மனிதன்தான் கற்றுக் கொடுத்து நீந்த வேண்டியிருக்கிறது" என்றேன்.
வழக்கம்போல் அத்தை வெந்நீர் வைத்துக் காத்திருந்தார். முன் சந்திரன் சொல்லிக் கொடுத்தது போல் பொய் சொல்லி நடிக்க முடியவில்லை. "வேண்டா அத்தை! தண்ணீரிலே குளித்தேன். நன்றாக நீந்துகிறேன். பயமே இல்லை" என்றேன்.
"உடம்புக்கு ஆகுமா? சளி பிடித்துவிட்டால்?"
"ஒன்றும் பிடிக்காது. பூச்சி பூச்சி என்று பயந்து இருந்தால் பயன் இல்லை. துணிந்துவிட்டேன்" என்று சொல்லி முடிப்பதற்குள், கற்பகத்தின் சிரிப்பின் ஒலி கேட்டது.
"தண்ணீரிலே குளிப்பதற்குக்கூட ஒரு பெரிய துணிச்சல் வேண்டுமா என்று சிரிக்கிறாள்" என்று அத்தை விளக்கம் தந்தார்.
நானும் மெல்லச் சிரித்து எட்டிப் பார்த்தேன். புன்முறுவலோடு கற்பகம் போய்க் கொண்டிருந்தாள்.
மூன்று நாள் இருந்துவிட்டுப் புறப்பட்டபோது கற்பகத்தின் முகத்தில் மலர்ச்சி இல்லை. கண்களும் கலங்கியிருந்தன. அந்த நேரத்தில் தபால்காரன் ஒரு கவர் கொண்டு வந்து சாமண்ணாவிடம் கொடுத்தான். அதைப் பிரித்துப் பார்த்த அவர், "தமிழில் எழுதக் கூடாதா? எல்லாரும் சீமையில் பிறந்து வளர்ந்ததாக எண்ணிக் கொள்கிறார்கள். வேலு! இது என்ன, பார்த்துச் சொல்" என்று என்னிடம் கொடுத்தார்.
சந்திரனுடைய கல்லூரித் தலைவரிடமிருந்து வந்த கடிதம் அது. அவன் கால் தேர்வில் பெற்ற எண்களை எழுதி, படிப்புப் போதாது. அக்கறை கொள்ள வேண்டும் என்ற குறிப்பும் சேர்க்கப்பட்டிருந்தது. சாமண்ணாவிடம் சொன்னேன்.
அவர் ஒரு பெருமூச்சு விட்டார். என்னைப் பார்த்தார் "சரி, உனக்கு நேரம் ஆகுது. பணம்தான் தண்ணீர் போல் செலவு ஆகிறது; பயன் ஒன்றும் காணோம். அவனைப் பட்டணத்துக்கு அனுப்பிப் படிக்க வைத்ததே தப்பு. என்னவோ, இவ்வளவு படித்தானே, இன்னும் கொஞ்சம் படித்து முடிக்கட்டும் என்று அனுப்பினேன்" என்று சிறிது நேரம் தரையைப் பார்த்தார்.