பேசி கொண்டே இருந்தவள் யாரோ வந்து அழைக்கவும் அங்கிருந்து எழுந்து செல்ல, நண்பர்களிடம் சிலநிமிடங்களில் வருவதாக சொல்லிவிட்டு வெளியே வந்தான் ராம். வெளியே வந்தவன் பார்வையை நாலாபுறமும் சுழல விட்டான்.
"மின்னல் மோஹினி மாதிரி டக்கு டக்குனு காணாம போயிடறாளே" என்ற யோசனையுடன் அவன் தேட, தூரத்தே தெரிந்த மஞ்சள் வர்ண சுடிதாரை கண்டு கொண்டவன் வேகமாக ஓடினான்.
"இவளுக்கு நடக்கவே தெரியாதா??" என்றபடி குதித்து ஓடிக்கொண்டிருந்தவளை பின் தொடர்ந்து அவனும் ஓட, அவள் சென்ற இடம் அந்த கல்லூரியின் கேண்டின்.
அங்கே ஏற்கனவே ராமிற்கு முதுகை காட்டியபடி ஒருவன் அமர்ந்திருக்க, அவனுக்கு எதிரே சென்று அமர்ந்தவள் தன்னுடைய பார்வையில் இருந்து விலகிடாத வண்ணம் இன்னொரு இருக்கையில் அமர்ந்து பார்த்தான் ராம்.
அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் புன்னகைத்தாள். அவள் பேசும்போது அவளின் கண்களும் சேர்ந்து பேசியது, அவளுடைய விரல்கள் அபிநயம் பிடித்தது. எத்தனை நேரம் அப்படியே இருந்தானோ அவனுடைய செல்பேசி அழைக்க, அதை எடுத்து காதில் வைத்தான் ராம்.
"டேய் ரெண்டு நிமிஷத்துல வரேன்னு சொல்லிட்டு போன, ரெண்டு மணி நேரமாச்சு. எங்கடா போன. சாப்டுட்டு ஹாஸ்டல் ரூம்க்கு போகணும். இங்க ஹாஸ்டல் ரூம் எல்லாம் பயங்கர ஸ்ட்ரிக்ட்னு சொன்னாங்க. கரெக்ட் டைம்க்கு உள்ள போகலைனா அப்பறம் வெளிய தான் ரூம் தேடணும்" அவனின் நண்பர்கள் அங்கிருந்து கத்த "கத்தாதிங்கடா. நேரா கேண்டின் வந்துருங்க நானும் வந்தரென்" என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு திரும்ப அவளை காணவில்லை.
"சே, மறுபடியும் மிஸ் பண்ணிட்டேன்" கையால் அங்கிருந்த டேபிளை குத்தியவன் எழுந்து வெளியே வர அவனின் நண்பர்கள் வரவும் அதற்க்கு மேல் அவளை தேட முடியவில்லை அவனால்.
அறைக்கு வந்து படுத்த ராமிற்கு உறக்கம் பிடிக்கவில்லை. கண் இமைகளுக்கு நடுவே நின்று கொண்டிருந்தாள் அவள்.
"தமிழ்....தமிழ்..." மெல்ல அவளின் பெயரை உச்சரித்தான். முகத்தில் புன்னகை படர்ந்தது.
"என்னடா தமிழ் தமிழ்னு சொல்லிட்டு இருக்க?" அருகே இருந்த ஒருவன் கேட்க,"ஹான் இ...இல்லை ஒண்ணுமில்லை. நாளைக்கு நான் தமிழ் சாங் தான் பாட போறேன். அதை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்" என்றவன் அந்த புறமாக திரும்பி படுத்து கொண்டான்.
விடிய விடிய நண்பர்களிடம் கதை பேசுபவனுக்கு இன்று எனோ எல்லாமே தொல்லையாக தெரிந்தது.மனம் தனிமையை தேடியது. இது என்ன மாதிரியான உணர்வு??? முதல் முதலாக இப்படி ஒரு இனிமையான துன்பம்....அதை முழுதும் அனுபவிக்க தனிமை வேண்டும் போல இருந்தது. அவளின் அந்த சிரிப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என தோன்றியது.