ஹர்ஷாவை தனது குருநாதனாக வரித்துக் கொண்டிருந்தான்.
அவனது ஆதர்ச குருவை முற்றிலும் உடைந்த நிலையில், திக்குத் தெரியாத காட்டில் இருட்டில் சிக்கி கொண்டவனாய், துடிப்பில்லாத தோணியில் அலைக்கடலில் தத்தளிப்பவனாய் பார்த்தவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
அவனது ஹனிக்கு என்ன நேர்ந்தது. அவளது வலியில் இவனல்லவா இப்படி துடித்துக் கொண்டிருக்கிறான்.
போனைக் கையில் பிடித்தபடி வெறித்துக் கொண்டிருந்தவனை அணுகவே அவனுக்கு சற்று அச்சமாக இருந்தது.
உடனே அவன் மூளையில் பொறித் தட்ட பூர்விக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான்.
அவள் உடனே வருவதாகவும் ஹர்ஷாவிடம் என்ன என்று கேள் என்றும் சொல்லவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஹர்ஷாவின் அருகில் சென்றான்.
“பாஸ்” என்று அவன் இரண்டு மூன்று முறை அழைத்தும் ஹர்ஷாவிடம் அசைவே இல்லை.
ஹர்ஷாவின் தோளை மெல்ல தட்டவும் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அவன் பார்வையில் தெரிந்த பரிதவிப்பில் கணேஷும் ஆடிப் போனான்.
அச்சமயத்தில் அங்கே வந்து சேர்ந்தாள் பூர்வி.
கணேஷ் விஷயத்தை சொன்னதுமே பூர்வி ஹரிணிக்கும் பாலகிருஷ்ணனுக்கும் போன் செய்து பார்த்தவள் சுவிட்ச் ஆப் என்று வரவே சுகீர்த்திக்கும் ஸ்வாதிகாவிற்கும் தான் அறிந்ததை சொன்னாள்.
“அண்ணா என்னாச்சு அக்கா என்ன சொன்னா. நான் இப்போ தான் கீர்த்திக்கும் ஸ்வாதிக்கும் போன் செய்தேன்” பூர்வி வந்து சொன்னதும் ஹர்ஷா அவளை கரத்தைப் பற்றிக் கொண்டு உடனே எழுந்தான்.
“பூர்வி நான் உடனே மெட்ராஸ் போகணும். இப்போவே போகணும், பாலாக்கு ஆக்சிடன்ட் ஆகி ஹி இஸ் இன் சர்ஜரி பூர்வி. ஹனி தனியா இருக்கா” கடைசி வரியை சொல்லும் போது உடைந்து போனான்.
உடனே பூர்வி விரைந்து செயல்பட்டாள். ஸ்வாதிகாவிடம் தகவல் சொல்லி ஹர்ஷாவின் பயணத்திற்கு ஏற்பாடு செய்தாள்.
கணேஷிடம் மருத்துவமனை அதிகாரிகளிடம் ஹர்ஷாவின் அவசர பயணம் குறித்து தெரிவிக்க சொன்னாள்.
ஹர்ஷாவை எழுப்பி அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றவள் பேக் செய்ய உதவினாள்.
ஸ்வாதிகா உடனடியாக நியூயார்க் வரை சார்டர்ட் விமானம் ஏற்பாடு செய்து அங்கிருந்து அவன் சென்னைக்கு விமானத்தில் பயணிக்க டிக்கெட்டுக்கும் ஏற்பாடு செய்து விட்டிருந்தாள். அவளும் சாரதாவும் சென்னை செல்ல விமான நிலையம் கிளம்பினர்.
எவ்வளவு துரிதமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த போதிலும் உலகத்தின் மறுகோடியில் இருந்தவன் சென்னை வந்து சேர ஒரு நாள் பொழுது ஆகிப் போனது.
விமான நிலையத்தில் இருந்து இறங்கியதுமே போனை ஆன் செய்ய வேண்டும் என்று கூடத் தோன்றாமல் அவசரமாக வெளியே வந்தவன் ஸ்வாதிகா அங்கே இருப்பதைக் கண்டு அவளிடம் ஓடினான்.
அவள் கண்களின் நீர்ப்படலமே அவனுக்கு செய்தியை சொல்லி விட்டிருந்தது. இருப்பினும் அவன் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.
இதோ டாக்டர் ஹரிணி வைதேகி, மிஸ்டர் பாலகிருஷ்ணன் என்ற பெயர்ப்பலகை தாங்கிய கதவின் முன் வந்து நிற்கிறான்.
முன்தினம் ஹர்ஷாவிடம் கதறியவள் அப்படியே சரிந்து அமர்ந்திருந்தாள். அவளது சிந்தனை மரத்துப் போயிருந்தது. அரை மணி நேரத்திற்கெல்லாம் சுகீர்த்தியும் ப்ரீதியும் அங்கே வந்து சேர்ந்தனர். தங்கைகள் இருவரும் கலவரத்துடன் கண்ணீர் வடிக்க அவர்கள் முன்னிலையில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர்களை அறுதல் படுத்தினாள்.
“ஹரிணி பைபாஸ் ஆப் செய்ய முடியலை. வி ஆர் ட்ரையிங் அவர் பெஸ்ட்” அவளது சீனியர் வந்து சொல்லவும் உள்ளூர சில்லிப்பை உணர்ந்தாள்.
“ஹரி எங்க இருக்க ஹரி” அவள் மனம் தவித்தது.
போனில் கலங்கிய கல்யாணிக்கும், பாரதிக்கும் ஆக்சிடன்ட் ஆகியதால் ஒரு சர்ஜரி செய்து கொண்டிருகிறார்கள் என்று தைரியம் சொல்லி அவர்களை சமாதானம் செய்தாள்.
“ஐ ஆம் சாரி ஹரிணி” அவளது சீனியர் டாக்டரும் கார்டியாக் சர்ஜனும் அவளிடம் வருத்தம் தெரிவிக்க, “அக்கா அப்படின்னா என்ன ஆச்சு அக்கா. மாமாவுக்கு என்னாச்சு அக்கா” என்று தன்னை உலுக்கிய தங்கைகளை வாரி அணைத்துக் கொண்டாள்.
“சுகி, ப்ரீ நீங்க பிரேவ் கர்ள்ஸ் ஆச்சே. அக்காக்கு நிறைய பார்மாலிடீஸ் கம்ப்ளீட் செய்ய வேண்டி இருக்கு. எல்லோருக்கும் விஷயத்தை நீங்க போன் செய்து சொல்வீங்களா. அத்தைக்கும் அம்மாக்கும் வரூக்கும் இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம்” ஹரிணி மெல்ல ஒவ்வொரு வார்த்தையாய் உதிர்க்க சகோதரிகள் ஓவென அழ ஆரம்பித்தனர்.
அதற்குள் விஷயம் அறிந்து ஹரிணியின் ஜூனியர்கள் சிலர் அங்கே வந்து சேர்ந்தனர். தனது சகோதரிகளை அவர்கள் பொறுப்பில் ஒப்படைத்தாள்.