தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 10 - சாகம்பரி குமார்
அதிரதன் சொன்னபடி வினய் தன்னுடைய வேலையை தொடங்கியபோது அது பெரிய விசயமில்லை என்று தோன்றியது. ஒருவிதத்தில் தோல்வியுற்ற ஆராய்ச்சிகளை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதான். அதே தவறை மீண்டும் செய்யாமல் இருக்கலாம்.
தவறு என்பது இங்கே தோல்வி மட்டுமல்ல கால விரையம், நேரவிரையம், பொருள் விரையம் –அதுவும் பல லட்சம் மதிப்பில் இருக்கலாம், அத்துடன் பல திறமையாளர்களின் உழைப்பும் விரையம். சரி, ஒரு தோல்வியடைந்த ரிசர்ச் ஒன்றுக்கும் உதவாதா என்றால், அப்படியல்ல… சில சமயம் புதிய கண்டுபிடிப்புகளை தரும்… சில சமயம் தோல்வியிலிருந்து நிறைய பாடங்கள் கிடைக்கும்.
பிரச்சினை என்னவென்றால், ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் அன்றைய தேவைகள்… புதிய தியரிகள்… ஆகியவற்றை புதிய ஆராய்ச்சிகளின் அடிப்படையாக கொள்கிறார்கள். அவர்கள் வெற்றிபெற்ற ஆராய்ச்சிகளையே கவனத்தில் கொள்கிறார்கள். தோல்வியடைந்த ஆராய்ச்சிகளை கவனப்படுத்துவதில்லை.
வினய்க்கு அதிரதனின் தேவை புரிந்தது. எனவே அந்த மையத்தில் நடந்திருந்த பழைய ஆராய்ச்சிகளை படித்து பல தகவல்களை சேகரித்தான். அவன் பார்த்தவரையில் கடந்த பதினைந்து வருடங்களில் அங்கு நடைபெற்றிருந்த ஆராய்ச்சிகள் தெளிவாக பதியப்பட்டிருந்தன. வெற்றியடைந்த ரிப்போர்ட்டும் சரி தோல்வியடைந்த ரிப்போர்ட்டும் சரி.. தெளிவாக அனலைஸ் செய்து முடிவுகள் பதியபட்டிருந்தன. ஒரே ஒரு ஆராய்ச்சியை தவிர….
அந்த ரிப்போர்ட் முடிவுகளை பதியவில்லை. ‘ஆன் கோயிங்’ எனப்படும் ஸ்டேட்டஸிலேயே இருந்தது. ‘ஆன் கோயிங்’ என்றால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதுவோ பதினைந்து வருடங்களுக்கு முந்தைய ரிசர்ச்… இப்போதும் தொடர வாய்ப்பில்லை!
அதுபற்றிய விவரங்களை தேடினான். அதனுடைய பொறுப்பு விஞ்ஞானி ஹெச் சர்மா… அவருடைய தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அந்த ஆராய்ச்சியை செய்து வந்தது. சர்மாவை பொறுத்தவரை அவர் ஒரு தலை சிறந்த மரபணுவியல் ஆய்வாளர். அப்போதே அவருக்கு அறுபது வயதிருக்கும். வினய் போன்ற கற்றுகுட்டி விஞ்ஞானிகள் துருவ நட்சத்திரம்போல அவரைதான் கொண்டாடுவார்கள். ஹெச் சர்மாவின் மாணவன் என்று சொல்லிக் கொள்ளவே இப்போது இருக்கும் நிறைய விஞ்ஞானிகள் பெருமைபட்டுக் கொள்வார்கள். இப்போது அவர் உயிருடன் இல்லை என்றாலும் வினய்க்கும் அவர் ஒரு ஆச்சரியமான கனவுதான்!
அப்போது அந்த மையத்தின் தலைவராக அவர்தான் இருந்தார். இன்னும் அவருக்கு கீழே பணியாற்றியவர்களும் சிறந்த ஆராய்ச்சியாளர்கள்தான்… அதில் ஒருவர் யூஎஸ்ஸிருந்து