அடியெடுத்து வைத்தாளா? படிப்பு விஷயத்தில்----ஆசைகளில் ஏமாற்றங் கண்டாலும் மனமுடையாமல், அது வாழ்க்கையில் ஒரு பகுதியே தவிர வாழ்க்கை அல்ல என்று உணர்ந்து கொண்டு, உண்மையான வாழ்க்கையில் விருப்பங்களை வளர்த்துக் கொண்டு தவறு செய்தாளா? மனைவியாக, வீட்டுத் தலைவியாகத் தனக்குப் பெரியதொரு இடம் கிடைக்க வேண்டும் என்று விழைந்ததிலே பேராசைப் பட்டாளா? பெண்ணாக, தாயாகப் புனிதமான இடத்தில் இருக்க வேண்டும் என்றும், தன் குழந்தையைத் தன் கைகளாலேயே வளர்த்து அறிவுள்ளவனாக ஆக்கவேண்டும் என்ற வேட்கை கொண்டதிலே அவசரப்பட்டாளா?
எவ்வளவு சிந்தித்தாலும் இவை யாவும் உண்மையல்ல என்று தான் தோன்றுகிறது. அப்படியானால் பானுவுக்குத் தொடர்ந்து தோல்வியே ஏன் எதிர்ப்பட்டு வந்தது? எல்லா விஷயங்களிலும் சோக தேவதையே ஏன் வரவேற்பு அளித்தாள்? பானு கட்டிய தெல்லாம் பார்ப்பதற்கே தவிர அனுபவிப்பதற்கு இயலாத காகித மாளிகையாகவே ஏன் முடிந்தது? அது