"நான் இவனோட அப்பா, இது அவனோட அம்மா, இது அவன் பிரென்ட் ஜமால்." என அங்கிருந்த அனைவரையுமே அவனுக்கு அறிமுகப் படுத்தினார் அந்த பெரியவர்.
தேன், முன்பே தன் நினைவில் பதிந்திருந்த அந்த முதியவர்களின் படத்தினை முன் கொண்டு வந்து இருவரையும் கூர்மையான தன் பார்வையால் எடைப் போட்டான்!
இருவருமே சோர்ந்துப் போயிருந்தார்கள், ஆனால் துக்கம்?
மனதில் ஓடிய யோசனையை வெளியே காட்டிக் கொள்ளாமல், "உங்க மகன் நிலைமை புரியுது. ஆனால் நாங்க எங்க கடமையையும் செய்யனும் சார். விசாரணை நடத்தினால் தான் உங்க மருமகளை இப்படி கொடூரமா கொலை செய்தது யாருன்னு கண்டுபிடிக்க முடியும்." என்றான் தென்றல்வாணன் அமைதியாக.
"அவனுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க, இன்ஸ்பெக்டர்!" என்று ரமணி சொல்லிக் கொண்டிருக்கும் போது, முத்துக்குமார் பேச்சில் குறுக்கிட்டான்.
"வேண்டாம்ப்பா, இன்ஸ்பெக்டர் சொல்றது சரி. என் இந்துவை என் கிட்ட இருந்து பிரிச்சவனை பிடிச்சு தண்டனை கொடுத்தே ஆகனும். நீங்க கேளுங்க இன்ஸ்பெக்டர்! எனக்கு தெரிஞ்ச எல்லா விபரத்தையும் ஏற்கனவே சப் இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லிட்டேன். வேற என்ன தெரியனும்னாலும் கேளுங்க," என்றான் முத்துக்குமார்!
முத்துக்குமாரின் பேச்சில் உண்மையான கோபம் தெரிகிறதோ?
"வாங்க, அந்த பக்கம் போய் பேசுவோம்!" என அவனை தனியாக அழைத்தான் தேன்.
முத்துக்குமார் மறுக்காமல் உடன் வந்தான்.
தென்றல்வாணன் உடனே கேள்விகளை கேட்காமல் முத்துக்குமாரை தன் கூர்மையான கண்களால் எடைப் போட்டான். நுனி முதல் அடிவரை தன் ஸ்கான் செய்யும் கண்களால் துளாவினான்.