அப்போதுதான் தர்மனும் நானும் உணர்ந்தோம், ஆஸ்பத்திரி வாசலில் இருப்பதை!
மொத்தமாக நான் பணத்தை தர்மனிடம் நீட்டியபோது, அந்தப் பெண்மணி அதை தடுத்தாள்.
" சரி சரி, உங்க பங்கை நீங்க கொடுங்க, மிச்சத்தை நான் தரேன்.........."
" ஷேர் ஆட்டோவிலே மீட்டர் சார்ஜை ஷேர் பண்ணிக்கிறதிலே ஒரு நியாயம் வேணும், ஆறுபேர் இருந்தால், ஆறிலே ஒரு பங்குங்கற மாதிரி, ரெண்டே பேர் சவாரி செய்தால், ஆளுக்குப் பாதி! அதனாலே என் பங்கை நானும் உங்க பங்கை நீங்களும் கொடுங்க!"
இத்தனை அழகாக, நியாயமாகப் பேசறவங்களுக்கா இந்த நிலைமை என நான் வியப்பில் ஆழ்ந்தபோது, தர்மன் அவள் காலைத் தொட்டு வணங்கினான்.
" அம்மா! நான் ஏதாவது தவறா பேசியிருந்தால், மனசிலே வைச்சுக்காதேம்மா!"
அவளும் நானும் தர்மனுக்கு பணத்தை தந்துவிட்டு, இருவரும் மருத்துவ மனைக்குள் நுழைந்தோம்.
வரவேற்பறையில், அதிசயமாக அதிக கூட்டமில்லை. உட்கார்ந்து பேச நிறைய இடமும் அவகாசமும் இருந்தது.
" குட் மார்னிங் சார்! உட்கார்ந்து பேசுவோமா?" என அந்தப் பெண்மணி கேட்டபோது, நான் என்னை மறந்து வாயைப் பிளந்து நின்றேன்.
அவள் என் பதிலை எதிர்பார்க்காமலே, அருகிலிருந்த சோபாவில் அமர்ந்தாள். நானும் அவளருகில் அடக்கமாக அமர்ந்தேன்.
" சார்! என் பெயர் சரஸ்வதி!........"
" என் பெயர் திருமகன்!"
" மற்றவங்க ரகசியம் பேசும்போது, ஒட்டுக்கேட்பது தவறுதான், இருந்தாலும் அந்தப் பேச்சு அதுவாகவே காதில் விழும்போது, அதை என்னால் தடுக்க முடியவில்லை, மன்னிச்சிடுங்க!"
" ஓ! மை காட்! நாங்க பேசினது உங்க காதிலே விழுந்துடிச்சா? சாரி, மேடம்! ஏதாவது தப்பா பேசியிருந்தா, மன்னிச்சிடுங்க.......!"
" அந்த ஆட்டோக்காரன் என்னை பைத்தியம்னு சொன்னதிலே, தப்பில்லே, ஒரு வித்த்திலே, நான் பைத்தியம்தான்! வைரத்தோடு திருட்டுப் போனதை மறக்கமுடியாத பித்துப் பிடித்த பைத்தியம்!"
" சரஸ்வதிம்மா! எனக்குப் புரியுது, நீங்க சொல்ல நினைக்கிறது, உங்க நகையை வேற ஒருத்தர் உங்க அனுமதியில்லாம எடுத்துக்கொண்டு போன நிகழ்ச்சியை மறக்கமுடியாம புலம்பல் மூலமா வெளிக்கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமா, அந்த நினைவை