“ மித்ரா உன்னோட ப்ரண்டாச்சே..அதான் பதட்டமாய் இருக்க.. இப்படி நினைச்சு பார், உன்னை பெரியம்மான்னு கூப்பிட ரெண்டு குட்டீஸ் வந்துட்டே இருக்காங்க..நாம அவங்களை வெல்கம் பண்ண போகிறோம்..சோ நாம ரொம்ப சந்தோஷமாய் இருக்கனும்டா” என்றான் மதியழகன்.வழக்கம் போலவே அவள் மனம் சங்கடப்படும்போதெல்லாம் அதை எப்படி சீர் செய்வது என்ற கலை அறிந்தவனாய் அவளுக்கு தைரியம் சொன்னான் மதியழகன். அவனின் நம்பிக்கையான வார்த்தைகள் அவளுக்கு அப்போது தேவையாய் இருக்க, மதியழகனின் தோளில் சாய்ந்து கொண்டாள் நிலா.
மித்ராவின் முகத்தையே அடிக்கடி பார்த்துகொண்டு காரை ஓட்டினான் ஷக்தி. ஏதோ ஒன்று சரியில்லாதது போல இருந்தது அவனுக்கு.மித்ராவின் முகத்தை கூர்ந்து பார்த்தவன் அப்போதுதான் அதை கவனித்தான்..கண்ணீரை அடக்கி கொண்டு உதடு கடித்தபடி இருந்தாள் அவள். சில நொடிகளில் அவள் அப்படி இருப்பதன் காரணம் புரிந்ததுஅவனுக்கு. மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டான் ஷக்தி.
“ அடியேய்.. அழனும் போல இருந்தா, அழ வேண்டியதுதானே” என்று அவன் கேட்கவும்,
“ உனக்குத்தான் நான் அழுதால் பிடிக்காதே மாமா” என்று பவ்யமாய் கூறினாள் மித்ரா.
“ அடிப்பாவி, சொன்ன வார்த்தையை கடைப்பிடிக்கிற நேரமா இது?” என்று கேட்டவனின் விழிகள் சிரிக்க, அதையே அனுமதியாய் எண்ணிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் மித்ரா. ஷக்தியின் இடது கரம் அவளின் கரங்களுக்குள் தான் இருந்தது..காரை ஓட்டிகொண்டே அவளின் மேடிட்ட வயிற்றை வருடியப்படி பேசினான்..
“ ஒன்னும் இல்ல..ஒன்னும் இல்ல..”
“ இதோ வந்துட்டோம்”
“இதோ கொஞ்ச நேரம் தான்” என்று குழந்தைக்கு சொல்வது போல தன் மூன்று குழந்தைகளுக்குமே சொல்லிகொண்டு இருந்தான்.. அவ்வப்போது, வியர்வையில் நனைந்திருந்தவளின் கூந்தலைஒதுக்கி, வியர்வையை துடைத்து விட்டான் அவன். அதற்குள் ஹாஸ்ப்பிட்டலை அடைந்த நிலா, அங்கு அனைத்தையும் தயார்படுத்திவிட்டு, அவனுக்காக காத்திருந்தாள். ஷக்தி அங்கு வந்ததுமே மித்ராவை அவர்கள் உள்ளே அழைத்துச் செல்ல, ஷக்தியின் கைகளை விடாமல் பற்றி அவனை அருகில் இழுத்தாள் மித்ரா.
“ என்னடீ?”
“ மாமா எனக்கு… எனக்கு” என்று அவள் சொல்லும் முன்பே அவளின் வார்த்தைகளை யூகித்து இருந்தான் அவன்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்...
“ உனக்கு ஒன்னும் ஆகாது..நீ, நம்ம குழந்தைங்க யாருக்குமே எதுவும் ஆகாது.. ஐ லவ் யூ” என்றவன் அவள் நெற்றியில் மிகவும் அழுத்தமாய் முத்தமொன்றை பதித்தான். மித்ரா மறுத்தும் கேட்காமல், அவனும் அவளுடன் பிரசவ அறையில் துணையாய் இருந்தான். எப்போதுமே கெஞ்சி கேட்டும் கூட, “ஐ லவ் யூ” என்று சொல்லாமல் போக்கு காட்டும் அவன், அவள் கேட்காமலேயே நொடிக்கொரு முறை தனது காதலை வார்த்தைகளால் சொல்லி கொண்டே இருந்தான். உயிரே போகும் வலியில்,தன்னை சுற்றி நிலா, இன்னும் இரு புதியவர்கள் இருந்தும் மித்ராவின் பார்வை ஷக்தியின் மீதுதான் இருந்தது..
அவன் முகத்தை மட்டும் தான் பார்த்தாள்..!
அவன் குரல் மட்டுமே காதில் கேட்டது..!
அவன் சொல்வதை மட்டுமே செய்தாள்..!
உயிர் பிரிந்தாலும், அது அவனின் முகத்தை பார்த்துகொண்டே போய்விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அதே வேளை அந்த அறையின் வெளியே இருந்த மதியழகன், கதிரிடம் ஃபோனில் தகவலை கூறினான். கதிரிடம் இருந்து செய்தியை அறிந்து கொண்ட அன்பெழிலன் உடனே கலவரமானான்.இன்னைக்குன்னு பார்த்தா நான் ஊருக்கு வந்திருக்க வேண்டும்? என்று தன்னையே கடிந்து கொண்டவன், அந்த நள்ளிரவிலேயே காரை கிளப்பி கொண்டு வந்து கொண்டிருந்தான்.
இதில், “செல்லம்ஸ் மாமா வந்துட்டே இருக்கேன்” என்று வசனம் பேசிக்கொண்டான் அவன்.
மொத்த குடும்பமும் ஹாஸ்ப்பிட்டலில் வந்து சேரும் முன்னரே ஷக்தியின் சங்கமித்ரா, அழகான ஆண் குழந்தைக்கும், எழில்மிகு பெண் குழந்தைக்கும் தாயாகி இருந்தாள். குழந்தைகளின் முகத்தை காண்பதற்கு முன்னரே தனது முதல் குழந்தையான அவளின் நெற்றியில் முத்தமிட்டிருந்த ஷக்தியின் விழிகளில் ஆனந்த கண்ணீர்.!
மூன்று நாட்களுக்கு பின்,கணவன் குழந்தைகளுடன் வீடு திரும்பி இருந்தாள் சங்கமித்ரா.. ஆதிஷ்வரும் வைஷ்ணவியோடு வீட்டிற்கு வந்திருந்தான். நிலா, மதி, கதிர், காவியா, எழில் ,முகில்மதி என ஆள் மாற்றி ஆள் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடி கொண்டிருந்த அழகை ஷக்தியும் மித்ராவும் மௌனமாய் ரசித்து கொண்டிருந்தனர். இருவருக்கும் தனிமையே கிட்டவில்லை எனினும், அவ்வப்போது பரிமாறி கொண்ட பார்வைகளே போதுமானதாய் இருந்தது. அவ்வப்போது,தன் குழந்தைகள் இருவரையுமே ஷக்தி பார்வையால் வருடும் அழகினை விழிகளுக்குள் சிறைப்பிடித்தாள் மித்ரா. எத்தனை வருட கனவு இது அவளுக்கு என்பது அவள் மட்டுமே அறிவாள். ஷக்திக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று அறிந்தவள், அவனை மணக்கும் முன்னரே கற்பனை குதிரை வேகமாய் செலுத்தி இந்த காட்சிகளை எல்லாம் நினைத்து வைத்திருந்தாள்.