ஊரும் மக்களும் இருந்தால்தானே தமிழைப்பற்றி நினைப்பார்கள். அவர்களுக்குள்ளேயே பிரச்சனை நிம்மதி இல்லாத வாழ்க்கை இருந்தும் இல்லை என்ற நிலை என்றால் அவர்கள் தங்களைப்பற்றி சிந்திப்பார்களா இல்லை தமிழின் நலன் பற்றி சிந்திப்பார்களா? வீரனின் நேர்மை தமிழின் குடும்பத்திற்கு பெரிய தலைவலியாய் இருந்தது. நேர்மையானவனும் குறுக்குவழிதேடுபவனும் மோதிக் கொள்ள அவரவர் அவரவர் கொள்கையில் தீர்மனமாக இருக்கும் ஒருகாரணம் போதுமே. இங்கு வீரன் -தமிழ் இருவரின் காதலும் கூடுதல் காரணமாக இருக்க சந்தர்ப்பம் பார்த்துகொண்டே இருந்தனர். தமிழின் அண்ணன்கள் காட்டு மரங்களை வெட்டி அதை விற்பனை செய்பவர்கள். அவர்கள் தங்கள் தொழிலுக்கு சிறுவர்களையும் பெண்களையும் பயன்படுத்துவதை வீரன் எதிர்ப்பான். அவ்வப்போது முட்டிக் கொண்டிருப்பவர்கள் கோவில் கடைவிவகாரத்தில் மோதிக் கொண்டனர். கோவில் வீதியில் கடைப்ப்பொறுப்பை வீரனும் தமிழின் அண்ணன்களும் பெற்றிருந்திருந்தனர். கடைவைப்பதற்கான முன்னனுமதி கடையில் வரும் இலாப நஷ்டக்கணக்கு என்பவற்றை பார்க்கும் பொறுப்பு இவர்களுடையது. கடைசிநேரத்தில் தன் கடைக்கான இடத்தை மாற்றி தரும்படிகேட்டுவந்த ஒருவனுக்கு தமிழின் அண்ணன்கள் சம்மதம் கூற அது நியாயமில்லை என வீரன் மறுப்புகூற மோதல் உண்டானது. ஊரார் தலையிட்டு பிரச்சனையை தீர்க்கும்படி ஆனது.
தங்களுக்கு தலைவலியான வீரனை எப்படியாவது தங்கள் வாழ்விலிருந்து அகற்றவேண்டும் என்று அவர்கள் தீர்மானித்து அதற்கு கூட்டுசேர்த்து கொண்டவன்தான் சேகர். அவனுக்கான மிகப்பெரிய தேவை குடி. குடிக்கு காசு தேவை. அதற்காகத்தானே அந்த திருட்டுத்தொழிலும். குடிக்கு வழி செய்பவர்கள் அவன் சாமி. அவன் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு வீரனை பழிதீர்த்துவிட்டனர். இவர்களின் சூழ்ச்சியில் அநியாயமாக சிக்கிகொண்டவள்தான் யாழினி. வீரனை சேகரை வைத்து பழிதீர்க்க நினைத்தவர்களுக்கு கோவில் விவகாரம் அவர்கள் நினைத்ததை இலகுவாக்கியது. யாழினியை மணப்பது என்பது கேள்விகுறியான ஒன்று. அவள் அண்ணன்கள் முடிவு சேகருக்கு பாதகமாய்போய்விட்டால் நஷ்டம் அவனுக்குத்தான். ஆனால் யாழினி இறந்துவிட்டால் அதற்கு காரணம் வீரன் என்றால் பல பக்கத்திலும் இலாபம் சேகருக்கே. வீரன் இறந்துவிட்டால் அவனால் தங்கள் தொழிலுக்கு பாதகம் வராது கூடவே வீரனைக் கொன்றுவிட்டால் தமிழின் அண்ணன்களிடம் இருந்து கிடைக்கும் பணம் தவிர யாழினியின் இறப்பிற்கு காரணமானவன் தன் நண்பன் எனத் தெரிந்தும் அவனைக் காட்டிக் கொடுத்தான் சேகர் என யாழினியின் அண்ணன்களிடம் நற்பெயர் கிடைக்கும். இவை அனைத்திற்கும் யாழினி இறக்க வேண்டும். தங்கள் காதல் தங்களைத்தவிர வேறுயாருக்கும் தெரியாது என்பதால் தமிழின் அண்ணன்களின் திட்டத்திற்கு மறுப்பு சொல்லவில்லை சேகர்.
யாழினியை கடத்தி காட்டில் வைத்து கொலை செய்துவிட்டு அந்த இடத்திற்கு வீரனை வரவைத்து இரவு வரை அவனை காட்டிலேயே சுற்றவைக்கவேண்டும். காட்டுக்குள் ஆட்கள் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன் காட்லடில் ஒளிந்திருக்கும் இருக்கும் தமிழின் அண்ணன் ஒருவன் வீரனைப்பிடித்து யாழினி கிடக்கும் பள்ளத்தில் தள்ளவேண்டும். வீரனைப்பற்றி பிறர் சொல்வதிலும் பார்க்க அவனின் நண்பன் சொன்னால் நம்பகத்தன்மை கூடுதலாயிருக்கமென்றே சேகரை விட்டு யாழினியின் உறவுகளை காட்டிற்கு அழைத்து வரவைக்கும் திட்டம். வீரனின் சமீபத்திய பிரச்சனை யாழினி விவகாரம். அவளுக்கு வீரனால் ஒரு தீங்கு நடந்தால் அவளின் அண்ணன்களே வீரனை கொன்றுவிடுவார்கள். வீரனை பிடிக்க உதவினால் யாழினியின் அண்ணன்களுடன் சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம். இதுதான் அவர்கள் வீரனுக்காக போட்ட திட்டம். எல்லாம் சரியாக நடந்தது அவர்கள் திட்டப்படி.
காட்டில்..
நள்ளிரவைத் தாண்டி விடியலைநோக்கி பயணப்பட்டுகொண்டிருந்தது நேரம். அடை மழை மண்ணில் விழ மயக்கத்திலிருந்த வீரன் கண்விழித்தான். பள்ளத்தில் வீழ்ந்து கிடந்தவன் மெல்ல எழும்பி தலையைமட்டும் நீட்டி வெளியே பார்த்தான். யானைகள் எதுவும் அங்கு இல்லை. தங்களைவிட கொடிய விலங்குகளான மனிதர்களைப் பார்த்த பயத்தில் அவை எப்போதோ அங்கிருந்து அகன்றுவிட்டிருந்தன. தீ பரவ ஆரம்பிக்கும்முன்பே மழைபெய்ய ஆரம்பித்துவிட்டதால் அதிகளவில் சேதம் இல்லை. ஆனால் அவர்கள் வைத்த தீ பல மூலிகைச்செடிகளை அழித்துவிட்டது. அந்த செடிகளை முன்நிறுத்திதானே இத்தனை நாடகமும் அரங்கேறியிருந்தது. மெல்ல பள்ளத்திலிருந்து மேட்டிற்கு ஏறி தள்ளாடியபடியே ஊரைநோக்கி சென்றான். நிலவு வெளிச்சம் இப்போது அவனுக்கு வழிகாட்டியது.