அதற்குள் சோழசிங்கபுரத்திலிருந்து பஸ் வரவே, ஏறி உட்கார்ந்தேன். பஸ் ஏறியபோது, அரளிப்பூக் கொத்தை எறிந்துவிட்டுத் துளசியை மட்டும் கையோடு எடுத்துக் கொண்டேன். பஸ்ஸிலும் பழைய எண்ணமே தொடர்ந்து வந்தது. அரளியையும் தாழையையும் படைத்த இறைவனே துளசி போல் எல்லாம் நறுமணம் கமழும் செடியையும் படைத்திருக்கின்றான் என்று எண்ணினேன். புலவர் பைரனைப்போல் நண்பன் சந்திரனைப்போல் ஒரு பகுதி மட்டும் மணம் கமழ்ந்து மற்றப் பகுதியெல்லாம் வெறுத்து ஒதுக்கத்தக்க வகையில் வாழும் வாழ்வைவிடத் துளசி போல் வாழும் தூய எளிய வாழ்வு நல்வாழ்வு என்று எண்ணினேன். அந்த வாழ்வு அடக்கமான வாழ்வாக இருந்தாலும், உள்ளும் புறமும் ஒரே வகையாக மணம் கமழும் நல்ல வாழ்வு அல்லவா?
பஸ் வாலாசா ரயில் நிலையத்தைக் கடந்து இலுப்பை மரங்கள் அடர்ந்த சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த இலுப்பை மரங்களின் அடியில் நானும் சந்திரனும் உட்கார்ந்து, சென்ற ஆண்டில் பல நாட்கள் மாலைக் காலத்தில் தரையில் கோடுகள் கிழித்துக் கணக்குப் போட்டது நினைவுக்கு வந்தது. சந்திரன் எவ்வளவு உதவியாக இருந்தான்! அவனுடைய வாழ்வில் என்ன குறை கண்டோம்? யாரோ சொல்லக்கேட்டு அதை நம்பி அவனைப் பழித்து எண்ணலாமா? பைரனுடைய வாழ்வோடு ஒன்றாகச் சேர்க்கலாமா? அவ்வாறு எண்ணக் கூடாது. எண்ணியது குற்றம் என்று உணர்ந்தபடியே பஸ்ஸைவிட்டு இறங்கினேன்.
----------
தொடரும்...