அங்கிருந்த கடிகாரம் நேரம் ஒன்பது என்றது. “இங்கிருந்து நேராக ஹாஸ்டல் செல்ல ஒரு அரைமணி நேரம் ஆகும். ஆபீஸ் சென்று வண்டி எடுத்து கொண்டு வருவது என்பது இயலாத காரியம். இங்கிருந்து ஒரு ஆட்டோ தான் பிடிக்க வேண்டும்” என்று யோசித்து கொண்டு இருந்தவள் அவன் கிளமபவும் இவளும் வேகமாக எல்லாவற்றையும் எடுத்து கொண்டு கிளம்பினாள்.
வெளியே வந்தவன் "உங்க ஹாஸ்டல் எங்க பவித்ரா? "எனவும் "பக்கம் தான்” என்றவள் ஏதேனும் ஆட்டோ வருகிறதா என அந்த சாலையின் இருபுறமும் பார்வையை பதித்தாள்.
தோளை குலுக்கியபடி காரில் ஏறி அதை ஸ்டார்ட் செய்தவன் ஒரு முறை அவளை பார்த்தான். அந்த ரோட்டின் இரு புறமும் எந்த ஆட்டோவும் இல்லை. தன்னால் தான் தாமதம் ஆனது என்று எண்ணியவன் வண்டியை விட்டு கீழே இறங்கினான்.
"பவித்ரா ஐ வில் ட்ரோப் யூ " என்றவனின் குரலை கேட்டு அவன் புறம் திரும்பியவள், "இல்லை சார் வேண்டாம் " என்று மீண்டும் தன் பார்வையை சாலையின் புறம் திருப்பினாள்.
"என்னால தான் லேட்டாயிடுச்சு அதுவும் இல்லாமல் இந்த ரோட்ல ஆட்டோ எதுவும் காணோம். இப்படியே நின்னா ரொம்ப லேட்டாயிடும். மழை வேற வர மாதிரி இருக்கு" அவன் சொல்வது உண்மை என்பது போல இரண்டொரு துளிகள் விழ ஆரம்பிக்க, பவித்ராவுக்கு மனதில் பயம் சூழ்ந்தது. மழையும் இரவும் சேர்ந்த சூழல்... அவளுக்கு மனதில் ஏதேதோ நினைவுகள் தோன்ற, அவனுக்கு மறுப்பேதும் கூறாமல் தலை அசைத்தாள் சரியென.
அந்த கார் அவள் சொன்ன பாதையில் பயணித்தது. நல்ல மழை கொட்ட துவங்கியிருந்தது. சாலையில் வெள்ளம் ஓட போக்குவரத்து நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்தின் இறுதியில் அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் முன் வண்டியை நிறுத்த சொன்னாள்.
காரில் இருந்து இறங்க கார் கதவை திறந்தவள் இறங்கும் முன் அவனுக்கு ஒரு நன்றியை உதிர்த்து விட்டு உள்ளே செல்ல, அவன் யோசனையுடன் வண்டியை கிளப்பினான்.
அவசரமாக உள்ளே நுழைந்தவளை எதிர்பார்த்து உமா அந்த ஹாஸ்டலில் வரவேற்பறையில் மிரண்ட விழிகளுடன் உட்கார்ந்திருந்தாள். அவளை கண்டதும் "அக்கா" என ஓடிவந்து அணைத்து கொண்டவளை ஆதரவாக அணைத்தவள்,"சாரி உமா கொஞ்சம் வேலை அதிகம் அதான் லேட்டாயிடுச்சு. நீ சாப்பிட்டியா?" கேட்டு கொண்டே அவளையும் அழைத்து கொண்டு அறைக்கு வந்தாள்.