சிறுகதை - இருவர் உள்ளம் - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்
சில்சீ தோழிகளுக்கு, “இருவர் உள்ளம்” இந்த கதை சிறுகதையின் அளவை மீறிய ஒரு குறுநாவல். இல்லற வாழ்க்கை ஒருமுறை தான் மலர வேண்டுமென்றில்லை, துணையை இழந்த பின்னும், வாழ்க்கை மீதமிருக்கிறது. இந்த கதையின் நாயகி துணையை இழந்து தவிக்கும் கைம்பெண், அவளுடைய வாழ்வில் மறுமலர்ச்சியாக ஹரீஷ் வருகிறான். மீதியை கதையில் சொல்லியிருக்கிறேன்… படித்து உங்கள் கருத்துக்களை பகிரவும்.
இடையறாத அலுவலகப்பணிகளுக்கிடையே அலைபேசி சிணுங்கியது. “ஸ்ரீஜா தான்”. உள்ளம் பதறியது. வருணுக்கு ரொம்ப முடியலையோ? வேதனையுடன் அழைப்பை ஏற்றாள்.
எதிர்முனையில், “அண்ணி, நான் தான், வருணுக்கு ஃபிட்ஸ் வந்திருச்சு!” அவள் முடிக்கும் முன்னே இதயம்,துள்ளி வெளியே விழுந்துவிடும் என்ற அளவுக்கு துடித்தது. அவளிடம் பதில் வராதது கண்டு ஸ்ரீஜாவே தொடர்ந்தாள்.
“அண்ணி நான் ஹாஸ்பிட்டல் வந்துட்டேன், இஞ்ஜெக்சன் போட்டிருக்காங்க, நீங்க பதட்டபடாம வாங்க!”.
“ஸ்ரீஜா, பணத்திற்கு என்ன பன்னின?”
“அண்ணி, ஒரு நொடி யோசித்தவள், என்னோட ஃப்ரண்டும் கூட இருக்காங்க அண்ணி!”
“அவளுக்கு புரிந்தது!. சுனிலாகத்தான் இருக்கும். “சரி, ஸ்ரீஜா, நான் ஒரு அரைமணி நேரத்திற்குள் வர்றேன், நீ வருணை பத்திரமா பாத்துக்கோ!” ஸ்ரீஜாவின் பதிலுக்கு காத்திராது அழைப்பை துண்டித்தாள். கட்டுப்படுத்த முடியாத கண்ணீர் சூடாக கன்னத்தில் வழிந்தது. ஆம், நரக வேதனை அவளுக்காக இருக்கும் ஒரே ஒரு துணை வருண் மட்டும் தான், அவனை பாதுகாக்க, அவனுக்காக நேரம் செலவிடக்கூடா முடியாத சூழ்நிலை!. எழுந்து முகம் கழுவி, மேளாளரின் அறையை நோக்கி நடந்தாள். உள்ளே நுழையும்போது அலைபேசி இணைப்பில் இருந்தவர், அவளைக் கண்டதும் அழைப்பை துண்டித்துவிட்டு என்ன என்பதுபோல், பார்த்தார்.
“சார், ஒரு இரண்டு மணி நேரம் பெர்மிஷன் வேணும், பையனுக்கு உடம்பு முடியல.. “அவளால் அதிகம் பேச முடியாது குரல் பிசிரடித்தது.
“இங்கப்பாரும்மா, இந்த மாசம் மட்டும் நீ முன்று முறை பெர்மிஷன் போட்டிருக்க, இதுக்கு மேல என்னால இதை அலோ பண்ண முடியாது, நீ லீவ் தான் அப்ளை பண்ணனும்! உனக்கு தெரியுமில்ல என்ன வேற பிராஞ்சுக்கு மாத்தியாச்சு, இப்போ பொறுப்பெல்லாம் அந்த ஹரீஷ் தம்பிக்கிட்டதான் இருக்கு! நீ வேணும்னா அவர் கிட்ட உன் நிலைமை சொல்லிட்டு பெர்மிஷன் கேட்டுப்பாரு! ஏற்கனவே உன் சைடு நிறைய வொர்க் பெண்டிங்க், முதல்ல அதுக்கு விளக்கம் சொல்லிட்டு பெர்மிஷன் கேளு!”
“சரி சார்!” , அதற்கு மேல் அந்த மனிதரிடம் பேசி ஆதாயமில்லை. யோசனையுடன் திரும்பினாள்.
“ம்ம்.. சுபா, ஒரு நிமிஷம் நில்லு..”
மேசை டிராவிலிருந்து ஒரு வெள்ளைக் கவரை எடுத்தார், “நான் உங்கிட்ட ஏற்கனவே கேட்டதுதான், என் மச்சான் ஸ்ரீநீவாசன் பத்தி என்ன முடிவு பண்ணிருக்க? நீ ரொம்ப யோசிக்கவே வேண்டாம், நாற்பது வயசெல்லாம் ஒரு வயசா சொல்லு, உனக்கே முப்பது இருக்கும்! இருக்குமில்ல? “
அவள் சொல்ல முடியாது வேதனையை உள்ளே அடக்கிகொண்டு பதில் சொன்னாள். “ஆமாம் சார்! “
“ஆங்க், அத தான் நான் சொல்ல வர்றேன், பேசாம அவனை கல்யாணம் பண்ணிக்க, அவனோட இரண்டு பெண் குழந்தைகளோட, உன் பையனையும் அவன் பார்த்துப்பான்.. நீ இப்படி நாயா அலையாம, வீட்டில ஜம்முன்னு இருக்கலாம்!”
“அவனுடைய கன்னங்களில் பளாரென அரையவேண்டும்போல் இருந்தது அவளுக்கு. இவனிடம் இப்போழுது என்ன பேசினாலும் அது அவளுடைய வேலைக்கு பிரச்சனையாக முடியும். இன்னும் சில நாளில் இடம்மாறி போகிறவனை பகைத்துக்கொள்ள விரும்பாது, தன் கோபங்களை உள்ளே அடக்கிகொண்டு,
“நான் யோசிச்சு சொல்றேன் சார்!” அவன் நீட்டிய கவரை வாங்கிக்கொண்டு தன் இடத்திற்கு போய் அமர்ந்தாள். எதற்காகவெல்லாம் அழுவது? தாய் தந்தை துணையில்லாது அண்ணனின் ஆதரவில் வளர்ந்தவளுக்கு, புகுந்த வீடும் நிலையின்றிபோனது. திருமணமாகி இரண்டு வருடங்களில் துணையை இழந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் நிராதரவாக நின்றவளை, கையில் இருந்த குழந்தைக்காக மட்டுமே அவள் புகுந்த வீடு அவளை ஏற்றுக்கொண்டது. பதினாறாம் நாள் காரியம் முடிந்தது அவளிடம் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிப்போன அண்ணனின் வீட்டிற்கு அவள் எங்கே போவது?. தினமும் போராட்டங்களோடும் ஆயிரம் வாய்பேச்சுகளையும், காதில் வாங்கிகொண்டு, நாங்கு அறைகொண்ட அவள் வீட்டில் ஹாலில் முடங்கி, இட்ட பணிகளை செய்து, அரக்கப்பரக்க அலுவலகம் ஓடி, ஈட்டும் வருமானத்தையும் தன் தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ளாது, வீட்டிற்கு கொடுத்து, எந்தக் கேள்வியும் கேட்காது, கேட்க விரும்பாது அவள் ஊமையாகிப்போனாள்.
“உனக்கென்ன தலையெழுத்தா? அந்த வீட்டுக்கு சம்பாதிச்சு கொட்டனும்னு, அதான் தாலிய இழந்து ஒன்னுமில்லன்னு ஆயிட்டே, பேசாம பிள்ளைய கிரீச்சில விட்டுட்டு நீ வேலைக்கு போகவேண்டியதுதானே!”
“உனக்கென்ன வயசா ஆச்சு, உன் அண்ணன் போட்ட நகை நட்டெல்லாம் என்ன ஆச்சு? இப்பதான் மேட்ரிமோனியல் அது இதுன்னு நிறைய விவாகரத்து ஆனவங்க, இரண்டு தாரம் இல்ல மூணாவது தாரம் இந்த மாதிரி நிறைய கேசுங்க பெண் கேட்டு அலையிராங்களே அவங்கள யாரச்சும் கட்டிட்டு போகவேண்டியதுதானே?”