ஏறி அமர்ந்தேன்.
" நான் தரவேண்டிய பணத்தை நீங்க தரவேண்டாம்! நானே தரேன்!"
நான் அதற்கு சம்மதித்ததும், ஆட்டோ கிளம்பியது!
அத்துடன்கூடவே, அந்தப் பெண்ணின் புலம்பலும்தான்!
வாய்விட்டு சற்று உரக்கவே யாரோ அருகிலிருப்பவரிடம் கோபமாகப் பேசுவதைப்போலே, கைகளை ஆவேசமாக ஆட்டி தனக்குத்தானே பேசிக்கொண்டே வந்தாள்.
இப்போதுதான் எனக்கு தெளிவாகத் தெரிந்தது, ஏன் மற்ற பயணிகள் அவளுடன் சவாரி செய்ய பயப்படுகிறார்கள் என்று!
கோபத்தில் அவளை அறியாமலேயே அருகிலிருப்பவரை அறைந்துவிடுவாளோ எனும் அச்சம்!
" உன்மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தேன், பணப்பெட்டி சாவியைக்கூட கொடுத்து வைத்திருந்தேனே, கடைசியிலே இப்படி நீ என்னை நயவஞ்சகமா ஏமாற்றி என் வைரத்தோடுகளை திருடிக்கொண்டு போகலாமா? இது உனக்கு அடுக்குமா? பாவி! பாவி! என்னைக் கேட்டிருந்தால்கூட, நானே சந்தோஷமா தந்திருப்பேனே, பாவி! இப்படி திருடிக்கிட்டு ஓடிட்டியே, நம்பிக்கை துரோகம் செய்துட்டியே, நீ உருப்பிடுவியா? நீ நாசமாகத்தான் போவாய்! ரோடிலே நடந்து போறபோது, லாரியிலே அடிபட்டு சாவப்போறே! ஐயோ! அந்த தோடுகள் இரண்டும் வைரமாச்சே! எங்க பாட்டி, எங்கம்மான்னு பரம்பரையா நாங்க போட்டுண்டதாச்சே! துரோகி! துரோகி!"
இப்படியே வழி நெடுக புலம்பியவாறே வந்தாள்.
ஆட்டோ டிரைவர் என்னிடம் பேச்சுக்கொடுத்தான்.
" பார்த்தியா, சார்! இப்படி உரக்க புலம்பிக்கிட்டே வந்தா, எப்படி சார்! கூட சவாரி செய்யமுடியும்? இதைச் சொன்னால், இந்தம்மா புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க!"
" டிரைவர்! ......"
" என் பேரு, தர்மன்! என்னைப் பேர் சொல்லியே கூப்பிடுங்க! நீங்க எதுவரையிலும் போறீங்க?"
" நானும் இந்தம்மா போற இடத்துக்குத்தான் போகணும், பெரிய அரசு ஆஸ்பத்திரிக்கு!"
" நல்லதாப் போச்சுங்க! இல்லேன்னா, இந்தம்மாவை என்னால தனியா சமாளிக்க முடியாதுங்க!"
" அப்படியெல்லாம் பேசக்கூடாது, தர்மன்! உன் பெயருக்கு பொறுத்தமா பொறுமையா இருக்கணும். இந்த நிலமை, யாருக்கு வேணைம்னாலும் எப்ப வேணும்னாலும், இல்லை, இல்லை, வேண்டாம்னாலும் வரலாம், அதை நினைத்துப் பார்த்து, சகிப்புத்ததன்மையை