அந்த ஓஎம்ஆர் ரோட்டில் அந்த கார் வழுக்கி கொண்டு சென்றது. விட்டால் கார் கதவு வழியாக வெளியே குதிப்பதை போல அந்த காரின் கதவோடு ஒட்டி உட்கார்ந்திருந்த பவித்ராவை கண்டவனுக்கு கொஞ்சம் பாவமாக இருந்தது. அவள் புறம் சாயும் மனதை அடக்கியவன் தன்னுடைய கவனத்தை ரோட்டில் செலுத்தினான். அந்த காரில் இருந்த அமைதி ஏதோ செய்ய காரில் இருந்த ஸ்டிரியோ ஸிஸ்டெமை ஆன் செய்தான். அதுவோ நேரம் காலம் தெரியாமல் பாடி வைத்தது.
அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாத
வழியே வழியே என் ஒளியே ஒளியே
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஓடாத
காத்தோட நீ எரிச்ச வார்த்தை வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே
வாயாடி பேயா என் தூக்கம் தூக்கி போற
மெல்ல ஓரகண்ணால் அவளை பார்த்தான் அவள் ரோட்டை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
"வாயாடி பேய் இல்லை இது பேசாமயே என்னை கொல்ற பிசாசு " என்றெண்ணியவன் கண்கள் அவள் முகத்தில் மேய்ந்தது. அந்த முகம் சிரித்து அவன் பார்த்ததே இல்லை. இவள் சிரித்தால் எவ்வளவு அழகாக இருக்கும்? அந்த அகன்ற விழிகளில் மை இட்டால் ? அந்த சின்ன மூக்கில் ஒரு அழகான ஒற்றை கல் மூக்குத்தி அணிந்திருந்தால்? அந்த அழகான வடிவான உதடுகள்!!! அவன் எண்ணம் செல்லும் போக்கை உணர்ந்தவன் தலையை சிலுப்பி கொண்டு அமர்ந்தான்.
“எவ்வளவு அவமான பட்டாலும் உனக்கு எல்லாம் புத்தியே வராதா?” அவன் மனம் அவனை கேலி செய்ய அத்தனை நேரம் இருந்த இலகு தன்மை மறைய அவன் முகம் கடினம் கொண்டது. அதற்க்கு பின் அவன் அவள் புறம் திரும்பவில்லை .
கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்தில் வேளச்சேரி கிளையை அடைந்தனர் இருவரும். காரை விட்டு கீழே இறங்கிய சத்யா அவள் இன்னும் இறங்காமல் இருப்பதை கண்டவன் " மேடம்க்கு கதவை திறந்து விட்டாதான் இறங்குவீங்களா?" என்றான் காரின் கதவை திறந்து பிடித்தபடி. "சாரி" என்று மெல்ல முணுமுணுத்தவள் கீழே இறங்கினாள்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின் ஒரு வழியாக முக்கியமான பைல்ஸ் எல்லாம் பார்த்து முடித்தனர். இன்னும் சில பைல்ஸ் கையில் எடுத்து கொண்டான் சத்யா.