“எங்க ஜெனரேஷன் பத்தி என்ன சார் சொன்னீங்க? இவனுக்கு ஒரு கால்கட்டு போட்டாத்தான் பொறுப்பு வரும்னு பெரியவங்க சொல்லி, அப்படி ஒரு வாழ்க்கைய வாழ்ந்த ஜெனரேஷன் நீங்கத்தான் சார். இருக்குற பொறுப்பை எல்லாம் முடிச்சாத்தான் கல்யாணம்னு எல்லாத்தையும் தள்ளி போட்டுட்டு இருக்குறது தான் எங்க ஜெனரேஷன்”என்று ஒரே போடு போட்டான் புகழ். என்னத்தான் தன் மனம் ஆறும்படி கோபத்தை வெளிப்படுத்தினாலும், இது யாழினியின் வாழ்க்கை பிரச்சனை என்பதை அவன் மனம் மறக்கவில்லை. தனது வார்த்தைகளும் கோபமும் அவளை பாதித்தாள். அவன் சிந்தனையில் ஆழ்ந்த சில நொடிகளே சுதாகருக்கு போதுமானதாக இருந்தது.
“சரி மத்தவங்கள பத்தி பேச வேணாம். நான் என் மருமகளை பத்தி பேசுறேன்”. அவர் எதிர்ப்பார்த்தது போலவே “மருமகள்”என்றதுமே தணிந்தான் புகழ்,
“ யாழினினால என்ன ப்ராப்ளம் சார்? என்ன ஆச்சு?”. புகழின் குரல் இறங்கியதும், சுதாகரனின் குரலில் ஓங்கியது. அன்று கோவிலில் அவர் பார்த்ததை தன் பக்கமேநியாயம் இருப்பது போல அழுத்தமாக பேசினார் சுதாகரன்.மேலும் யாழினி புகழ் மீது காட்டும் நெருக்கமானது யாழினி-தமிழின் உறவை என்றேனும் பாதிக்கும் என்றுன் வழியுறுத்தினார்.
“தமிழ் இப்போ காதல், கல்யாணம்னு சந்தோஷத்தின் உச்சியில் இருக்கான். அதுனால அவனுக்கு எதுவுமே பெரிய பிரச்சனையாக இப்போ தெரியாது. ஆனா அவன் ஒத்தையா வளர்ந்த பையன், அவனுக்குள்ள ஒரு பிடிவாதமான குணமும் இருக்கு..கண்டிப்பா ஒருநாள் உன்னால அவங்களுக்கு பிரச்சனை வரும்” என்றார் சுதாகரன். புகழின் யோசனை படர்வதை உணர்ந்தவருக்கு மனதில் லேசாய் நம்பிக்கை துளிர்த்தது.
“ நீயே சொல்லுற யாழினி உன்னை எப்பவுமே விட்டுகொடுக்க மாட்டானு.. ஏதாவது ஒரு விஷயத்தில் நீயா தமிழானு சூழ்நிலை வந்தா? நீ சொல்லுற மாதிரி உனக்கும் யாழினிக்குமான நட்பை ஏத்துக்கிட்டு மத்தவங்களுக்கு நான் விளக்கம் சொல்லிக்கலாம் புகழ்… ஆனா கல்யாணத்துக்கு பிறகு வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கு! தமிழும் யாழினியும் உன்னால பிரியனுமா?”
அவர் கடைசியாக கேட்ட கேள்வி, புகழை உலுக்கி போட்டது.தமிழ்மீது புகழுக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறதுதான். ஆனால் இதை சொல்வது யாரோஅல்லவே? தமிழின் தந்தை அல்லவா? மகனைப் பற்றி ஒரு தந்தையை விட அதிகம் அறிந்தவர் யார்?
“திஸ் இஸ் ப்ராக்டிக்கல்.. எவ்ளோ க்லோஸ் ப்ரண்ட்ஸா இருந்தாலும், கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு விரிசல் வந்துதான் ஆகும். நமக்கான கோட்டில் தள்ளி நின்னுதான் ஆகனும்” என்று அவர் சொல்லவும்,புகழின் முகத்தில் தற்காலிக தெளிவொன்று எட்டிப் பார்த்தது.
“இவ்வளோதானே? கல்யாணம் முடிஞ்சதும் நானே கொஞ்சம் கொஞ்சமா யாழினியை விலகி ஒரு அளவோடு எங்க ப்ரண்ட்ஷிப்பை வெச்சுக்குறேன்..”
“யாழினி விட்டுறுவாளா? தமிழ் மட்டும்தான் பிடிவாதக்காரனா? யாழினி இல்லையா?”
“சார்,என் யாழீ சாதூர்யமான பொண்ணு. யாரு மனசும் கலங்காத மாதிரி நடந்துப்பா..”
“இந்த என் யாழீ தான் எல்லாத்துக்கும் காரணம்.”என்றார் சுதாகரன். புகழின் கண்ணுக்கு ஒரேடியாக வில்லனாக தெரிய வேண்டாம் என்று நினைத்தவர்,
“சரி ஒரு வாரம் டைம் எடுத்துக்கோ.. நீ சொன்ன மாதிரியே யாழினிகிட்ட கொஞ்சம் விலகி பாரு.. அவ எப்பவும் போல நார்மலா இருந்தான்னா இதபத்தி நான் இனி பேச்சே எடுக்கல.. கல்யாணம் நல்லபடி நடக்கட்டும்.. அப்படி இல்லாமல் அவ கஷ்டப்பட்டா நீ ஒரேடியாக விலகித்தான் ஆகனும்.. நான் என் மகனுடைய வாழ்க்கையத்தான் பார்ப்பேன் புகழ். எனக்கு சரின்னு படலன்னா இந்த கல்யாணம் என்னால நிற்கும்” இதழில் புன்னகையும் வார்த்தையில் விஷமும் வெச்சு பேசுபவரை பார்க்கவே புகழுக்கு உவப்பாக இருந்தது. இப்படியெல்லாம் குணமுள்ளவரை அவன் நேரில் முதன்முறையாக பார்க்கிறான். அவர் இருக்கும் இடத்தில் நிற்பதே தவறென்று தோன்றியது அவனுக்கு.
இங்கு நடந்ததை புகழ் நிச்சயம் யாழினியிடம் பகிர்ந்து கொள்வான். அதை அறிந்த யாழினி நிச்சயம் திருமணத்தை தவிர்த்தே விடுவாள் என்பதுதான் சுதாகரின் கணக்கு. ஆனால் புகழைப் பற்றி தவறாகவே கணித்திருந்தார் அவர்.
சுதாகரின் பேச்சு அடிக்கடி புகழின் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. அடுத்து வந்த ஒருவாரமும் கல்யாண வேலை இருப்பதாக புகழ் விலகியே இருக்க,யாழினி உற்சாகம் குறைந்தே காணப்பட்டாள்.
“யாழினி, எனக்கு சகோதரி மாதிரி இல்லை சார்… ஆனால் அவள் சகோதரி மாதிரியும் என்கிட்ட பாசம் காட்டினா.. உங்க பேச்சை நம்பித்தான் இந்த முடிவை எடுக்குறேன். என்சார்பையும் சேர்த்து இந்த கல்யாணத்தை நீங்க நடத்தி வைக்கனும்.
என் தோழி பவித்ரமானவள். அவளை இன்னொரு தடவை தப்பா பேசாதீங்க.. பேசவும் கூடாது! அவ தமிழுக்கு மனைவியா வந்தாலும், உங்களுக்கு மகள் மாதிரினு எப்பவும் ஞாபகம் வெச்சுக்கோங்க. அவளுடைய எண்ணங்களுக்கு மதிப்பு கொடுங்க.. எவ்ளோ அன்பை அவளுக்கு தருவிங்களோ அதைவிட இரட்டிப்பா அவ உங்களுக்கு திருப்பி கொடுப்பா.. நான் வரேன்” என்று அங்கிருந்து புறப்பட்ட புகழ் தஞ்சம் அடைந்தது அன்னை சுப்ரஜாவைத்தான். அதுவும் ஓரிரு நாட்களே! அவரிடம் எதைபற்றியும் யாரிடமும் பேசவேண்டாம் என்று பல சத்தியங்களை வாங்கிவிட்டு அவன் சென்ற இடம் கன்னியாகுமரி!