இது வேற நடந்துச்சா? அவனுக்கு நினைவே இல்லை!
“அதவிடுங்க, இன்னைக்கு காலையில ஆத்துல குளிச்சிட்டு ஈர உடையோட நான் வந்தபோது எப்படி நடந்துகிட்டீங்க?”
‘என்னம்மா செஞ்சேன்?’
“கொஞ்சம்கூட பார்வையில மாற்றம் இல்லை. தப்பான நோக்கம் இல்லை. இயல்பாக என்னிடம் பேசிட்டு நீங்க குளிக்க போனீங்க. ”
வேற என்ன செய்திருக்கணும்? ரொமாண்டிக்கா ஏதாவது செய்திருக்கணும்னு சொல்கிறாளா?. ஒருவேளை அப்பாகூட இதுபோன்ற சந்தர்ப்பங்கள் வரும் என்று நினைத்துதான் இந்த தனிமை வாழ்க்கைக்கு அனுபி வைத்தாரா? ஆனால் அதிதியை நெருங்குவதைவிட அவளுடைய மனதில் இடம் பிடிப்பது அல்லவா முக்கியம்? ஆனால், அது சரியில்லையோ… க்ரைம் லிஸ்ட்போல ஒன் பை ஒன்னா அடுக்குகிறாளே…
ஓகே ரதன்… இனிமே வர்ற சான்ஸை விடாதே…. அவன் நினைக்கும்போதே…
“மொத்தத்துல சொல்லப் போனால் நாம எதுக்காக இங்கே வந்திருக்கோம்ங்கறதுல நீங்க உறுதியா இருக்கீங்க”
இப்ப என்ன சொல்ல வருகிறாள்? அவனை நல்லவன்னு சொல்கிறாளா? இல்லை, உருப்படாதவன்னு சொல்கிறாளா? ம்… அவள் சொல்லும் சம்பவங்களை பார்த்தால் அவன் ஒரு ‘மொக்க ஹீரோ’ன்னு ஆயிடும்போலயே! வாட் டு டூ?
“அது வந்து…”
“எனக்கு உங்கமேல மரியாதை அதிகமாயிடுச்சு!. ஒவ்வொரு நொடியிலும் உங்கள்மீது நம்பிக்கை வர்ற மாதிரி நடந்துக்கறீங்க ரதன்”
அப்படி போடு! இப்ப க்ளியராயிடுச்சு! அவனுக்கு பாஸிட்டிவ் நோட்ஸ்தான் தந்திருக்கிறாள்!
“நீங்க ரொம்ப நல்லவர். நேர்மையாக இருக்கீங்க. ஒழுக்கமாக இருக்கீங்க… பொறுப்பாககூட இருக்கீங்க. உங்களுடைய தகுதிக்கு என்னையெல்லாம் மதிக்கவே தேவையில்லை. ஆனால் சினேகிதமாக பழகுறீங்க. உங்களுக்கு தங்கமான குணம்… நல்ல நண்பருடன் இருப்பதுபோல உள்ளது.”
“----?”
“உங்களை மாதிரி ஒருத்தருக்கு என்னை மாதிரி மனைவி வேண்டாம் ரதன். ஒரு நல்ல மனைவியாக என்னால் இருக்க முடியாது. உங்களுடைய வாழ்க்கையை பாழாக்கவும் முடியாது. நாம் டைவர்ஸ் பண்ணிப்போம்.”