கோவப்படுவா" என தமிழ் புன்னகைக்க, இன்னும் ஒரு முறை அவளை உச்சி முகர்ந்தவர் இலக்கியா இருந்த அறைக்கு சென்றார்.
கல்யாண சடங்குகளில் ஓய்ந்து போயிருந்தவள் அந்த அறையில் இருந்த மெத்தையில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.
"இலக்கியா...." என மெல்ல அவளின் தலைமுடியை ஆதரவாக கோதினார் கலைவாணி.
"அம்மா" என கண்களை திறந்தவளிடம் "அம்மா கிளம்பறேன் டா. பத்திரமா இருக்கனும்டா. இங்க இருக்கற யார் மேலயும் கோவப்படாம பொறுமையா பேசு. இந்த நேரத்துல அதிகமா டென்சன் ஆகாம இருக்கணும். உனக்கு ஏதாவது வேணும்னா பாட்டிகிட்டயோ மாப்பிளை கிட்டயோ கேளு. அப்படி ஏதாவது சங்கோஜமா இருந்தா தமிழ் கிட்ட கேளு. அவ இருக்கறதால தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.அம்மா இருந்து பார்த்துக்கறதை விட உன்னை நல்லா பார்த்துக்குவா, அப்பறம் தமிழ் கிட்ட..." கலைவாணி பேசி கொண்டிருக்கையிலேயே இடையிட்ட இலக்கியா "ஏன்ம்மா நீ என்னை பத்தி பேச வந்தியா இல்லை அவளை பத்தி பேச வந்தியா??? சே கல்யாணம் ஆனாலாவது இவ முகத்தை பார்க்காம இருக்கலாம்னு பார்த்தா இங்கயும் என் பின்னாடியே வந்துட்டா. இந்த பாட்டி வேற எதை சொன்னாலும் செல்விகிட்ட கேளு செல்விகிட்ட பேசுனு அவ புராணமே பாடுது. வந்ததும் வராததுமா அவ தான் வீட்டு மூத்த மருமகனு அவளை முதல்ல விளக்கேத்த சொல்லுது. நீ வேணா பாரு...அவளை இன்னும் ஆறே மாசத்துல இந்த வீட்டை விட்டு ஓட விடறேனா இல்லையானு " இலக்கியா கோபத்தில் பல்லை கடிக்க, "இலக்கியா...."என்ற கலைவாணியின் அதட்டலில் வாயை மூடியவளை பார்த்தவர் "மத்தவங்களுக்கு கெடுதல் நெனைச்சா நமக்கு தான் ரெண்டு மடங்கா திரும்ப வரும். தயவு செஞ்சு இப்படி பேசாத. அவ வாழ்க்கையை கெடுக்க நினைக்காம நீ உன் வாழ்க்கையை சந்தோசமா வாழ ட்ரை பண்ணு" என்றவர் அங்கிருந்து வெளியேறினார்.
"கலைவாணி ரெண்டு நாள் இருந்துட்டு போக சொன்னா கேக்காம இப்போவே கெளம்பரயே" விசாலம் சொல்லவும் "இல்லைம்மா. நாளைக்கு மறுவீடு வரப்போறாங்க. அதுக்கான ஏற்பாடெல்லாம் செய்யணும். என் மருமகனுகளுக்கு என் கையாள சமைச்சு போடணும். நம்ம வீடு தான...நெனைச்சா வந்து பார்த்துட்டு போகப்போறேன். எல்லாத்துக்கும் மேல அவங்களுக்கு நீங்க இருக்கீங்க. அப்பறம் எனக்கென்ன கவலை" கலைவாணி கண்கள் கலங்க நின்றிருந்த தமிழையும் இலக்கியாவையும் உச்சி முகர்ந்துவிட்டு கிளம்பினார்.
வாசலை விட்டு அவர்கள் செல்லும் கார் மறையும் வரை வெளியேவே நின்றிருந்த தமிழின் தோளில் ஆதரவாக கைவைத்தார் விசாலம். அவரை பார்த்து அவள் மெல்ல புன்னகைக்க அவளையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றார்.