எடுத்துட்டு போகலாம்” அவன் ஒப்புக் கொண்டான்.
அவர்கள் இருவரும் காட்டின் உட்பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அப்போது ஒரு வாகனம் வரும் சப்தம் கேட்டது. இங்கே யார் வருகிறார்கள்?
“யாரோ வருகிறார்கள்?” என்று சொல்லியபடி அதிதி திரும்பினாள். அது ஒரு ஜீப்… காட்டிலாக்காவை சேர்ந்ததுபோல…
“யாராவது ரேஞ்சராக இருக்குமோ?” அதிரதன் யோசிக்கும்போதே அந்த ஜீப்பிலிருந்து ஒருவர் இறங்கினார்.
“நீங்கதானே ரதன்…”
“யெஸ் சார்”
“நான் இந்த ஏரியாவின் வனசரகர்… இந்த காட்டில் தங்குவதற்கு உங்களுக்கு ஐந்து நாட்கள் அனுமதி தந்திருந்தோம். ஆனால் நீங்கள் இப்போதே காட்டை விட்டு கிளம்ப வேண்டும்.”
“ஏன் சார்?”
“காட்டின் ஒரு பகுதியில் தீப்பற்றிக் கொண்டது. அதை அணைக்க முயற்சி செய்து வருகிறோம். இங்கிருப்பது உங்களுக்கு ஆபத்தாக மாறலாம். அதனால் உடனடியாக இங்கிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். உங்களை காட்டின் எல்லையில் கொண்டு விட்டு விடுகிறோம்” என்றார்.
“ரதன் இப்படி நாம் திரும்பிப் போவது கோர்ட் ஆர்டரை அவமதிப்பது போல ஆகாதா?” அவனிடம் கிசுகிசுத்தாள். அதாவது டைவர்ஸ் கிடைக்காதாம். அவளுடைய கவலை அவளுக்கு!
“நாம் இப்போ திரும்பி போகலேன்னா நேராக பரலோகத்திற்கு போய்தான் கேஸை நடத்த வேண்டும். அதுவும் க்ரில்ட் சிக்கன் போல இருப்போம். பரவாயில்லையா?”
“பேசிக் கொண்டு நிற்க நேரமில்லை. சீக்கிரம் ஜீப்பில் ஏறுங்கள்” அவர் சொல்ல இருவரும் ஏறினார்கள்.
ஒரு அவசரத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் அந்த ஜீப்பில் ஏறினார்கள். அது காட்டு பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.
வெளியே வேடிக்கை பார்த்து வந்தவனுக்கு சட்டென ஒன்று உரைத்தது.
அவனை ஏன் அந்த அதிகாரி 'ரதன்' என்று அழைத்தார். அது அவனுடைய பெட் நேம் அல்லவா? அஃபிஷியலாக அவனை அதிரதன் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்...
திரும்பி அதிதியை பார்த்தால்.. அவள் குழப்பமாக இருப்பது தெரிந்தது. அவனை பார்த்த பார்வையில் கேள்வியும் இருந்தது.
சம்திங் ராங்!
அந்த வனப்பகுதியில் என்ன நடக்கிறது…? கொள்ளையர் தொல்லை இருக்கிறதா?
தொடரும்