"சாப்பிட்டேன் கா. நீங்க சொன்னமாதிரி என்னுடைய ஸ்கூல் செர்டிபிகேட் எல்லாம் இந்த கவர்ல வெச்சுருக்கேன்கா. எனக்கு இங்க ஸ்கூல்ல படிக்க இடம் கிடைக்கும் தானக்கா?" பரிதாபமாக அவளையே பார்த்து கொண்டு நின்றவளை சமாதானமாக பதிலை கூறி அவளை உறங்க சொன்னாள்.
"உனக்கு இதெல்லாம் தேவையா பவித்ரா? அவர்கள் செய்ததற்கு நீ அந்த பெண்ணை உன்னோடு சேர்த்து கொண்டது தவறு. யார் எப்படி போனால் உனக்கு என்ன? நீ இருக்கும் நிலையில் உனக்கு தேவை இல்லாததை எல்லாம் இழுத்து கொண்டு இப்போது வேதனை பட வேண்டுமா? ஒன்றும் குறைந்து போகவில்லை. அந்த பெண்ணை ஆசிரமத்திலேயே விட்டுவிடு" மனம் அவளை ஒருபுறம் சாட, "அக்கா என்னை அந்த ஆஸ்ரமத்துல விட்ருவீங்களா? நான் உன்கூடவே இருக்கட்டுமா?" என கண்களில் நீரோடு உமா காலையில் கேட்டதை எப்படி மறுக்க முடியும்? அவள் சிறு பெண். அவளின் பெற்றோர் செய்த பாவத்திற்கு அவளை தண்டனை அனுபவிக்க விட தன்னால் முடியுமா? என் அம்மா என்னை அப்படி வளர்க்கவில்லையே... இல்லை நிச்சயம் என்னால் அப்படி இருக்க முடியாது. மனதின் சாடலை ஒதுக்கி தள்ளினாள் பவித்ரா.
அவளை நம்பி வந்திருக்கிறாள். உறங்கும் அவள் முகத்தை பார்த்தாள். தொலைந்து போன தன்னுடைய பதின் பருவம் அவள் கண்முன் நிழலாடியது. கண்கள் கரித்தது. தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவள் கீழே ஒரு போர்வையை விரித்து படுத்தாள்.
ஆசிரமத்து குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்து விடலாம் அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் அவள் இரண்டு மாற்று உடை, இந்த செர்டிபிகேட்களை தவிர வேறு ஒன்றும் கொண்டு வரவில்லை.
புத்தகம், யூனிபோர்ம், சில மாற்று உடைகள், இதே ஹாஸ்டலில் இவள் தங்குவதானால் வேறு ஒரு அறைக்கு மாற வேண்டி வரும், அதற்குண்டான செலவு என எப்படியும் ஒரு இருபதாயிரம் வேண்டி வரும். இப்போது கை இருப்பு ஒரு ஐந்தாயிரம் இருக்கும். மீதி பணத்திற்கு என்ன செய்வது? நண்பர்கள் என யாரும் இல்லை. ஆஸ்ரமத்தை தவிர அவளுக்கு யாரும் தெரியாது. கம்பெனியில் ஏதேனும் முன்பணம் பெற இயலுமா என்று நாளை அக்கௌன்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் கேட்டு பார்க்கலாம் என்று யோசனையுடன் உறங்கி போனாள் பவித்ரா.
உமாவுக்கும் பவித்ராவுக்கும் என்ன உறவு? சத்யா பவித்ராவை புரிந்து கொள்வானா? அவளின் தொலைந்து போன, அவள் மறக்க நினைக்கின்ற அந்த நாட்கள் என்ன?
தொடரும்