தொடர்கதை - காரிகை - 03 - அமுதினி
அமிழ்ந்த பேரிருளாம் அறியாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி யுரைப்பது கேட்டிரோ
காலையில் அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்த பவித்ராவை பார்க்க யாரோ இருவர் வந்திருப்பதாக ஹாஸ்டல் வார்டன் வந்து சொல்லவும், "என்னை பார்க்க யார் வந்திருப்பார், அதுவும் இங்கே !!!" என்ற யோசனையோடு கீழே சென்றாள் பவித்ரா.
வரவேற்பறையில் யாரையும் காணாமல் வெளியே சென்று பார்த்தாள். அங்கே ஒரு வயதானவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு ஒரு அறுபது வயது இருக்கும். அவரின் உடையை வைத்து பார்க்கும் போது கிராமத்தில் இருந்து வருகிறார் என புரிந்தது. ஆனால் அவர் யாரென அவளுக்கு அடையாளம் தெரியவில்லை.
"வணக்கம் அய்யா, மன்னிக்கணும் நீங்க?" -பவித்ரா
"வணக்கம் தாயி. என் பேரு அய்யாசாமி. மஞ்சம்பட்டியில் (கற்பனை பெயர் தான் மக்களே. இப்படி ஒரு ஊர் இருந்தால் இதை அந்த ஊரோடு எந்த வகையிலும் தொடர்பு படுத்த வேண்டாம்) இருந்து வரேன்" அவர் அந்த ஊரின் பெயரை சொன்னதும் பவித்ரா செயலிழந்து போனாள். எந்த ஊரை மறக்க வேண்டும் என்று அவள் தவித்து கொண்டிருக்கிறாளோ அந்த ஊரில் இருந்து ஒருவர், அதுவும் அவளை தேடி. அவள் உள்ளத்தில் பயப்பந்து உருண்டு எழுந்து மேலே வந்தது.
"நீ தானம்மா பவித்ரா ?" அவரின் கேள்விக்கு பதிலளிக்க வாயை திறந்தவளுக்கு வார்த்தை வராமல் தடுமாறியது. தலையை மட்டும் ஆட்டினாள் ஆம் என்று.
"சந்தோஷம் மா. ஒரு நிமிஷம்" என்றவர், அங்கிருந்த மரத்தின் பின்னால் சென்று அங்கிருந்து ஒரு பதினான்கு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை அழைத்து வந்தார்.
"உமா????" அவள் வாய் சத்தம் இல்லாமல் அந்த பெயரை உச்சரித்து.
அவளை கண்ட அந்த பெண் "அக்காகாகா" என ஓடி வந்து அவளை அணைத்து கொண்டு அழ, இவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
"இந்த பொண்ணோட அப்பனும் அம்மாவும் போனவாரம் வீட்டுல தீ பிடிச்சு செத்துட்டாங்க தாயி. நல்லவேளை இந்த பொண்ணு பள்ளிக்கூடம் போனதால பொளைச்சுது. எல்லா காரியமும் முடிஞ்சு எல்லாரும் அவங்க அவங்க சோலியை பார்க்க போயிட்டாங்க. ஆம்பள புள்ளன்னா கூட பரவால்ல. ஆனா பொம்பளை புள்ள. அதுவும் இந்த வயசுல தனியா விட மனசு வரல. வெச்சு வளக்கவும் வசதி இல்லை. அப்போ தான் இவங்க பள்ளிக்கூட பெரிய