மறுபடியும் என் நல்ல மனம் சந்திரனுடைய அறிவையும் அழகையும் பற்றி எண்ணியது. ஒரு கால் அந்தக் கிழவி சொன்னது பொய்யாக இருக்கலாம். கிழவன் அறிவுரையாகச் சொன்ன கருத்தை அவள் மெய்யெனத் திரித்திருக்கலாம். பொதுவாக ஆணும் பெண்ணும் சிறிது நேரம் எங்காவது பேசுவதைப் பார்த்தாலும் அவர்களுக்கு விபசாரப் பட்டம் கட்டித் தூற்றுவது நம் நாட்டு வழக்கம். அதுவும் வேறு செய்திகள் குறைந்த கிராமத்தில் இப்படிப் பழி தூற்றுவது மிகுதி. ஆகையால் சந்திரனைப் பற்றிக் கிழவி சொன்னது நம்பத் தகுந்தது அல்ல. யாரோ சந்தேகப்பட்டுக் கட்டிவிட்ட கதையைக் கேட்டுக் கொண்டு வந்து அவள் கிழவனிடம் சொன்னாள் என்று எண்ணினேன்.
கிழக்கே ஊர்ப்பக்கம் திரும்பி நோக்கினேன், ஏரி நீர் சலசல என்று பல வாய்க்கால்கள் வழியாக ஓடி வயல்களில் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரு வாய்க்கால் ஓரமாக அரளிச் செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. பச்சைப் பசேலென்று இலைகளுக்கு இடையே அதே நிறமான விதைகள் பல இருந்தன. உச்சியில் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த செந்நிறப் பூக்கள் என் கண்களைக் கவர்ந்தன. கீழே இறங்கிச் சென்று ஒரு பெரிய மலர்க்கொத்தைப் பறித்தேன். சில இலைகளும் சேர்ந்து வந்தன. அதை எடுத்துக் கொண்டு கரைமேல் வந்து நின்றேன். பூக்களின் அழகும் மணமும் இன்பமாக இருந்தன. கூர்மையான முனைகளோடு நீண்டிருந்த இலைகளால் ஒரு பயனும் காணோமே என்று எண்ணினேன். இவ்வளவு அழகான பூக்களுக்கு வரும் சத்து இலைகளுக்கும் வருகிறது. ஆனாலும் இலைகளில் மணம் இல்லை: அழகும் இல்லை. அதனால் இலைகளைப் போற்றுவாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டே, ஓர் இலையை ஒடித்து முகர்ந்தேன். அதிலிருந்து கசிந்த பால் மூக்கில் ஒட்டிக் கொண்டது. அரளி விதை பொல்லாதது, நஞ்சு உடையது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இலையின் பாலும் பழமும் ஏதாவது தீமை செய்யுமோ என்று அஞ்சி மறுபடியும் கீழே இறங்கி வாய்க்காலில் நீரை எடுத்து மூக்கை நன்றாக உள்ளும் புறமும் தேய்த்துக் கழுவிக் கொண்டு வந்தேன். இலைகளை எல்லாம் ஒடித்துப் போட்டுவிட்டு, மலர்களை மட்டும் வைத்துக் கொண்டேன். கீழே உதிர்ந்த அந்த நீண்ட இலைகளை நோக்கினேன். "உங்களுக்கு ஒருவகை மதிப்பும் இல்லையா? பயனும் இல்லையா? அய்யோ! மலர்களோடு பிறந்தும், மலர்கள் பிறப்பதற்குக் காரணமாக இருந்தும், உங்களுக்கு வாழ்வு இல்லையே!" என்று எண்ணினேன். மேற்கே வேலத்து மலையின் சிகரம் சிவலிங்கம் போல் வானளாவி நிமிர்ந்து நின்றது. அதன் அடியில்தான் தாழை ஓடை இருந்தது. சந்திரனும் நானும் அங்கே போய்வந்த இன்ப நாள்