கல்யாணம் நடக்கும்...சோ நீ எதை பத்தியும் யோசிக்காம நடக்க போற கல்யாணத்தை பத்தின கனவுகளோடு சந்தோசமா இருக்கணும். ஓகே ஸ்வீட்டி" என அவளின் கன்னத்தில் மெல்ல தட்டியவன், "எனக்கு உன்கூட இப்படியே பேசிட்டு இருக்கணும்னு ஆசை தான் ஆனா இப்போ ஒரு அர்ஜென்ட் ஒர்க் இருக்கு. கிளைண்ட் மீட் பண்ண போகணும்..." எனவும் "ஓஹ் ...சாரி" என எழுந்தாள் இருக்கையில் இருந்து.
"டோன்ட் பீ சாரி. என்னுடைய எல்லா நேரமும் இன்னும் கொஞ்ச நாளுல உனக்கானது...அது வரைக்கும் இந்த அடியேனை கொஞ்சம் மன்னிக்கணும்" என நாடக பாவனையில் கூற அவளுடைய முகத்தில் புன்னகை மலர்ந்தது.
"தட்ஸ் குட். இந்த சிரிப்பை பார்க்க இவ்ளோ நேரம் ஆயிருக்கு...ஹ்ம்ம்...சரி நான் உன்னை போற வழில ட்ராப் பண்ணவா?" ராம் கேட்க, "ஐயோ வேண்டாம். நான் போயிக்கிறேன்" என தமிழ் சொல்ல, "ஆர் யு ஷ்யர்???" என பலமுறை கேட்டவனை சமாளித்து அங்கிருந்து விடைபெற்று வெளியே வந்தாள்.
ஆட்டோவில் ஏறி அமர்ந்தவளுக்கு நடந்ததெல்லாம் ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு போல இருந்தது, தாங்கள் இருவர் மட்டும் இருக்கும் இடத்தில் அவன் நடிக்க வேண்டிய அவசியமில்லையே என ஒரு புறம் தோன்றினாலும் "என் தம்பி பரத்துக்கும் உன் தங்கைக்கும் கல்யாணம் நடந்தாகணும்...அது கண்டிப்பா நடக்கும். அதே போல உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும்" என்று சொன்னானே, அதன் அர்த்தம் என்ன?? உனக்கு இந்த திருமணத்தில் விருப்பமா என ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே!!! இந்த திருமணம் நடக்க வேண்டுமானால் நம்முடைய திருமணமும் நடக்கவேண்டும் என மறைமுகமாக கூறினானா? அவன் சொன்னதன் அர்த்தம் என்ன என முழுதாக விளங்காமல் குழம்பி இருந்தவள் அதை ஒரத்தள்ளி வைத்து விட்டு மனதை சமாதான படுத்தினாள்.
அவள் வாழ்க்கையில் இது வரை நடந்த எதுவும் அவளின் விருப்பப்படியே அவள் எதிர்பார்த்தபடியே இருந்ததில்லை. இதுவும் அப்படி தான். நடக்க போவது உறுதியாகி விட்டது. இனி நடப்பது நடக்கட்டும், வருவது வரட்டும். அதுவரை எதற்கு இந்த வீண் குழப்பம்??? இலக்கியா ஆசைப்பட்டது போல அவளின் திருமணத்தை நடத்த வேண்டும், அது மட்டும் தான் அவளின் மனதில் இப்போது இருக்கவேண்டும் என்று எண்ணியவள் கையில் இருந்த கைபேசியில் விசாலம் பாட்டியை அழைத்து அந்த திருமணத்திற்க்கான தன்னுடைய சம்மதத்தை சொல்ல, அவரும் சிறு குழந்தை போல மகிழ்ச்சியில் துள்ள, ஒரு புன்னகையுடன் அவருடன் பேசிவிட்டு இணைப்பை துண்டித்தவளுக்கு அப்போது தான் நேற்று அசோக் அழைத்தது நினைவிற்கு வந்தது.