சொல்லவும், "பரவால்லை. அதோ அவரு கீழே விழுந்துட்டாரு பாரு. ஹெல்ப் பண்ணு" தமிழ், இவனை காண்பித்து அந்த இன்னொருவரிடம் சொல்ல, இதெல்லாமே ராம்க்கு ஸ்லோ மோஷனில் நடப்பது போல இருந்தது.
கையை பிடித்து அவனை தூக்கி விட்டவன் ராம்முடைய சைக்கிளை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு தங்களின் சைக்கிளை நேராக நிறுத்தி அதில் ஏற, அவள் அதன் பின்னால் தோன்றிக்கொள்ள, அந்த சைக்கிள் அவனை தாண்டி செல்லவும் தான் அவனுக்கு உணர்வு திரும்ப வந்தது. அவள் சென்ற திசையை நோக்கி அவசரமாக திரும்பியவனுக்கு அவர்கள் கண்ணில் படவே இல்லை.
அன்று முழுதும் அவன் எந்த வேலையை செய்தாலும் அவள் முகமே அவன் கண் முன்னால் வந்தது. அவளின் அகன்ற விழிகள், அவளின் சிவந்த உதடுகள், அவள் காதில் ஆடிய ஜிமிக்கி, அவளின் குரலில் இருந்த இனிமை, அவள் சிரிக்கும் போது கன்னத்தில் விழுந்த சிறு குழி என அவளை அங்குல அங்குலமாக மனதில் பதித்து கொண்டான், இல்லை இல்லை அவனை கேட்காமல் அவன் மனம் இதை எல்லாம் பொக்கிஷமாக பூட்டி வைத்து கொண்டது.
கண்டதும் காதல் வருமா என்ன என அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அன்று மாலை வரை அவன் செல்லும் இடங்களில் எல்லாம் அவளை தேடினான். ஆனால் அவளை பார்க்கவே முடியவில்லை. மனதிற்குள் ஒரு ஏமாற்றம் பரவியது.
"என்னடா ராம், ஏன் டல்லா இருக்க? சாரிடா எல்லாத்தையும் உன்னை தனியா பாக்க விட்டுட்டு நாங்க போயிட்டோம்" என நண்பர்கள் வருந்த, அவர்களை சமாதானப்படுத்திவிட்டு ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தான்.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் அந்த போட்டியில் இவர்கள் கல்லூரியில் இருந்து நடனம் பாடல் என பலப்பிரிவுகளில் கலந்து கொண்டிருந்தனர். ராம் பாடல் பிரிவில் இருந்தான். இவனது போட்டி நாளை தான் என்பதால் அவர்கள் அனைவரும் ஆடிடோரோயத்தில் ஒரு பகுதியில் தங்களுக்கான இருக்கைகளை பிடித்து கொண்டு அமர்ந்தனர். பல கல்லூரி மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இவர்கள் எல்லோரும் பாதி கவனத்தை மேடையில் வைத்து கொண்டு பாதி கவனத்தை அரட்டை அடிப்பதில் வைத்து கொண்டு இருந்தனர்.
நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவன் காதில் மீண்டும் அதே குரல் கேட்க, அவனையும் அறியாமல் அனிச்சையாக அவன் பார்வை குரல் வந்த திசையை நோக்கி திரும்ப, இந்த முறை மஞ்சள் வர்ண சூரிய காந்தியாக ஜொலித்தபடி அவன் இருந்த அதே வரிசையில் சில இருக்கைகளை தாண்டி அமர்ந்திருந்தாள் தமிழ்செல்வி. அவள் தலையை ஆட்டி பேச, அவளின் ஆடைக்கு பொருத்தமாக அவள் அணிந்திருந்த மஞ்சள் நிற சூரிய காந்தி கம்மல் அவளின் தாளத்திற்கு ஆட, அவனையும் அறியாமல் அவனுடைய கை அதை தன்னுடைய செல்பேசியில் பதித்தது.